வியாழன், 5 ஆகஸ்ட், 2021

 சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகளுக்கு 52 வது நாண் மங்கல விழா நாள் கவிதை



குரு நெறியாம் கௌமாரம் உண்மை

திரு நெறிய செந்தமிழால் தோய்ந்து 

உரு செய்து பல்பூசை செய்விக்கும் 

குருநாதன் குமரகுருபரன் காப்பு!


ஓலைச்சுவடி செப்ப உணர்ந்த உண்மை

காலை வேலை அன்று வந்தேன்

வேலை வணங்கும் கோலம் கண்டு 

மாலை முழுதும் மகிழ்ந்தேன்!


அடியேன் பூர்வ ஜென்மம் கௌமாரம்

நொடியில் சொன்ன சுவடி மர்மம்

தேடி வந்தேன் திருப்பம் பெற்றேன்

நாடி சொன்னது உண்மை!


ஐப்பசி திங்கள் சஷ்டி விழா சுகமாய் 

எப்பவும் கூட்டம் கூட்டம் மெய்யாய்

மெய்ப்பசியோடு அடியேன் தீட்சை பெற

உய்யும் நாளாய் சிறந்து!


குருவைத் தேடி அலைய ஓய்ந்தேன்

திரு உருவாக தோன்றி குருவாய்

உருவம் சூரியன் சந்திர பிரகாசம் 

குருவே சரணம் என்று


நான்காம் சந்நிதானம் சிறப்பாய் ஆட்சி

நாண்மங்கல நாள் விழா பூண்டு

என்றும் இப்படியே இருந்து சிறக்க

ஒன்றிப் பணிந்தேன் குருபாதம்!


ஒருமுறை சுவாமிகள் வலக்கை பெருவிரல் 

குருவே சரணம் என்று பார்த்தேன்

உருவாய் தெரிந்தது மலேசியா முருகன்

திருவே இவர்தான் உணர்ந்தேன்


கொல்லாமை  புலால் மறுத்தல் நம்நெறி 

சொல்லியும் கேட்கவில்லை மக்கள் என 

சொல்லி அடித்தாற் போல் வந்த குறுஞ்செய்தி

எல்லோரும் ஏற்றனர் அன்று


காவி உடை அணிந்து கழுத்தில் மாலை

ஆவிதனை அப்படியே ஆட்டுவிக்கும் மந்திர 

சாவியின் ரகசியத்தை என்னவென்பேன்

பாவிகளும் பரிசுத்தம் ஆவர்


பட்டி தொட்டி எல்லா இடமும் சென்று 

ஆட்சி செய்யும் எம் குருநாதன் புகழை

ஏட்டில் வடிக்க எவ்வார்த்தையுமில்லை

கூட்டி வைத்தது இறையே!


அன்பு மொழி இன்முகம் அளந்து பேசுதல்

அன்றாடம் பல ஆன்மீகச் செயல்கள்

சென்றவிடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு

வென்று விடும் எம் குருவருள்!


ஐ.நா சபை வரை சென்று ஆட்சிபுரிந்து 

ஐயம் பல தீர்க்கும் எம் குருநாதன்

ஐயமில்லை ஜெயமே என்றும் பெற்றதும்

ஐயன் வேலன் அருளே!


குருவிற்கு அவதார நாள் விழா

திருவருள் காட்டும் குருவருள் வாழ்க

பெருவாழ்வு வாழ வாழ்த்த வயதில்லை

குருவே சரணம் புகுந்து!


நாளும் தினமும் புகழும் பூசைகள்

நாளும் தினமும் கல்விப் பணிகள்

நாளும் தினமும் சமயப் பணிகள்

நாளும் தினமும் சிறப்பே!


குருமுகம் சூர்யப் பிரகாசம் மெய்

குருமுகம் சந்திரக் குளிர்ச்சி மெய்

குருமுகம் பலவினை தீர்க்கும் மெய்

குருமுகம் காண விரைந்து!


அருணகிரியார் தண்டபாணி சுவாமிகள்

அருள்திரு ராமானந்தர், கந்தசாமி சுவாமிகள்

அருள்திரு கஜபூஜை சுந்தரர் என வழிவழி

அருள் வடிவே எம்குரு!


தம் குரு கஜபூஜை சுவாமிகள் நினைவாய்

எம் குரு குமரகுருபர சுவாமிகள் செய்த 

நம் கௌமார மடாலய திருப்பணி குடமுழுக்கு

நம் நெஞ்சில் சிலிர்த்து!


வீட்டில் முடங்கி இருக்கும் காலமும்

ஏட்டில் பதிக்கும் வண்ணமயமாய்

நாட்டில் மக்கள் அனைவருக்கும் சிறப்பாய்

காட்சி கொடுத்து பேசியவர் எம் குரு!


வாழி வாழி எம் குரு வாழி என்றும்

வாழி சிரவை ஆதீனம் சிறப்பாய் வாழி

வாழி சீர்மிகு சிரவை ஆதீனம் என்றும்  

வாழி வாழி வாழியவே!!


கவிதையாக்கம்:

முருக செகதீசுவரன்,

ஞானஸ்கந்த கௌமார பீடம்,

அந்தியூர்.


வெள்ளி, 1 ஜனவரி, 2021


ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில் நடந்த கும்பாபிஷேக நிகழ்வுகள்




 நமது கௌமார பயணம் வலைதள வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நமது ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில்  எழுந்தருளி உள்ள ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி பெருமான் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சிவ ஸ்ரீ ஜெகதீஸ்வர ஈசான கண சிவம் அவர்களை ஆட்கொண்டு ஜீவநாடி மூலமும், அருள்வாக்கின் மூலமும் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில் ஆதிசங்கரர் தோற்றுவித்த அறுசமய வழிபாடுகளையும் தோற்றுவிக்குமாறு ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருளாணை வழங்கியிருக்கிறார். திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளும் சுவாமிகளின் கனவில் தோன்றி இங்கு எழுந்தருளி ஆசி தருவதாகவும் வாக்கு உரைத்திருக்கிறார். மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளும் இங்கு எழுந்தருளி ஆசி வழங்குவதாகவும் நமது சுவாமிகளுக்கு கனவில் உரைத்திருக்கிறார். ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் அருளாணையின் படி ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில்  ஸ்ரீ அவிநாசியப்பர், ஸ்ரீ கருணாம்பிகை தாயார், ஸ்ரீ நந்தீஸ்வரர், திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், ஆகிய அனைத்து விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சேலம் பெரிய புத்தூர் ஆதீனம் ஸ்ரீ ராஜலிங்க சிவாச்சாரியர் அவர்கள் தலைமையில் கார்த்திகை மாதம் 16 ம் தேதி (4/12/2020) அன்று காலை கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.

 




நன்றி: சிவ ஸ்ரீ ஜெகதீஸ்வர ஈசான கண சிவம் அவர்கள்,

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடம், அந்தியூர். 

தொகுப்பு:

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடம் பக்தை,

சம்பூர்ணம் முருகேசன் .

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்.  

144 வண்ணச் சரபம், தண்டபாணி சுவாமிகள் இயற்றிய புலமை இலக்கணம் முற்றிற்று 

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

நூற்பா144

அருள்நிலை முடித்தற்கு ஆரால் ஆகும்என்று

அஞ்சி இந்தமட்டு அடக்கிச் செயல்வகைக்

குறிப்பொடு புலமை இலக்கணம் கூறிக்

கருதிய பயனில் கருத்துஅமைந் ததுவே.

திருவருளின் செயலை இத்தன்மைத்து என அறுதியிட்டுக் கூறி முடித்தற்கு எளியேன் போன்ற யாரால் இயலும் என்னும் அச்சத்துடன் இப்பிரிவை இத்துடன் நிறுத்திக் கொள்வதுடன் செயல்வகை இயல்பு எனப் பெயர்பெற்ற இப்பெரும் பகுதியுடன் புலமை இலக்கணத்தை முடித்துக் கொண்டேன், என் பணி முடிந்தது. இதனைக் கற்பார் இதன்வழி ஒழுகிக் கருணை மிகப்பெற்று மாதவம் முயன்று உலகிற்கு நலம் பயப்பதாகிய அருஞ்செயல்களைப் புரிந்து, பின் பிறவியின் முழுப்பயனாகிய வீட்டின்பத்தையும் அடைதல் வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்குகிறது என்றவாறு.

கருதிய பயன் என்பது இந்நூலாசிரியர் கொள்கைகட்கேற்ப விரித்துரைக்கப்பட்டது. இந் நூற்பயன் இவராலேயே முன்னர் பொதுப் பாயிரத்தின் ஆறாங்கவியில் கூறப்பட்டது.,

 இந்நூற்பாவுடன் இப்பிரிவும், செயல்வகை இயல்பும், அறுவகை இலக்கண நூலும் நிறைவுபெறுகின்றன

வண்ணச் சரபம், தண்டபாணி சுவாமிகள் இயற்றிய புலமை இலக்கணம் முற்றும். எனது திருமண நாளான இன்று(1-9-1982) நிறைவுற்றது பெரும்பாக்கியம் என்றே கருதுகிறேன். 

நன்றி: பதிவு தொல்காப்பியர் அன்பர் அடிப்பொடி புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர்,  உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம்,  கோவை.


புதன், 2 செப்டம்பர், 2020

  சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது

140  வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

 143  சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது.

நூற்பா143

தாய்வயிற்று இருந்து தரணியிற் பிறந்த

உடன்சிலர் பாடிய வொள்ளிய தமிழும்

பாரொடு வானில் பரந்தது அன்றே.

(பகவன் ஆதி என்னும் கணவன் மனைவியருக்குப் பிறந்த அவ்வை, உப்பை, அதிகன், உறுவை, கபிலர், வள்ளி, வள்ளுவர் என்ற எழுவரும்) தம் தாயின் அகட்டிலிருந்து வெளியேறி உலகில் தோன்றிய உடனே பாடிய சில கவிகளும் உலகிலும் வானிலும் பரவி உள்ளன என்றவாறு.

இச்சமயத்தில் இவ்வெழுவர் பாடியனவாக ஏழு கவிகள் தனிப்பாடல்களாக வழங்குகின்றன. “அளப்பரும் பனுவல் அகண்டம் ஆய நாத சத்தியின் நனந்தலை கிடந்து பகர்வார் வரவு பார்க்கின்றன”1 எனும் தம் கொள்கைக்கேற்ப வானில் பரந்தது என்றார். இதுவும் சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது.


நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர்,  உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.





ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

 மாணிக்க வாசகர் புத்தபிக்குகளை வாதில் வெல்லல்

139 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

 142   மாணிக்க வாசகர் புத்தபிக்குகளை வாதில் வெல்லல்

நூற்பா142

வாதிடத் தேடி வரும்எழு மூவரும்

பேசும்நா இன்றிப் பிணம்போல் இருக்கக்

கண்டது அருள்எனக் கழறுதல் றையே.

இலங்கையில் இருந்து தில்லைக்கு வந்து அங்குள்ள சைவர்களை வாதத்தில் வென்று, திருக்கோயிலைத் தமதாக்கிக் கொள்ள விரும்பிய 21 புத்தபிக்குகளைத் தோற்கடித்து ஊமைகளாக்கிய மாணிக்கவாசகரின் வெற்றியையும் இறையருள் எனக் கொள்வதே சிறந்தது என்றவாறு.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர்,  உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

 திருவருள்  இருப்பின் எளிய புலவனும் சிறந்த கவியைப் படைப்பான்

136 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  


   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

 139 திருவருள்  இருப்பின் எளிய புலவனும் சிறந்த கவியைப் படைப்பான்

நூற்பா139 

சீறி இகழ்வார் தெருத்தலை வாயில்

தோறும் அலைவுறீஇச் சுழலும் பாவலன்

செக்குஒரு கவியால் செம்பொன் ஆகப்

பாடவும் செய்யும் பழுதுஇலா அருளே.

இப்பாடலில் கூறப்படும் வரலாறு என்ன என்று தெரியவில்லை. பொருள் ஈகைகுணம் சற்றும் இல்லாத இரவலரைச் சினம் கொண்டு துறத்தும் கஞ்சன் வீட்டு வாயிலில் அலைந்து கொண்டிருக்கும் புலவன் கூடச் செக்குமரம் பொன்னாக மாற்றும் கவியை இயற்றுவதும் ஈசன் அருளே.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர்,  உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.




புதன், 26 ஆகஸ்ட், 2020

கம்பர் சொல்லால் சோழர் குலம் அழிந்தது

 134 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  


   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

              137  கம்பர் சொல்லால் சோழர் குலம் அழிந்தது

  நூற்பா137   

             கவிதை ஒன்றால் கதிரவன் குலத்து

             மன்னவர் அனைவரும் மாண்டனர் அன்றே.

இதன்பொருள்: சோழனின் பொறிப்பெட்டிலிருந்து அம்பு பாய்ந்து இறக்கும் தருவாயிலிருந்த கம்பநாடன் பாடிய ‘வில்லம்பு சொல்லம்பு’ என்ற வெண்பாவால் சூரியன் மரபாகிய சோழ மன்னர் அனைவரும் மாய்ந்தனர் என்றவாறு.

விளக்கம்: இவ்வரலாறு முன் காட்டப்பட்டது. இதில் இடம்பெற்ற கவிதை “வில்லம்பு சொல்லம்பு மேதினியில் ரெண்டுண்டு; வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்-வில்லம்பு பட்டதடா என்மார்பில்; பார்வேந்தா நின்குலத்தைச் சுட்டதடா என்வாயிற் சொல்”1 என்னும் வெண்பாவாகும்

கம்பனுக்கு வாய்த்திருந்த தெய்வீக அருள் அச்சமயத்தில் அவன் உயிரைக் காக்காமல் கைவிட்டுவிட்டது; ஆனால் அதேசமயத்தில் அவன் இட்ட சாபம் நிசமாகியது, இதனால் திருவருளின் இயக்கம் எப்போது எப்படி இருக்குமென யாராலும் அறியமுடியாது என்பதை உணர்த்துவதே இந் நூற்பாவின் நோக்கம். இங்குக் கம்பன் பெற்றது முழுவெற்றி அன்று. 

 நன்றி: பதிவு புலவர்.ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.