செவ்வாய், 13 டிசம்பர், 2016

ஜீவ நாடியில் வந்த ஒரு அதிசயத் தகவல்


  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் முன்பு ஒரு பெண்மணி வந்து ஜீவ நாடி கேட்க அமர்ந்தார். எடுத்த எடுப்பிலேயே உன் வீட்டில் பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கும் தெய்வம் என்ன? என்று கேட்டார் முருகப்பெருமான். மிகவும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் குரல் தழு தழுத்தபடி எங்கள் மாமியார் கொடுத்த சீதனம் அந்த பெட்டி என்றார். சீதனமாகக் கொடுத்தது சரி அந்த பெட்டிக்குள் இருக்கும் தெய்வத்திற்கு உனது மாமியார் எப்படி பூஜை செய்திருப்பார் நீ இப்படியே பூட்டி வைத்தால் சாப்பாட்டிற்கே வழி இருக்காது என்றார் முருகப்பெருமான். அந்தப் பெண் கதறி அழுதுவிட்டார். ஆம் சுவாமி இப்போது சாப்பாட்டிற்கே வழியில்லை. அது அன்னபூரணி சிலை என்றார். அன்னபூரணியை அடைத்துவைத்தால் அன்னம் எப்படிக் கிடைக்கும் என்றார் முருகப்பெருமான். சரி அந்த தெய்வத்தை எடுத்து பூஜை செய்து வா உடனடியான திருப்பம் வரும் போ. என்று முடித்துக் கொண்டார் முருகப்பெருமான். அந்தப்பெண்ணிற்கு இன்னும் எதிர்காலம் எப்படி இருக்கும் என பலன்கள் வரவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் 100% வந்த வரைக்கும் மிகத் துல்லியமாக இருப்பதால் வீட்டிற்குச் சென்ற உடனேயே அந்த அன்னபூரணி சிலையைப் பெட்டிக்குள் இருந்து எடுத்து வெளியே வைத்து தூப தீப நைவேத்தியத்துடன் கற்பூர ஒளிகாட்டி போற்றி வழிபட்டார். அடுத்த நாளே நீண்ட காலமாகப் பிரிந்து சென்ற கணவனிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது. ஒரு வித வெறுப்புடன் பேசிவிட்டு போனை வைத்துவிட்டாலும் ஒரு வித மன நிம்மதி ஏற்படுவதை உணர்ந்தார். வீட்டில் ஒரு படி அரிசி கூட இல்லை. அவ்வளவு வறுமை. ஆனாலும் முருகனது வாக்கில் நம்பிக்கை இருந்தது. அதற்குக் காரணம் ஏற்கனவே நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு பல ஆண்டுகளாக வருகின்ற அடியவர் ஒருவர் ஜீவ நாடி மூலம் முருகன் நடத்தி வரும் திருவிளையாடல்களை அந்த பெண்ணிற்கு உரைப்பார். அவர்கள் வாழ்வில் ஒரு அதிசயம் நடந்தது போல் நமது வாழ்விலும் அதிசயம் நடக்கும் என நம்பினார். அடுத்து ஒரு வாரத்தில் அந்தப் பெண்ணின் கணவன்  நேரிலேயெ வந்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்து இப்போதைக்கு இதை வைத்து குடும்பம் நடத்து என்றும் தாம் விரைவில் ஒன்று சேர்வோம் என்று உரைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அந்த அம்மையாருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அன்னபூரணியிடம் சென்று அழுது முருகா..முருகா..எனத் துதித்தார். அடுத்த முறை ஜீவ நாடி கேட்க வரும்போது இந்த அதிசயங்களை நமது சுவாமிகளிடம் விவரித்ததோடு ஒரு படி அரிசி இல்லாமல் இருந்த எங்கள் வீட்டில் 25 கிலோ அரிசி இப்போது இருக்கின்றது என்றும் தனது தொழிலில் தினமும் நானூறு ரூபாய் வருமானம் வருவதாகவும் குறிப்பிட்டு நெகிழ்ந்தார். இத்தனை அதிசயங்களையும் நடத்திய முருகப்பெருமானே இதற்குக் காரணம். அடியேன் ஒரு கருவி மட்டுமே. முருகன் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் உன்னத தெய்வம். மக்கள் மீது கருணை கொண்டே ஜீவ நாடியில் தோன்றுகின்றார். அதேபோல் அகத்தியப்பெருமானும் நமது ஜீவ நாடியில் அவ்வப்போது தோன்றி முருகப்பெருமானுடன் உரையாடும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றது. அந்த அனுபவங்களை மற்றுமொருமுறை பகிர்ந்து கொள்கின்றேன். என்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

               ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!