ஞாயிறு, 31 மே, 2020

    தமிழ் மொழியை விட உயர்மொழி உண்டு எனக் கேட்டதும் சினம் கொள்ளாதவன் புலவனல்ல

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்   



நூற்பா: 63               


தமிழ்மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதுஎனில் வெகுளியற்று      இருப்போன் வெறும்புல வோனே.

இதன்பொருள்: தமிழைவிட எல்லாவகையாலும் சிறப்புப்பெற்றதாகிய வேறு ஒரு மொழி இவ்வுலகத்திலே இருக்கிறது என யாராவது ஒருவர் கூறக்கேட்டும் சற்றும் சினங்கொள்ளாமல் ஒரு புலவன் இருப்பின் அவன் பெயரளவில் புலவனே அன்றி உண்மையில் வெறும் சதைப்பிண்டமே என்றவாறு.:

விளக்கம்: ஆகிய அடிப்படைச்சீர்கள் ஆறும் அவனுடைய ஆறு தலைகள்; இவைகளை அமைத்த அகத்திய முனிவர் முருகனடியார்” என்பார். “கண்நிகர் மெய்யும் சென்னிக் கணம்உறழ் சேர்க்கைச் சீரும் திண்ணிய புயங்க ளேபோல் திகழ்தரும் உயிரும் வேறு ஒன்று எண்ணிடற்கு அரியது ஆகும் எஃகமும் இயலிற்காட்டும் புண்ணிய முனிக்கோன் செவ்வேள் பொற்பதத் தடிமைதானே”1 என்றது அது. இவர் இத் தமிழ்மொழி தன்னை அன்புடன் பயில்பவரை தேவர்களுக்கும் தேவராக ஆக்கும் எனலை இந்நூல் 672-ஆம் நூற்பா உரையிற் காட்டினாம். இவ்விலக்கணத்தின் ஈற்றிலே அமைந்துள்ள ஒரு வண்ணக்கவியில் தமிழை, “உலகேழும் மெச்சும் உம்பர் நாட்டும் ஒங்கு துய்ய வண்மை தமிழதாமே”2 எனப் போற்றுகிறார். இவர் தமிழைப் பற்றிக் கூறியுள்ள செய்திகளைத் தொகுத்து ஒரு பெரிய நூலாகவே வெளியிடலாம். விரிவஞ்சி அனைத்தையும் கூறி விரிக்காமல் இவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் சுருக்கமாகக் காட்டி அமைவேன். இந் நூலாசியர் தம் யாத்திரைகளின் இடையில் ஒருசமயம் இராயவேலூரில் தங்கியிருந்தபோது வடமொழிப்புலமை மிக்க இருவர் இவரிடம் தமிழைவிட வடமொழியே உயர்ந்தது என்றனர். பேச்சு முறையான வாதமாக வளர்ந்தது. முன்னிரவில் தொடங்கி மறுநாள் விடியும்வரை வாக்குவாதம் நீடித்தும் முடிவுகாண முடியவில்லை. இறுதியில் திருவுளச் சீட்டுப்போட்டு எடுப்பது என முடிவாயிற்று. அவ்வாறே செய்தனர். தமிழே உயர்ச்சி என்ற சீட்டு வந்தது. உடனே, “தமிழே உயர்ச்சி என்று சீட்டுக் கொடுத்த பெருமாளே” என்ற திருப்புகழ்ப்பா ஒன்றும், தமிழ்த் துதிப்பதிகம் ஒன்றும், 100 கட்டளைக் கலித் துறைகளால் தமிழ் அலங்காரமும் பாடினார். இந்நிகழ்ச்சியின் விரிவை இவர் சுயசரிதையாகிய “குருபரதத்துவம்” என்னும் நூலில் புதுவைச் சருக்கத்திற் காணலாம். தமிழ் வடமொழியிலிருந்து தோன்றியது என்பாரை எண்ணிப்பாடியது.


நன்றி: பதிவு
புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,
தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம்,கோவை .

சனி, 30 மே, 2020

ஜீவ நாடி அருளாடல்கள் பகுதி 1

எனது குருநாதர் எலுமிச்சம் பழத்தை வைத்தே திரிகால வர்த்தமானங்களைத் திறம்பட உரைத்துவிடுவார். ஒருமுறை அடியேன் எலுமிச்சம்பழத்தை நேரடியாகச் செடியில் பறித்தேன். நறுக்கென முள் தைத்தது. சரி என விட்டுவிட்டேன். அந்தப் பழத்தைக் கொண்டு போய் குருநாதரிடம் பூஜைக்குக் கொடுத்துவிட்டேன். இரவு பூஜைகளை முடித்து அருள்வாக்கு சொல்ல அமர்ந்தார் குரு. இரவு 2 மணி இருக்கும். நான் அயர்ந்து தூங்கிவிட்டேன். என்னை அருள்வாக்கில் அழைப்பதாக வந்து அழைத்துச் சென்றார்கள். அடடா தூங்கி விட்டோமோ என்று பரபரப்பாக எழுந்து குருவின் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன். குரு கேட்ட கேள்வி என்னை மெய் சிலிர்க்க வைத்த்து. என்னப்பா இந்த எலுமிச்சம் பழம் பறிக்கும் போது முள் ஏறியதோ? அது இன்னும் வலிக்கிறதா?

கட்டுரையாக்கம்:
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள்,    ஸ்ரீ  ஞானஸ்கந்த மூர்த்தி 
கௌமாரபீடம், அந்தியூர்.

வெள்ளி, 29 மே, 2020

 பல நயங்களைப் பாராட்டாது ஒரு குற்றத்தை மட்டும் பேசல் இழிவு

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்

நூற்பா: 62   
     
பலவகை நயங்களும் பாராது ஒருவிதக் 
குற்றம் கருதிக் குதிப்பதும் புலமைக்கு 
இழிந்த பான்மை என்று  இயம்பிடல் இசைவே  62.

இதன்பொருள்: ஒரு நூல் அல்லது செய்யுளில் இடம்பெற்றுள்ள பல சொல் நயம், பொருள் நயங்களைப் பொருட்படுத்தாமல் ஏதோ ஒரு குற்றத்தை நினைத்து அந் நூல் அல்லது பாடல் முற்றுமே பிழையென்று வாதிடுதல் சிறந்த அறிவுடைமைக்கு ஏற்ற செயலாகாது எனக் கூறுதல் பொருந்தும் என்றவாறு

விளக்கம்: குற்றம் கருதி என்ற சொல்லாற்றலானே அழுக்காறு அல்லது வேறு காரணம்பற்றிக் குற்றம் கூறவேண்டும் என நினைந்து குறைகூறுஞ் செயல் பெறப்பட்டது. இச்செயல் “இலக்கணக் கவிஞர்சொல் இன்பந் தேடுவர் மலக்குசொற்றேடுவர் வன்க ணாளர்கள்”1 என முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. சிவப்பிரகாசர், “உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ் கொண்டு புகல்வது அவர் குற்றமே”(தனிப்பாடல்) என்பதைச் செய்யுட்கும் கொள்ளலாம்.

நன்றி: பதிவு புலவர்
ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

புதன், 27 மே, 2020

பரிசுக்காக பாட்டை விற்பவன் பிச்சைக்காரனை விடக் கேவலமானவன்

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்      

நூற்பா 61

சேவித்து ஒருவர்பின் செல்வார் புலமையில்
பாடல்விற்று அலைவார் பரிசுகேடு இனிதே 61

இதன்பொருள்: ஒரு செல்வனுக்கே சற்றேறக்குறைய அடிமைப்பட்டு அவன் கருத்தின் வண்ணமே ஒழுகுகின்ற ஒரு கவிஞனின் புலமையை விடப் பற்பல தலைவர்களின்் மீது பாடல்களைப் புனைந்து அவர்கள் தரும் பரிசில்களால் வாழ்க்கை நடத்தும் இரவலரின் இழிவும் உயர்ந்ததே ஆகும் என்றவாறு.

விளக்கம்:  முன் பதினைந்தாம் நூற்பாவில் “புகலரும் பனுவற் பொற்பணங் கருதி விற்கத் துணிவது மேம்பாடு அன்றே” என்றவர் இங்கு அதனினும் இழிந்ததாக மற்றோர் நிலையைச் சுட்டுகிறார். ஓர் அரசன், சிற்றரசன் அல்லது செல்வனையே எப்போதும் சார்ந்திருந்து அவன் விருப்பு, வெறுப்புகளையே தம்முடையவை யாக்கிக் கொண்டும், அவன் செயல்களுக் கெல்லாம் எவ்வாறேனும் நியாயம் கற்பித்துக்கொண்டும் சிலர் இருப்பர். இந் நிலையையே “சேவித்து ஒருவர்பின் செல்வார்” என்றார். இவர்களை அச் செல்வரின் உடைமைகளில் ஒன்றாகக் கூறினும் தவறாகாது. தமக்கு உணவளிப்பவனை மகிழ்விப்பது ஒன்றே இவர்களது தலையான குறிக்கோள். இவர்களுக்குப் பெரும்பாலும் விடுதலையே இல்லை.

     இதற்கு மாறாகப் புலமை வியாபாரிகள் எந்நாளும் ஒரு செல்வனுக்கே ஆட்பட்டிருப்பதில்லை. தம் சரக்கிற்கு மதிப்பு இருக்கும் வரையில் ஓரிடத்தில் இருப்பர்; சற்று மதிப்புக் குறைந்தால் அங்காடியை மாற்றிவிடுவர். எனவே, இவர்களுக்குச் சற்றுப் பரந்த கண்ணோட்டமும், சுயமரியாதையும் இருக்கும். இந்நிலையில் சுதந்திரம் மிகுதி
 
புலவர்களின் அடிமைநிலை, வணிகர்நிலை என்னும் இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டி அறிஞன் அடிமையாதலை விட வணிகனாக இருப்பதே மேல் என்கிறார். புலமையை விற்பது தவறுதான். எனினும், புலமையை அடிமையாக்குவதில் அதைவிடப் பெருந்தவறு என்பது கருத்து. இனிதே என்பதிலுள்ள ஏகாரத்தைக் கேடு என்ற சொல்லிற்கு மாற்றுக.

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்” (நல்வழி 19) என்றதில் முதலில் வந்த இரண்டும் இவை.

நன்றி பதிவு புலவர்.ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை


திங்கள், 25 மே, 2020


பொது நூல்களில் பாமரர் கூறும் வரலாறுகள் இருத்தல்  கூடாது

55 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்      
                      

பொருள்நயம் தோன்றும் பொருட்டில் பொதுநூல் 
கலைஉணர் மாக்கள் கழறும் காதை 
பற்றிப் பேசப் படாதுஎனல் பழுதே.
  
இதன் பொருள்: (குறித்த ஒரு சமயம் அல்லது நாடு என அமையாது) அனைவருக்கும் பொதுவாகப் பயன்படவேண்டும் என்கின்ற கருத்துடன் இயற்றப்படுகின்ற நூலில் மொழியறிவுள்ள பாமரர்களும் கூறுகின்ற பழைய வரலாறுகள் இடம்பெறக் கூடாது என்பது ஒரு தவறான கருத்தாகும் என்றவாறு

விளக்கம்:மாக்கள் என்புழிச் சிறப்பும்மை தொக்கது. ஏதாவதோர் கதையைக் கூறினால் அந் நூல் சமயத்தாலும் இடத்தாலும் ஒரு சாராருக்கே உரியதாக ஆகித் தன் பொதுத்தன்மையை இழந்துவிடும் என்னும் கருத்துக்கு மறுப்பாக எழுந்தது இந் நூற்பா. பொருள் விளக்கத்திற்காக அனைவரும் நன்கு அறிந்த செய்திகளை எடுத்துக் காட்டுவதாலேயே ஒரு நூல் நடுநிலைமையற்று ஒரு சார்புடையதாக ஆகிவிடாது. எடுத்துக்காட்டாகச் செங்கோன்மைக்கு மநுநீதிச் சோழனை எடுத்துக்காட்டும் ஒரு நூல் சேர நாட்டில் பயன் தராமற் போய்விடுமா? அடியார்கள் இறைவனின் திருநாமத்தை நாத் தழும்பேறச் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள் என்னும் பொதுக் கருத்தை ஏதாவது ஓரடியாரின் நிலையைக் காட்டி விளக்கினால் பிற சமயத்தார் மறுத்தல் சரியா? மாறாக அனைவரும் அறிந்த கதையைக் கொண்டு பொருள்விளக்கம் செய்யப்பட்டடிருப்பதாலேயே அது அனைவராலும் எளிதில் உணரப்பட்டுச் சிறந்த பொதுநூலாக மிளிரும்.
நன்றி: பதிவு .புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம், தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை

வியாழன், 21 மே, 2020

விரிக்க வேண்டியதை சுருக்கியும் சுருங்கக் கூற வேண்டியதை விரித்தும்  கூறுவது குற்றம் . 
                   
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

நூற்பா: 56   

வீணே விரிப்பினும் விரித்தலைச் சுருக்கினும்
மாணார் புலவரோர் மதியார் அன்றே  56

இதன் பொருள்: சுருக்கமாகச் சொல்லத் தக்கனவற்றைப் பயனின்றி மிக நீட்டி விரித்துக் கூறினாலும், விளக்கமாக்கி கூறவேண்டிய இடங்களில் தெளிவு ஏற்படா வண்ணம் மிகவும் சுருக்கமாகக் கூறினாலும் கல்விச்சிறப்புடைய அறிஞர்கள்  போற்ற மாட்டார்கள்.

வீணே விரிப்பின் மிகைபடக்கூறல், வெற்றெனத் தொடுத்தல் நின்று பயனின்மை ஆகிய குற்றங்களுக்கு இடமாகும். விரித்தலைச் சுருக்கின் குன்றக்கூறல்,  மயங்க வைத்தல் என்ற குற்றங்கள்  நேரும். எனவே இக்குற்றங்களை நீக்கிச் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், விழுமியது பயத்தல், என்னும் குணங்களை உடையனவாக ஏற்ற அளவறிந்து உரைக்க வேண்டும்.

  கீழ்க்கண்ட இவர் வாக்குகள் இங்கே ஒப்பிட்டுப் பார்த்தற்குரியனவாம். “இருந்ததற்கு ஒருபாட்டு அப்பால் எழுந்ததற்கு ஒருபாட்டு ஓதி பெருந்தொகைப் படுத்துவாரைப் பேதையர் வியந்து  கொள்வார்; மருந்துறழ் கவியொன்றாற்பல் வான்பொருள் தெளிவாகச் சொல்லும் திருந்தியற் பாரதச்சீர் திரிபவர் சிலர்தாம் அன்றே”(புலவர் வில்லி17)  “தாரகன் தான்கந்தன் தன்பால் உரைத்ததற்குறைத்தான்; வாரம் உடையாள் ஒரு பெண்மகளுக்கு அழுகை வளர்த்தான்; ஈரம்இலர் ஊன்சமைக்கும் இழிவைப் பெருக்கி இசைத்தான்; ஆரமலையோன் அருள் பெற்றதனைக் குறுக்கியறைந்தான்”(புலவர் கச்சியப்பர் 6) “சுருகிடில் விளங்கிடாது; துணிவொடு செல்லுமட்டும் பெருக்கிடில் இந்நூல் சூடும் பெயரினுக்கு இசைவுறாது ஆங்கு இருக்கவும் இடையிற் காதை யீரண்டு அடக்கிச் சொற்றோம் செருக்குறு புலவர் பல்லோர் தெளிவுறச் செப்ப லாறே”(அருணகிரி நாதர்புராணம் 93)”கற்பனை மொழிந்தனர்கள் கவிப்புலவர் பல்லோர் அம்முறை விரித்திடல் அடுத்தது அல என்றே இம்முறை சுருக்கினம்’(அருணகிரி நாதர்புராணம் 20,21) இதுவரை எடுத்துக் காட்டப் பெற்ற மேற்கோள்களால் இவ்வாசிரியர் எத்தகைய செய்திகளை விரித்துக் கூறவேண்டும்; எத்தகையனவற்றை விரித்துக் கூறக்கூடாது எனக் கருதுகிறார். என்பதை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.
நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி :சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை

செவ்வாய், 19 மே, 2020

கல்வி அறியா செல்வந்தனிடம் கவிதை உரைப்பது பாழ் 
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்         
       
நூற்பா: 50                                               

கல்வி அறியா செல்வந்தனிடம் கவிதை உரைப்பது பாழ்
அருமை  அறியான் அவையிடைப் புகுந்து
பெருமை பாராட்டலும் ஏனையும் பிழையே 50

இதன்பொருள்: கல்வியின் அருமையையும், கசடறக் கற்றதம் அருமையையும் உணரமாட்டாத ஒரு செல்வன் முன் சென்று தம்பெருமையைக் கூறுவதும்,அவன் அறிந்து பாராட்டிப் பரிசில் வழங்குவான் என எதிர்பார்த்தலும் தவறாகும்.

விளக்கம்: “கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம் குற்றம் தமதே; பிறிதன்று” (நீதிநெறி விளக்கம்24)  “கல்லா அறிவின் கயவர்பால், கற்றுணர்ந்த நல்லார் தமதுகனம் நண்ணாரே” என்றெல்லாம் ஆன்றோர் கூறியுள்ளனர்.  

தமிழ்ப்புலவர்கள் செல்வர்களைப் புகழ்ந்து பாடி அவர்களிடம் கைநீட்டிப் பரிசில்  பெறுவதை இவர் இழிவாகக் கருதிகிறார். எனவேதான், அதனை விரித்துக் கூறாமல் ஏனையும் என்றார். சேக்கிழார் முத்தநாதன் செயலைக் கறுமிடத்து ”பத்திரம் வாங்கித் தான்முன் நினைத்தவப் பரிசே செய்ய” என்பதைப்போன்ற மரபு. 
இவருடைய இக்கொள்கை புலவர் புராணத்தில் படிக்காசுப் புலவரைப் பற்றிக் கூறுமிடத்து, “தில்லை யம்பதிச் சிவன்படிக் காசளித் திட்டதாகச் சிலர் சொல்வார்;எல்லையின்றி வூர்தொறும் அஃது இரந்தனன் என்பார்சிலர்; இன்னோன் சொல்லை வேட்டு அரன் அளித்திடில் காயலூர்த் துலுக்கன் ஆதியார்ப் பாடும் தொல்லை யன்னவற் றொடர்வுறாது எனத்தெளி தூயவர் சிலர்தாமே” (புலவர்குமரகுரு39) என வேறு பற்பல பாடல்களாலும் விளங்குகிறது.

பதிவு புலவர் ஆ.காளியப்பன்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

திங்கள், 18 மே, 2020

  திருவருள் பெற்றோரை புலமைச் செருக்கால் அவமதிக்கக் கூடாது
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்


நூற்பா 54

திருவருள் பெற்றோரை புலமைச் செருக்கால் அவமதிக்கக் கூடாது.
அருட்பே ராளருக்கு அஞ்சாப் புலமை
மருட்சி யினதுஎன வையப் படுமே.

இதன்பொருள்: திருவருள்  வலிமை பெற்றுள்ள பெரியவர்களுக்குக் கூடப் பயப்படாத புலமைச் செருக்கு அறிவு மயக்கத்தின் விளைவாகக் கருதப்பட்டு நல்லோரால் பழிக்கப்படும்.

 விளக்கம்: கல்வியும் வாக்கு வன்மையும் சற்றும் சந்தேகமில்லாமல் மிக உயர்ந்த செல்வங்களே ஆகும் என்றாலும், திருவருளை மாதவத்தால் பெற்றவர்களின் ஏற்றம் இவரினும் மேம்பட்டதாகும். எனவே அருளாளர்களிடத்தில்  புலமையோர் பயப்படுதலே முறையாகும். அவர்பால் அச்சமின்மை “அஞ்சுவது  அஞ்சாமை பேதைமை அஞ்சுவது;  அஞ்சல் அறிவார் தொழில்”(427) என்பதற்கேற்ப  அறிவின்மையே யாகும். அதுவே மருட்சி எனப்பட்டது. வசைகவி யாண்டானைப் பற்றிக் கூறும் போது இவர் “ வாக்குவலி வெகுவாகப் பெற்று அரிய  வண்ணம் எட்டும் வழங்குவார்க்கும் ஆக்குவதும் அழிப்பதுவும் பெறல் அரிது என்று உணர்ந்தோரே ஆண்டான் சொல்போய்த் தாக்கும் அதிசயம் அறிவார். தவம் சிறிதும் முயலாராய்த் தருக்கம் கற்றுப் போக்கு வரவு  உணராமல் புலம்பும் இளங்கவிஞர் உளம் புகுந்திடாதே” என்று உரைப்பது இங்கு  நினைக்கற்பாலதாகும்.

பதிவு: புலவர்ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

ஞாயிறு, 17 மே, 2020

தவறாகப் பாடுவோரை யாரும் மதியார்.
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய
அறுவகை இலக்கணம்

நூற்பா: 53
தவறாகப் பாடுவோரை யாரும் மதியார்
கொண்டத் துறையினை கோதுபடக்கூறின் மண்டலத்தாரும் மதியார் அன்றே.
இதன் பொருள்: தாம் பாடத் தொடங்கிய துறையைத் தவறாகப் பாடுவாராகில் இவ்வுலகில் யாருமே அவரைப் போற்ற மாட்டார்கள்.
விளக்கம்: அகத்துறையோ புறத்துறையோ எதுவாக இருப்பினும், அல்லது இலக்கணம், தத்துவம் முதலிய அறிவுத் துறைகளில் எதுவாக இருப்பினும்
சொல்ல வந்ததை குற்றம் இல்லாமலும் தெளிவாகவும் சொல்ல வேண்டும். அதில் தவறு இருந்தால் அறிஞர்கள் மட்டுமல்ல
பாமரர்களும் மதிக்க மாட்டார்கள் என்பது கருத்து. மண்டலத்து ஆரும் மதியார் எனவும் மண்டத்தாரும்  மதியார் எனவும் இரட்டுறமொழிதலாகக் கொள்க.

நன்றி: பதிவு: ஆ.காளியப்பன் அவர்கள்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம்,கோவை.

சனி, 16 மே, 2020

காரண காரியங்களை அறிந்து கவிதை பாட வேண்டும்.
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்.

நூற்பா: 52
காரண காரியம் காணாப்
புலமையைப் பூரணம் என்ன புகலவொண்ணாதே.
இதன் பொருள்: (உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் சங்கிலித் தொடர் போலக் காரண காரியத் தொடர்புடையவை. பல சமயங்களில் அவை எளிதில் விளங்காது எனினும்) நிகழ்ச்சிகளினுடைய காரண காரியத் தொடர்பை அறியா ஒருவரின் கல்வியாற்றலை முழுமை பெற்றதாகக் கூறமுடியாது என்றவாறு விளக்கம்: பொதுவாக நிகழ்ச்சிகளின் பருப்பொருளான காரணங்களை அனைவரும்  எளிதில் உணர்வர்; ஓரளவு நுட்பமான காரணங்களை அறிஞர்கள் அறிவர்..மிகமிக நுட்பமான காரணங்களையும் அறிவதே முழுப்புலமையாகும் என்கிறார். அத்தன்மை கைகூடும் வரையில் கல்வியில் திருப்தி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே கருத்து. இந்நூற்பாவிற்க்கு வேறு ஒரு  முறையிலும்  பொருள் உரைக்கப்படும். இவ்வுலகில் உள்ள பருப்பொருள்கள் யாவும் காரியங்கள் என்றும்  இவற்றின் அமைப்பிற்கான காரணங்கள் மண்,  நீர், காற்று, தீ, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களேயாம் எனவும் அறியாதவருடைய புலமையை முழுமை பெற்றதாகக் கூறமுடியாத என்றவாறு, இவ்வுரை இவருடைய "காரணமாம்  பூதமனைத்தும் காரியமாம் பௌதிகமும் சீர் அருள்சித்து ஆடும் தினம்" என்னும் கொள்கைக் கிணங்கக் கூறப்பட்டது.
பருப்பொருள் பூதங்களின் சேர்க்கைகளால் ஆனவை எனில் அவை பகுதிக்களை உடையன. அதாவது கண்டப் பொருள் என்பது ஒருதலை.  எந்தவொன்று பகுதிகளால் ஆனதோ அது நிலையற்றது. ஒரு நாளின்றேனும் ஒருநாள் அழிந்துவிடும் என்பது தத்துவ நூற்கொள்கை. நிலையாமையை உணராதவருடைய முழு புலமையன்று என்பது இரண்டாவது பொருள்கோளின் கருத்து.

நன்றி: பதிவு புலவர்
ஆ. காளியப்பன் அவர்கள்,
தலைவர், தொல்காப்பியர்,
தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

வெள்ளி, 15 மே, 2020

காலப் போக்கினை அறிந்து கவிதை பாட வேண்டும்
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் 

நூற்பா: 51
கால வேற்றுமை கருதாப்
 புலவன் 
சீலமே எனினும் 
சிறுமையினனே 51
இதன் பொருள்: மாறி வருகின்ற காலப்போக்கின் இயல்பைச் சிந்தித்து பார்க்காத கவிஞர் சிறப்புடையவராகவே இருந்த போதிலும் உலகின் அன்றைய சிந்தனையை உணராதவர் என்னும் குறையை உடையவராகிறார். என்றவாறு. விளக்கம்: உலகில் காலம் செல்லச் செல்ல புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன. இதன் விளைவாகப் பழைய மரபுகள் தாமே மாறுகின்றன, அல்லது வலிய மாற்றப்படுகின்றன. இத்தன்மை தவிர்க்க முடியாத இயற்கை நியதி. இதனைப் புலவர் உணர வேண்டும். எனவேதான் நன்னூலாரும் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல; கால வகையினான; 
என்றார். இவரும் யாப்பைப்பற்றி ஓரிடத்தில் "பழைய யாப்பு எனினும், பண்பு இலது ஆயிற் களையவும் புதிய கட்டே ஆயினும் இனிதாயின் ஏற்கவும் துணியும் கல்வியாளர் என கண்ணனையரே". என்கிறார். இதனை இலக்கண இலக்கிய உலகியல் மரபு பற்றிய அனைத்திற்கும் பொதுவாகக் கொள்ளலாம்.

நன்றி பதிவு: காளியப்பன் அவர்கள்.
நன்றி. சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

வியாழன், 14 மே, 2020

பணத்திற்காக கவிதையை விற்கக்கூடாது

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்.

நூற்பா  49:
புகலரும் பனுவற் பொறிபணம் கருதி விற்கத் துணிவது மேண்பாடு அன்றே.
இதன் பொருள்: இயற்றுதலுக்கு அரிய நூலை இயற்றி அதைப் பணத்திற்காக விலைப் பொருள் ஆக்குதல் சிறப்புடைய செயல் ஆகாது.
விளக்கம்: இந்நூற்பாவும் செல்வர்கள் தரும்பரிசலை உத்தேசித்து,"கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன; காடறியும் மறவனை நாடு ஆழ்வாய் என்றேன்; பொல்லாத ஒருவனை நான்நல்லாய் என்றேன; போர்முகத்தை அரியாதானைப் புலிஏறு என்றேன்; மல்லாரும் புயம் என்றேன் சூம்பல்தோளை; வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்(தனிப்பாடல்) என்றது போல மாய்வார் போற்றும் செயலை விலக்கியதாகும். புலமை விலை மதிப்பற்றது. ஆதலால் அதை விலை பேசலாகாது.
பதிவு: புலவர் ஆ.காளியப்பன்.
நன்றி: சிரவையாதீனம்
தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள்,
கௌமாரமடாலயம், கோவை.

புதன், 13 மே, 2020


வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்.

நூற்பா : 47
பல்லக்கை விட திருவோடு மேல் மாய்வார்  போற்றி மகிழும் பாவலோர், வண்ணச் சிவிகையில் வையகம் படைத்தோற் கழறும் பாவலர் கையோடு
உயர்வே 47
இதன் பொருள்: சிலநாட்களே உயிர் வாழ்ந்து மடியும் மனிதர்களை அவர் தரும்  பரிசுகளுக்காகப் புகழ்ந்து பாடி, அதனால் பெறும் பல்லக்கு, விருது போன்ற பரிசுகளைப் பெற்று செல்வச் செழிப்பில் வாழும் வாழ்வை விட தனு, கரண, புவன போகங்களை படைத்து அளிக்கும் வல்லண்மையைப் பாடும் புலவர் கையில் ஏந்தும் பிச்சைக் பாத்திரமாகிய திருவோடே சிறந்தது.
விளக்கம்: வண்ணச் சிவிகைச் செல்வச் செழிப்பையும், இரக்கும் கலமாகிய திருவோடு வறுமையும் குறிக்கும். "பொய்மையாளைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்"(சுந்தரர் தேவாரம்)" தருக்காவலா என்று புல்லரைப்பாடி தனவிலை மாதருக்கு ஆவலாய் மயிலே குயிலே என்று தாமதர் ஆய்தருகா அலாநெறிக்கே  திரிவீர்கவிசாற்றுமின்--பத்தருக்கா அலாயுதன் பின்தோன்று அரங்கர் பொற்றாள் இணைக்கே" (திருவரங்கத்தந்தாதி)என்பன போன்ற ஆன்றோர் மொழிகளை நினைத்துக் கூறப்பட்டது இந்நூற்பா. மனிதர்களைப் புகழ்ந்து பாடாமையையே பல புலவர்கள் சிறப்புத் தன்மையாகக் கருதினர் என்பதை "மனிதக் கவிமொழி யாமங்கை வாழ்மண வாளவள்ளல் புனிதக்கவி கொண்டு மாலைசெய்தான்" என்னும் திருவரங்கத்து மாலை சிறப்புப்பாயிரத்தால் அறியலாம்
நன்றி:பதிவு
புலவர்ஆ.காளியப்பன்.
நன்றி:
சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமார மடாலயம், கோவை.

வெள்ளி, 8 மே, 2020


விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளியது

   ஞானம் என்ற சொல்லுக்கு அறிவு என்று பொருள். விஞ்ஞானம் என்றால் விசேட அறிவு. மெய்ஞ்ஞானம் என்றால் மேலான அறிவு என்று பொருள்.

   இன்று நாம் விஞ்ஞானத் துறையில்  எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம். சில நூற்றாண்டுகட்கு முன் வாழ்ந்தவர்களைவிடப் பல மடங்கு பல துறையில் மக்கள் சமுதாயம் முன்னேறியிருக்கிறது.  ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே  எவ்வளவோ விஞ்ஞான சாதனைகளைக் காண்கிறோம். கட்டிடம் கட்டும் அமைப்புகளாலும், உடுத்துக் கொள்ளும் உடைகளாலும் உண்ணுகின்ற உணவுகளாலும்  செல்கின்ற வாகன வசதிகளாலும் மின்சார சாதனங்களாலும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளோம். நெடும் தொலைவையும் விரைவில் சென்றடையும் விரைவு ஊர்திகள்,நெடும் தொலைவில் உள்ளவர்களுடன் நேருக்கு நேர் பேசும் தொலைபேசிகள், ஒலிகளை ஈர்த்துக் கேட்கும் வானொலிப் பெட்டிகள், தொலைவுக் காட்சியைக் காணும் டெலிவிஷன் அமைப்புகள், சந்திர மண்டலத்திற்க்கு செல்லல் அங்கே கால் வைத்தல், மண் எடுத்து வருதல்  போன்ற எண்ணற்ற வளர்ச்சிகளைக் காண்கிறோம். காணுகின்ற பௌதீகப் பொருளினுடைய உதவியால் அறிவைப் பயன்படுத்திக் கண்டவை விஞ்ஞான சாதனைகள் ஆகும்.

   காணாத பொருள்கள், கடவுள், உயிர்கள், வினை ஆதியன ஆகும். ஆனால் உள்ள பொருள்கள் மூளை கண்ணுக்குக் காணாத பொருளாயினும் உள்ள பொருள் என்பதை அனைவரும் அறிவர். உண்ணவும் உலாவவும் பேசவும் செயல்படவும் காரணமாக உள்ள உயிர் காணாத பொருள். இருபத்தி நான்கு மணி நேரமும் உடலை இயக்கும் உயிரை யாரும் காணமுடியாது. காணா உயிர் காணும் உடம்பை இயக்குகிறது. அதுபோலக் காணாத  கடவுள் உலகை இயக்குகின்றார். எல்லாப் பொருள்களையும் கடந்து எல்லாப் பொருள்களின் உள்ளும் இருப்பதால் கடவுள் என்று கூறுகிறோம்.
  
   காணாத இருவினை காரணமாகப் பிறந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம். வினையை அனுபவிக்க அமைந்ததே உடம்பு.  வினைப் போகமே ஒரு தேகம் என்பர் ஆன்றோர்.  இந்த உடம்பை  இறைவன் அற்புதமாகப் படைத்திருக்கிறான்.  ஒரு விரலோ, பல்லோ போய்விட்டால் உணர்ச்சியுடையதாக நாம் உண்டாக்க இயலாது.

   எல்லா மக்களுக்கும் கண்,மூக்கு, வாய் ஒரே மாதிரி மாறுபாடு இல்லாதிருந்தாலும் ஒவ்வொருவரைக் காணும்போது வேறுபாடு தெரிந்து கொள்கிறோம்.  உறுப்புகள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தாலும் கோடிக்கணக்கான மக்களையும் வேறுபாடாக உணரும் அமைப்பைக் காண்கிறோம்.  பேச்சு ஒலியில் வேறுபாடு, எழுதும் எழுத்தில் வேறுபாடு, கைவிரல் ரேகையில் வேறுபாடு இவ்வாறு மாறுபாடில்லாத மாறுபாடு இறைவனின் அற்புத படைப்பாகும்.

   இந்த உடம்பை இயக்கும் உயிர் இந்த உடம்பை எடுக்குமுன் எங்கிருந்தது?  இந்த உடம்பை விட்டு பின் எங்கே சொல்லும்? எவ்வாறு செல்லும்? அவ்வாறு செல்லும் உயிர்ப் பயணத்திற்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? இந்தக் கருத்தினை  எங்கள் ஞானசிரியராகிய தவஞானத் தமிழ்க்கடல் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் கூறும் பாடல்

எங்கிருந் திங்கே வந்தனை?  இங்ஙன் எவ்வித முயற்சிஉற் றாய்?மேல் இங்கிருந் தெங்கு போக உத்தேசம் எய்தினை? எனில் விடை  அறியேன்; தெங்கிருங் குரும்பை சுவர்கநீர் நாடி தெரிவையர் சுவர்க்கநாட் டிசையும் நங்கிருங் காரை மடைமரு வரங்க நாதனே சீதர மணியே.
காரமடை அரங்கநாத மாலை. 

 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள். கௌமார மடாலயம் கோவை.

செவ்வாய், 5 மே, 2020

விநாயகர் தனிச்சிறப்பு


விநாயகர் என்ற சொல்லுக்கு விசேடமான நாயகர் என்றும் தனக்கு மேல் ஒரு நாயகர்
(தலைவர்) இல்லாதவரென்றும் பொருள். மலம் இல்லாதவர் விமலர் என்பது போல நாயகர் இல்லாதவர் விநாயகர். யானைகளை இயக்குகின்ற தலைவன் கையில் அங்குசம் பாசம் வைத்துக் கொண்டு யானையை தன் வழி நடத்துவான். விநாயகராகிய  யானை தம்முடைய கைகளில் அங்குச பாசத்தை வைத்துக் கொண்டு உயிர்களை எல்லாம் வழி நடத்துகின்றார்.

   ஒரு வீட்டிற்கு நாயகர், ஒரு சபைக்கு நாயகர், ஒரு ஊருக்கு நாயகர், ஒரு மாவட்டத்துக்கு நாயகர், ஒரு மாநிலத்திற்க்கு நாயகர், ஒரு நாட்டிற்கு நாயகர் என்று தலைவர்கள் இருப்பார்கள். ஆனால் எல்லா உயிர்களுக்கும் எல்லா உலகுக்கும் தலைவராக விளங்குபவர் விநாயகர்.

விநாயகரே ஐந்து தொழில்களுக்கும் நாயகராவார். 
 கொம்பினை எழுத்தாணியாக வைத்துள்ள கையினால் படைத்தலையும், மோதகம் அல்லது பழம் வைத்துள்ள கையினால் காத்தலையும், அங்குசம் வைத்துள்ள கையினால் அழித்தலையும், பாசம் வைத்துள்ள கையினால் மறைத்தலையும், துதிக்கையினால் அருளலையும் ஆக ஐந்து தொழிலையும் ஐந்து
திருக்கரத்தினால் உணர்த்துகிறார். 

விநாயகர் சிவபெருமானைப் போல முடியில் கங்கை, பிறைச் சந்திரன், கொன்றை, வில்வம் ஆதிய முடியும் சிவபெருமானைப் போல நெற்றிக்கண்ணும், பாம்பு ஆபரணமும் அணிந்து தாமே சிவ பரம்பொருள் என உணர்த்துகின்றார்.

"யாம் ஐம்முகன் என்று சடையில் பாசடைக் கூவிளம் தூ இளம் திங்களோடு இதழி அரவத்தம்பு மணியணிப் பணி அடியோடு எண்ணும் முக்கண்ணும் எய்தி" என்பது பேரூர் பச்சை நாயகி பிள்ளைத்தமிழ்த் துதிப் பாடல். உமாதேவியாரைப்போல தமது திருக்கரங்களில் அங்குசம், பாசம் அணிந்து விளங்குகின்றார்.

வழிபடுபவர் பயம் நீக்குவதற்காக
யானை முகத்துடன் விளங்குகின்றார். "வெருவும் சிந்தை விலகக் கசானனம் விளங்கும் சித்தி விநாயகனே வள்ளலே" என்கிறார் ராமலிங்க சுவாமிகள்.

   யானை முகம் மிருகத்தையும்,  நான்கு கைகள் தேவரையும், உடம்பு மனிதரையும், கால்கள் பூதத்தையும், ஒருபக்கம் கொம்புடைமை ஆண் என்பதையும், ஒருபக்கம் கொம்பில்லாமை பெண் என்பதையும் உணர்த்தி எல்லாம் தாமாக விளங்குபவர் விநாயகர்.

   வழிபடுவதற்க்கு எளியவராக விளங்குபவர் விநாயகர். சாணம், மஞ்சள் முதலியவற்றில் யார் எந்த இடத்தில் வைத்து வழிபாடு செய்தாலும் அவர்கள் நினைத்த காரியம் இடையூறின்றி நிகழும் படி அருள் செய்பவர். யாரும் விரும்பாத வன்னி, அருகு, எருக்கு மலர் இவற்றை ஏற்று அருள் செய்பவர். தன்னை வழிபடுபவர்களின் துன்பம் நீக்கியருள்பவர். "வழிபடும் அவர் இடர் கடி கணபதி" என்பார் திருஞானசம்பந்தர். இன்பம் இடையறாது நிற்கவும் துன்பம் தூரத்துள் நீங்கவும் விநாயகரைப் போற்றுவாம் என்பார் சாந்தலிங்க சுவாமிகள்.

   விநாயகரை வழிபட்டால் கல்வி, ஞானம் எல்லாம் தானே உண்டாகும்.  "நற்குஞ் சரக்கன்று நண்ணில் கலைஞானம் கற்கும் சரக்கன்று காண்" என்பது ஞான சாத்திரம். சிவபெருமான் முதலாகிய எல்லாக் கடவுளர்களும் விநாயகர் வழிபாடு செய்யாமல் ஒரு செயலைச் செய்தால் இடையூறு உண்டாகும் என்பது, "அச்சிவன் உரை ரதம் அச்சது பொடி செய்த அதிதீரா" என்னும் திருப்புகழால் தெரியவருகிறது.
  
   ஆகவே நம்முடைய சகல நற்செயல்களும் எவ்வித இடையூறுமின்றி, நல்ல வண்ணம் நிறைவேறும் பொருட்டு ஐந்து கரமும் ஆனை முகமும் உடைய விநாயகப் பெருமானை முதற்கண் வழிபாடு செய்து எல்லா நலங்களையும் பெறுவோமாக!


நன்றி.
சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள்,
கௌமாரமடாலயம், கோவை.


ஞாயிறு, 3 மே, 2020

பாசப் பழிமுதல் பறித்தல்

பாசப் பழிமுதல் பறித்தல்.
தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள்.
மூன்றாம் குருமகா சந்நிதானம்,
சிரவை ஆதீனம், கௌமார மடாலயம், கோவை.



தெய்வ மணம் கமழச் செய்யுள் இயற்றும் சேக்கிழார் பெருமான், தாம்
இயற்றிய திருத்தொண்டர்  புராணத்தில்  உள்ள ஒரு செய்யுளைப் பற்றி எழுந்ததே
இந்தக்  கட்டுரை.
இளையான்குடி என்ற நகரத்தில், வாய்மையில் மிக்க வேளாண் குலத்தில்,
மாறனார் என்ற பெயரமைந்த பெரியார், அரனிடத்திலும் அடியவர்களிடத்திலும்
அன்பு பூண்டு விளங்கினார். அவர் தம் உழவுத் தொழிலால்
வரும் பொருளைக் கொண்டு, அரன் அடியவர்களுக்குப் பூசை செய்து அமுது படைத்து வந்தார்.
இவ்வாறு நாள்தோறும் அடியவர்கள் வந்து மகேசுவர பூசை கொண்டு, வாழ்த்திச்
சென்றதின்  பயனாகக் குபேரன் போன்று செல்வங்கள் நிறையப் பெற்றவராக
விளங்கினார்.
    செல்வம் மிக்க நாளில் செய்வதன்றி,  வறுமை வந்து துன்பம்  நேரிட்ட
காலத்தும்  இப்படியே செய்ய வல்லவர் என்று உலகினர்க்கும் உணர்த்தும்
பொருட்டுச் சிவபெருமான்,  இவரது  செல்வங்களை நாள்தோறும் மெல்ல மறைந்து
போகும்படி திருவுளம் கொண்டார். இவ்வாறு வளம் சுருங்கவும் இளையான்குடி மாற நாயனார் தம் உளம் சுருங்குதல் இன்றித் தமது திருப்பணிகளில் முதிர்ந்த
கொள்கையராக விளங்கினார்.
   இவ்வாறு நிகழும் நாளில் இறைவன் உலகினர்க்கு நாயனார் உணர்த்த வேண்டி  மழைக் காலத்தில் ஊணும், உறக்கமுமின்றி வேறு ஆதரவுமின்றி
அடைக்கப்பட்டிருந்த  நள்ளிரவில்,  நற்றவத்தர் வேடம்  கொண்டு இவர் மனையின்பால் எழுந்தருளினார். நாயனார் கதவைத் திறந்து உள்ளே அழைத்து ஈர
உடையை  நீக்கி அமர இடம் கொடுத்து அவர்க்கு உணவூட்ட எண்ணினார்.
     தம் மனைவியை  நோக்கி, “நமக்கு முன்பு உணவில்லையாயினும் இவ்வரன்
அடியார்க்கு அமுது படைக்க வேண்டுமே” என, அவர் “மற்றொன்றும் காண்கிலேன்,
நேரம் அகாலமாயிற்று.  தருபவரும் இலர், போமிடமும் வேறில்லை, வயலில்
பகலில் விதைத்த செந்நெல்  மழையில்  நீரின்  மேல்  ஒரு பகுதியில் இருக்கும்.
வாரிக்கொண்டு வந்தால் அமுதாக்கலாம்” என்று தம்  மனைவியார் கூற உடனே
நாயனார், அந்நடுவிருள் யாமத்து மின்னலின் உதவியால் சென்று கைகளினால்
தடவி அந்நெல்  வித்துக்களை எடுத்துக்கொண்டு மனையின்பால் அடைந்து தம்
மனைவியிடம் கொடுத்தார். அவர் மனைவியார் வீட்டு வாயில் எதிர்நோக்கி
இருந்து கொண்டு வந்த நெல்லை வாங்கிக் கொண்டார். அந்நெல் முளையை
வறுப்பதற்காக விறகில்லை   எனத் தம் வீட்டுக் கூறையை அறுத்து நாயனார்
விறகாக்கினார். பின்பு மனைவியார் அதை வறுத்து அரிசியாக்கி அமுதாக்கினார்.
கறிக்காகத் தம் கொல்லையில் உள்ள குழிநிரம்பாக் கீரையைப் பறித்துக்
கொடுத்தார் நாயனார். அந்தக் காட்சியை சேக்கிழார் பெருமான் சித்தாந்த
கருத்தில் வைத்து விளக்குகிறார்.

குழிநிரம்பாத புன்செய் குரும்பயிர் தடவிப் பாசப்
பழி முதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க”

   குழி நிரம்பாத சிறிய அளவு உள்ளமையாலும், நள்ளிருள் காலம்  ஆனதாலும் அக்குறும் பயிர்களைத் தடவிப் பறிக்க வேண்டியதாயிற்று.
"பாசப்பழிமுதல் பறிப்பார் போல” நாயனார் பறித்தவை குரும்பயிரன்று அவை
பாசத்தின் பழி முதல் என்றார். "பாசப் பழிமுதல்” ஆணவமாகிய சகசமலத்திற்கு
வேராகி நிற்கும் மூல கன்மம் என்பர். “யாக்கை தன் பரிசும் வினை இரண்டும்
சாரும் மலம் மூன்றும் அற” என்பது கண்ணப்ப நாயனார் புராணம். வித்தாகிய
செந்நெல்முளை வாரியதால் வித்து மேல் விளையாமல் செய்த செயல் ஆகாமிய
கர்மங்களைக் கழித்தலும்,
வீட்டின் அலகுகளை அறுத்தல், புவன போகங்களை
இல்லாமல் வீட்டியதனால் சஞ்சித கர்மங்களை அழித்தலும் குரும்பயிர் வேருடன்
பறித்தலால் ப்ராப்த வினைகளை வேருடன் அழித்தலும் குறிக்கப்பட்டன.

ஈண்டுப் பாசம்  என்றது ஆணவமலத்தையும் குறிக்கும். பாசமாகிய
ஆணவமலம்,  இறைவன் உயிர்கள் போன்று என்றும் நிலைத்தலையுடையது. ஒரு
வீட்டில் உள்ள இருள் விளக்கு வைத்தால் ஒடுங்கியிருத்தல் அன்றி,  இல்லாமல் போவதில்லை.
அது போல ஆணவமலம் ஞானிகளுக்குத் தொழிபடாது
ஒடுங்கியிருக்கும்.  "பாசப்பழிமுதல் பறிப்பார் போல” என்றது அத்தகைய ஆணவ
மலத்தை முதலோடு (வேறோடு) பறித்தனர் என்று விளங்குகிறது. நெல் வித்தை
வாரிக் கொண்டு வந்தமையால் இனிப் பிறப்பாகிய வித்தைக் களைந்துவிட்டனர்
என்றும், பேரின்ப மயமாகி உயிர்க்குச்சொந்த வீடாகிய முத்தி வீட்டு
இன்பத்தையடையவும் தன்மையராதலின் உடலுக்குத் துணையுள்ள பந்த வீட்டை
அறுத்தனர் என்றும் பொருள் அமைகின்றது.

அரன் அடியவர்கள் யாவராயினும் பக்தியோடு மனையில்பால் அழைத்து
அவர்களின் பாதங்களை விளக்கி  ஆதனத்தில் அமர்த்தி, அர்ச்சனை செய்து அமுது
படைத்தது வழிபடும் தன்மை சிவஞான போதும் 12ம் சூத்திரம்.
 “மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
 ஆலயம் தானும் அரன் யனத் தொழுமே”
என்ற பகுதியின் விளக்கத்தால் உணரலாம்.
 “பாசம் எனும் பேயே பசுவைப் பதியிடம் விட்டு
 ஆசடையச் செய்ததம்மம் மா”
 என்பது தண்டபாணி சுவாமிகள் திருவாக்கு. பாசப் பழி முதலைப் பறித்தால்
வீடு பேற்றை அடையலாம் என்ற கருத்தை மாற நாயனார் குழி நிரம்பாத
புன்செய்க கீரைகளைப் பறிப்பதன் மூலம் தெய்வச் சேக்கிழார் பெருமான்
உணர்த்தியருளுகிறார்.
தட்டச்சு, வடிவமைப்பு.
 மு.செல்வக்குமார்,
 சி.மாதேஸ்.
 சிரவை ஆதீனம்,
 கௌமார மடாலயம்,
 கோவை.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமார மடாலயம், கோவை.

சனி, 2 மே, 2020

ஆலய வழிபாடு

கஜபூசைச் சுந்தர சுவாமிகள்  மூன்றாம் குருமகாசந்நிதானம் 
சிரவை ஆதீனம், கௌமார மடாலயம்.

ஆலயம் ஆ – விரிந்து நின்ற இறைவனது இயற்கையின்பமான சாந்நித்ய
தன்மையை அடக்கி விளங்கும்   ஞானிகள், யோகிகள் தமது
உபாசனைக் கண்கொண்டு காண்பதற்கும் மற்றுள்ள சரியை கிரியையாளர்கள்
வழிபாடு புரிந்து மாயை கண்மங்களைப் போக்கி உபாசனைக் கண் பெறுவதற்கும்
துணையாக லயம் – லயசக்திக்கு மூலகாரணமாய் விளங்கும் இடம் என்பர்.
உயிர்கள் இறுதியில் அடையதக்கது வீட்டின்பம்; அவ்வீட்டின் பத்துக்குரிய
மார்க்கங்கள்  நான்கு; அந்த மார்க்கங்களாவன சரியை, கிரியை, யோகம், ஞானம்
என்பன. அவை முறையே இறைவனைப்
 புறத்தே வைத்து வழிபடுவது,
அகத்தேயும் புறத்தேயும் வைத்து வழிபடுவது, அகத்தே கண்டுவழிபடுவது, பார்க்கும்
இடம் எங்கும் நீக்கம் அறக்கா ண்பது. இந்நான்கு நெறிகளும் முறையே சோபனமான
 விளங்குவன. “விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு, மலர், காய் கனி போல் அன்றே பராபரமே” என்பார் தாயுமானவர்.
இவ்வாறு உள்ள மார்க்கங்களுக்கு ஆதாரமாக உள்ளது ஆலயம். இந்தப்
படிமுறையில் சென்றாலொழிய பேரின்ப வீடெய்தல் இயலாது என்பது நமது
சைவ சித்தாந்த ஆன்றோர் கண்ட துணிபாம்.
சிலர் இந்த முறையில் முதல் படியில் கூடக் கால் வைக்காமல், தம்மைப்
பரமஞானிகளாக எண்ணிகொண்டு "ஆலய வழிபாடு, விழாக் காண்டல்,
ஆராதனை வழிபாடு முதலியவை வேண்டா. அவை எல்லாம் கீழ்ப் படியில்
உள்ளவர்கள் செய்யத் தக்கவை. மேல்படியில் உள்ள எமக்கு பூசை செபதவம்
ஒன்றும் வேண்டாம்” என வாய் ஞானம் பேசித் திரிவர். ஆனால் நாவிற்கு
ருசியான உணவும், கண்ணிற்க்கு வியப்பான காட்சியும், ஏனைய புலன்களுக்குரிய
போகமும் தேடுவர்.  புறத்தே உண்ணல், உடுத்தல், உறங்கல் உள்ளளவும்
புறப்பூசையும் செய்ய வேண்டும். தூங்குகின்றவன் கைப்பொருள் தானே நழுவுதல்
போல உலகப் பொருள் எல்லாம் கடவுளாகக் கண்டு உண்ணல், உடுத்தல்,
உறங்கல் அற்றால் புறவழிபாடும் தானே அகன்றுவிடும்.
திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆண்டவன் தம்மை முதல்
குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த, உணர்ந்த வாதவூரடிகள்
ஆமாறுன்  திருவடிக்கே அகம் குழையேன் அன்புறுகேன்
பூமலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில்
தூகேன் மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே”.
என்பார்.
அவஞானம் தொலைக்கும், சிவஞானப்  அன்றபாலை எம் அன்னை
உமாதேவியார் தந்தருள உண்டு ஈன  சம்பந்தம் நீக்கிய ஞானசம்பந்தப்
பெருந்தகையாரும், 
----------சாய்காட்டெம் பெருநாற்கே 
பூநாளும் தலைசுமப்ப, புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே “
என்பார்.
இங்ஙனம் எல்லாப் பெரியோர்ளும் கூறுதல் காண்க. அரிய பெரிய
வேலைப்பாடுகள் அமைந்த மாட கூடங்களைக் கொண்ட நகரமாயினும்,
கோயில் என்ற ஒன்றை மாத்திரம் தன்பால் அமையக் கொள்ளவில்லையானால்
அதனை அப்பர் பெருமான்,
திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும்-----------------------------
-----------------------------அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே”
என்பார்.
ஆதலில் நமது சைவப் பெருந்தகைகள் ஆலயம் இல்லாத
வெற்றிடத்தை எவ்வாறு கருதியிருந்தார்கள். கோயில்கள் இல்லாத ஒரு
நகரத்தைப் பொருள்படுத்திச் சென்றதாக அவர்களது வரலாறுகளில் உண்டா?
இறைவன் இல்லமாக விளங்கும் ஆலயங்களை வழிபட்ட பெரியோர்களைத்தான்
நாம் இன்று உரியோர்களாகவும்,
ஆசாரியன்மார்களாகவும். வழிபடுக்றோம்.
அவர்கள் பெருமைதான் இன்றும் பொருள்சேர் முகமாக மிளிர்கின்றது.
பரமுத்தராக இறைவன்
இன்னருளில் கலந்த திருவாதவூரடிகள்,
பாண்டியன் குதிரை வாங்கி வரும் பொருட்டுக் கொடுத்த பொன்த்திரளை எல்லாம்
திருப்பெருந்துறையில் ஆலயத் திருப்பணி செய்து, அதன் காரணமாகப்
பாண்டியன் கொடுத்த தண்டனை ஏற்றுச் சிவபெருமான் திருவருள் பெற்றதும்,
பத்திராசலம் இராமதாசர், தாணிசா என்ற இசுலாமிய அரசனுக்குச் சேரவேண்டிய
பொருளில் பத்திராசலக் கோயில் மணி செய்து சிறைப்பட்டு,
இராகவன் திருவருள் பெற்றதும் ஆலயவழிபாட்டின் காரணங்களாகும்.
இன்னும் நமது சமயாச்சாரிய மூர்த்திகள் தேவாலயங்கள் உட்பட நகர்ப்பறங்களில் கோபுர விமானங்களைக் கண்டு வழிபட்டமை திருத்தொண்டர்
புராணத்துள் காண்க.  அப்பரடிகள்  உழவாரத்தின் படையறாத் திருக்கரத்தோடு
ஆலய வழிபாட்டை நிறனவுறுத்தலையும் அவரது தமக்கையார் திலவதியார்
திருவதிகையில் சென்று புலர்வதன்முன் அலகிட்டு மெலுக்கும் இட்டுப் பூமாலை
புனைந்தேத்தி வழிபட்டமையும் அறிக.  அப்பரடிகள் ஆலயத்தில் தொண்டு
செய்வார்க்கு கிடைக்கும் பேரருள்களை“ஆலயம் தானும் அரன் எனத்
தொழுமே” என்ற 12ம் சூத்திரத்தாலும் கண்டு தெளிந்து ஆலய வழிபாடு செய்து
எல்லாம் வல்ல இறைவன் திருவருள் பேற்றிறினை எய்துவோமாக.
நன்றி:  சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமார மடாலயம், கோவை.