திங்கள், 30 நவம்பர், 2015

கௌமார மடாலயத்தில் 110வது சைவ சித்தாந்த மாநாடு நடந்தது

கோவை : சரவணம்பட்டி சிரவையாதீனம், சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் சார்பில், 110வது சைவ சித்தாந்த மாநாடு கோவை கவுமாரமடாலயத்தில் 14.05.2015 அன்று துவங்கியது.
ஞானியர் சுவாமி, மறைமலை அடிகள் ஆகியோரால், 1905ம் ஆண்டு சைவசித்தாந்த பெருமன்றம் துவங்கப்பட்டது. இதன், 110ம் ஆண்டு விழா, சின்னவேடம்பட்டி கவுமாரமடாலயத்தில் 14.05.2015 அன்று துவங்கப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சியில், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், கந்தசாமி சுவாமிகள், நம்மைபேணும் அம்மை, சிரவையாதீன வரலாறு உள்ளிட்ட பல்வேறு சைவ நுால்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள், பொம்மபுரஆதீனம் சிவஞானபாலய சுவாமி, தென்சேரிமலையாதீனம் முத்துசிவராமசாமி சுவாமி அடிகளார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளான 15.05.2015 அன்று சைவமகளிர் மாநாடும், மதியம் சைவ இளைஞர் மாநாடும் நடந்தது. 16.05.2015 அன்று மூன்றாவது நாளில் சைவர் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. இது போல் ஏராளமான நிகழ்ச்சிகளை நமது குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் சிறப்பாக நட்த்தி தமிழுக்கும், சமயத்திற்கும் அரும் தொண்டாற்றி வருகின்றார்கள்.
 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள்
நன்றி: தினமலர்
என்றும் குரு சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன்

ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்

சிரவை ஆதீனக் குரு முதல்வர் தவத்திரு ராமானந்த சுவாமிகள் பற்றி கூறிய கந்தர் நாடி


பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சியாக இந்த ஜென்மத்தில் நாம் நன்மை தீமைகளை அனுபவிக்கிறோம் என்பது உண்மையா?”
ஜென்மங்கள் பற்றிய விஷயத்தில் கடவுளுக்குச் சம்பந்தம் என்ன?”
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதிலைக் கூறுமுன் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பராமாசாரிய சுவாமிகள் எழுதியுள்ள ஒரு சிறு நூலிலிருந்து விஷயங்களை வைக்கிறேன்.
கடவுளை நோக்கிச் செய்கின்ற பிரார்த்தனை அல்லது வேண்டுகோள் பலனுடையதாக இருக்குமா? அப்படி ஒரு கடவுள் இருக்கிறாரா? அப்படி இருப்பாரென்றால், நமக்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கின்றதாகத் தெரிய வில்லையே! அவ்வித மூட நம்பிக்கை நமது நாட்டை விட்டுப் போனாலன்றி நம் நாடு முன்னேற முடியாதுஎன்று சொல்கின்ற பலர், ஆலய வழிபாட்டிலும், வீட்டு வழிபாட்டிலும் தலைசிறந்த நமது தமிழகத்திலேயே உற்பத்தியாகி இருக்கிறார்கள். இவை வெளிநாடுகளிலிருந்து விதைத்த விதைகளால் ஏற்பட்டவை. இப்படிப்பட்ட கேள்விகளையும் இதற்கு மேலதிகமான கேள்விகளையும் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்பே கேட்டு, அவர்களுக்கெல்லாம் பல நியாயங்களும் நிரூபணங்களும் கொடுத்து ஒத்துக்கொள்ளுமாறு நமது அருளாளர்களும் ரிஷிகளும் செய்து, அவற்றைப் பின் சந்ததியார்கள் யாவரும் உணர்ந்து கொள்ளுமாறு ஏடுகளில் எழுதியும் உதவியிருக்கிறார்கள். அந்த உண்மைகளை நாம் திருவருளால் கண்டுணர்ந்து இன்று வெற்றிமுரசு கொட்டிக் கையாண்டு வருகிறோம்.
அவ்வாறு கேட்கின்ற ஒருவரிடம், நாம் முதலாவதாக ஒரு கேள்வி கேட்கிறோம்: நீ இந்த உலகத்தில் பிறந்து, நன்றாக உண்டு வளர்ந்து, இவ்வாறு பேசுவதற்கு மூல காரணம் உன்னுடைய அப்பாவும் அம்மாவும்தான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா?” என்பதே அந்தக் கேள்வி. ஆம்என்று ஒப்புக் கொண்டால் மட்டும் மேற்கொண்டு பேசுவோம்.
மனிதனான எவனும் ஒப்புக் கொள்ளாதிருக்க முடியாது. உன்னை உன்னுடைய அம்மா தானே பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்துப் பாலூட்டித் தாலாட்டி உணவு கொடுத்து வளர்த்து வந்தாள்? அப்படியிருக்க நீ யாருடைய குழந்தை?” என்று கேட்டால், “நீ ஏன் அம்மாவின் பெயரைச் சொல்லாமல் அப்பாவின் பெயரைச் சொல்லி, அவருடைய மகன் என்று சொல்கிறாயேஎன்று கேட்போம். உன்னைப் பெற்றெடுத்தது உனது தாயார் தான் என்பதே அவள் சொல்லத்தான் தெரியுமே தவிர, நீ அறியாதிருக்க, தகப்பனார் பெயரை உன் தாயார் சொன்னதைக் கேட்டுத் தானே ஒப்புக் கொண்டு சொல்லி வருகிறாய்?” என்போம்.
ஆம்என்று சொல்லாமல் தீராது.
தாயாருக்கே தான் பெற்ற பிள்ளையின் தகப்பனார் யார் என்று தெரியாத நிலையிலிருந்தால், தாயார் விலாசத்தைப் போட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. தாயார் பெயரை சொல்லாததும், தகப்பனார் பெயரைச் சொல்லாததும் உலக முழுவதிலும் நடைபெறுவதாகும். அதற்கு மூல காரணம் ஒன்று உண்டு. அதாவது, ஒரு விளைநிலம் ஒருவனுக்குச் சொந்தமாக இருக்க, அதில் உழவு செய்து வித்திட்ட அவனுக்குத்தான் அந்த நிலத்தில் விளைந்து வந்த பயிர் சொந்தமாகும். அதுபோல் மனைவி, கணவனுடைய உடைமை, வித்திட்டவனும் கணவன். ஆகவே, கணவனது உண்மையான மனைவியிடத்தில் உற்பத்தியான குழந்தைகள் சொந்தத் தந்தையின் குழந்தைகளாகின்றன.
அதனாலேயே பெண்களெல்லாம் கற்புடையவர்களாக இருக்க வேண்டுமென்பது உலக நீதி.
இரண்டாவது கேள்வி: உனக்குக் கல்யாணமாகி விட்டதா?” என்பதாகும். ஆம்என்பான். பிள்ளைகள் இருக்கின்றனவா?” “ஆம், இருக்கின்றனர்!” “நீயும் உன் மனைவியும் விரும்பிய வண்ணம் குழந்தைகள் பிறந்தனவா?” “இல்லவே இல்லைஎன்பான்.
நேருஜிக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தும் ஆண் குழந்தைகள் கிடையாது என்பதும், பல பெரிய பணக்காரர்களுக்கும், பதவியில் உள்ளவர்களுக்கும், சில வைத்திய நிபுணர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் குழந்தையே கிடையாது என்பதும், யாவரும் அறிந்த உண்மையாகும்.
அதற்கும் உண்மையான காரணம் உண்டு. அது எந்த மனிதனும் தனது விருப்பம்போல் ஆண் மகவுக்குரிய வித்தையோ, பெண் மகவுக்குரிய வித்தையோ உற்பத்தி செய்து உண்டாக்கிக் கொள்ள முடியாததேயாகும். அந்த வித்தை, எல்லாம் வல்ல கடவுள் கொடுத்துத்தான் எந்தத் தந்தையும் பெறவேண்டியிருக்கிறது. கடவுள் கொடுக்க தந்தை பெற்று, தாயார் அதனைப் பெற்றதன் காரணத்தினாலேயே தாய் தந்தையரைப் `பெற்றவர்கள்அல்லது `பெற்றோர்கள்என்று சொல்லுகின்றோம்.
இந்த உண்மையை உணர்ந்த அருளாளர்கள், தந்தை இரண்டு மாதம் தங்குகின்ற நாற்றங்காலாகவும், தாயாரைப் பத்து மாதம் வளர்க்கின்ற விளைநிலமாகவும், இரண்டையும் உடையவர்கள் கடவுளே என்றும், அவற்றில் வித்திட்டவரும் கடவுளே என்றும் கண்டு, ஆண்டவனே உலகத்தில் பிறந்திருக்கிற எல்லா மனிதர்களுக்கும் எல்லாப் பிறவிகளுக்கும் உண்மையான அம்மையப்பன் ஆகின்றான் என்றும் அருளியிருக்கின்றார்கள்.
இந்துக்கள், கடவுளை `அம்மையே அப்பாஎன்றும், `எந்தையாய் எம்பிரான்மற்றும் யாவருக்கும் `தந்தை தாய் தம்பிரான்என்றும்; கிறிஸ்தவர்கள் `நாமெல்லாம் பரமண்டலத்திலிருக்கின்ற பிதாவினது குழந்தைகளேஎன்றும்; இஸ்லாமியர்கள் `கடவுளே மனிதர்களைப் படைத்தார்என்றும் கூறி வருகிறார்கள். யாரும் உயிர்களைக் கடவுள் படைத்ததாகச் சொல்லவில்லை.
மூன்றாவது கேள்வி: உனக்கு ஒரு பெயரிடப் பெற்றிருக்கிறதல்லவா? அந்தப் பெயர் கண்ணுக்குத் தெரியாத உயிருக்கு இடப்பட்டதா? கண்ணுக்குத் தெரிகின்ற பாரமுள்ள உடலுக்கு இடப்பட்டதா? அல்லது வேறொரு பாரமில்லாத உன் உடலுக்கு இடப்பட்டதா?” என்று கேட்போம். நான் பிறந்த பின்தான் பெயரிட்டிருக்கிறார்கள்; ஆணா பெண்ணா என்று பார்த்து என் பெற்றோர்கள்தான் பெயரிட்டிருக்கிறார்கள்என்றுதான் (நாம் எழுதியிருக்கிற புத்தகத்தைப் படித்தறியாத) எவரும் சொல்வர்.
ஆனால் உண்மையில் மனிதராகப் பிறந்திருக்கிற எவருக்கும் பெயரிட்டவர் கடவுளேயாவார். ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கச் செய்ய வேண்டிய தகப்பனாருடைய உடலில், அதற்குரிய அணுப்பிரமாணமுள்ள அதிசூக்குமமான வித்தைச் செலுத்தி, முன்னரேயே அவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளாகப் பொறித்து, இன்ன ஊரில், இன்ன ஜாதியில், இன்ன பெற்றோருக்கு இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னின்ன கிரக நிலையில் பிறக்க வேண்டுமென்று கடவுளே தீர்மானித்து, அதன்படி பிறக்கச் செய்து அவர் இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன இன்ன இன்பம் துன்பம் அனுபவித்து வருமாறும் ஆட்சி புரிந்து வருகிறார். அந்தப் பெயரும் சொப்பனத்தில் பாரமுள்ள உடலின் உதவியின்றி, இன்பம் துன்பம் அனுபவிக்கின்ற, பாரமில்லாத உள்ளுடலுக்கே இட்டிருக்கிறார்.
இந்த அரிய பெரிய பேருண்மையை முதன் முறையாகக் கேட்கின்ற அனைவரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. ஒருவேளை, நமக்கு மூளைக்கோளாறாக இருக்கலாமோ என்றுகூடச் சில ஆத்திரக்காரர்கள் நினைக்கக்கூடும். நாம் இதனுடைய உண்மையைச் சோதித்து உணருவதற்காக ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்த பின் இவ்விதம் கூறுகின்றோம்.
திருவள்ளுவர்:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவுஎன்றும்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்றும் கூறியிருப்பதனால், நாம் கூறும் இந்த உண்மையைச் சோதித்துப் பார்த்தபின், அதைப்பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமே தவிர, கேட்டமாத்திரத்தில் யாரும் எதையும் மறுத்தால் அது அறிவுடைமையாகாது.
பெயர்களைக் குறித்து கிறிஸ்துவ வேதநூலில் பிரசங்கி ஆகமம், அதிகாரம் 6, வசனம் 10ல் இருக்கிறவன் எவனும் தோன்று முன்னமே பெயரிடப் பெற்றிருக்கிறான். அவன் மனுஷன் என்பது தெரிந்திருக்கிறதுஎன்றும், ரேகை, சாஸ்திரத்தைக் குறித்து யோபு ஆகமம், அதிகாரம் 37, வசனம் 7ல் தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படி, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்தரித்துப் போடுகிறார்என்றும் கூறியிருக்கிறது.
உதாரணமாக நாகர்கோவில் ஸ்ரீ ஆறுமுக நாவலரது நாடி சாஸ்திர ஏட்டில், அவருடைய பெயரை `ஐந்தும் ஒன்றும் வதனமெனப் பெயரும் சூட்டிஎன்று கண்டிருந்தது. ஐந்து + ஒன்று ஆறு; வதனம் என்றால் முகம்; ஆறுமுகம் என்பது ஆண்டவன் இட்ட பெயர்.
ஸ்ரீ வைகுண்டத்திலுள்ள ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவ அன்பருக்கு, `சாவில் ஆறும் சாவில் ஒன்பதும் இவன் தன் நாமம்என்று கண்டிருந்தது. `என்ற எழுத்து வரிசையில் ஆறாவது எழுத்து `சூஒன்பதாவது எழுத்து `சைஅவரது தந்தை இட்ட பெயரும் `சூசைஎன்பதாகும். ஆண்டவன் கொடுத்த பெயரும் `சூசைஎன்பதாகும். ஓர் இந்துவைப்போல் மாறுவேஷம் போட்டுக் கொண்டு சென்ற, மதுரையிலுள்ள இஸ்லாமியருக்கு `அப்துல் ரஹ்மான்என்ற பெயர் கூறப் பெற்றிருக்கிறது. ஓர் ஆங்கிலேயர் பார்த்தபொழுது, `முழத்தில் பாதி இவன் தன் நாமம்என்றிருந்தது. அவரது பெயர் `ஜான்என்பதாகும். கோவையில் கௌமார மடத்தை நிறுவிய தலைவருக்கு `இராமக் குட்டிஎன்றும், பின் துறவு பூண்டு `ராமானந்தர்ஆவார் என்றும் கண்டிருந்தது. இவற்றின் உண்மைகளை, சென்னை அரசாங்கத்தார் கைரேகைகள் சம்பந்தமாக, `சப்தரிஷி நாடியின் பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்து பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
                       தவத்திரு.இராமனந்த சுவாமிகள்
தமிழ்நாட்டில் கந்தர் நாடி, காக்கையார் நாடி, கௌசிகர் நாடி, சீவக சிந்தாமணி, அநாகத வேதம் முதலிய பிற ரேகை சாஸ்திரங்களும் இருக்கின்றன. கடவுள் கொடுத்திருக்கும் அவ்விதத் தீர்ப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்குக் காரணம், அவரவர் சுயஅறிவு கொண்டு முன் பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளில் ஏற்பட்ட வேற்றுமைகளே தவிர, கடவுளது பட்சபாதமுள்ள செயலால் அல்ல என்பதற்குரிய நிரூபணங்களும், ரேகை சாஸ்திர ஏடுகளில் காணப்பெறுகின்றன. கடவுள் கொடுக்கிற நியாயத் தீர்ப்பில் தவறு ஏதும் இருக்க முடியாது.
மதுரை ஆதீன கர்த்தர் மேற்கூறிய கருத்துப்படி நம்முடைய பிறப்பும், நமக்குப் பெயரிடப்படுவதும், நமது வளர்ப்பும், முற்பிறவியும், மறுபிறவியும் ஆக எல்லாமுமே இறைவன் கையில் தான் இருக்கின்றன.
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரேஎன்றும் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள்.
முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை.
முதல்இடை கடைநமது வசத்திலில்லை.
என்றான் மகாகவி பாரதி.
எந்தத் தாயின் வயிற்றில், எந்த நேரம் நாம் பிறக்கிறோம் என்பதையும், நமக்கு என்ன பெயர் சூட்டப்படும் என்பதையும் இறைவன் குறிக்கிறான்.
பின்னாளில், நாம் வைத்துக் கொள்கிற புனைபெயரைக்கூட இறைவனே குறித்திருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்.
உதாரணமாக,
என் பெற்றோர் எனக்கிட்ட பெயர் முத்தையா. இது வைத்தீசுவரன் கோயில் சுவாமியின் பெயர். அந்த சுவாமி எங்கள் குலதெய்வம்.
என் சகோதரருக்கு மறுபெயர் முத்துக்குமரன்.
என் பெயரை மாற்றி ஒரு புனைபெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியபோது `கண்ணதாசன்என்ற பெயர் எனக்கேன் தோன்றிற்று?
அப்போது பாரதிதாசன், சக்திதாசன், கம்பதாசன் என்றெல்லாம் பலர் இருந்ததால் அதுமாதிரி ஒரு பெயரை வைத்துக்கொள்ள விரும்பினேன்.
உண்மைதான்.
காலங்களால் அந்தப் பெயர் எவ்வளவு பொருத்தமாகி விட்டது.
கண்ணனும் தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை!
நானும் எட்டாவது குழந்தை.
கண்ணனை வணங்கத் தொடங்கிய நாளில் இருந்து எனக்கு அமைதியும் ஞானமும் வரத் தொடங்கின.
சரியாகத் தேடிப் பார்த்தால் ஏதாவது ஒரு நாடி சாஸ்திரத்தில் இதை நான் காணக்கூடும்.
பூர்வ ஜென்மத்தில் நான் யாராக இருந்தேன் என்பதும் தெரியக்கூடும்.
நாடி சாஸ்திரம் அதையும் சொல்கிறது என்கிறார் ஆதீனகர்த்தர்.
உதாரணமாக,
எகிப்து தேசத்தில் முன் பிறவியில் மன்னராக இருந்த ஒருவரே, இன்று திருநெல்வேலி ஜில்லாவில் சிங்கப்பட்டி ஜமீன்தாராகப் பிறந்திருக்கிறார்என்று `அநாகத வேதம்என்ற நாடி சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
அதில், முன் செய்த தீவினை இன்னதென்றும், அதற்குரிய பரிகாரம் இன்னதென்றும் குறிப்பிடப் பெற்று அந்தப் பரிகாரம் செய்தபின் அவருடைய வியாதி பூரணமாகக் குணமாகி விட்டதாம்.
ஒவ்வொரு உயிரும் மறுபிறப்பெடுத்து நன்மை தீமைகளை அனுபவிக்கிறதுஎன்னும் இந்துக்கள் நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.
`பதவீம் பூர்வ புண்ணியானாம்என்பது வடமொழி சுலோகம்.
`மேலைத் தவத்தளவே யாகுமாம் தான்பெற்ற செல்வம்என்பதும் தமிழ் மூதுரை.
முற்பிறப்பின் கருமவினைகள் அடுத்த பிறப்பிலும் தொடர்கின்றன.
அலகாபாத்தில் செல்வந்தர் மகனாகப் பிறந்தவர் பரத கண்டத்தில் பிரதம மந்திரியானதும், சேரிவாழ் மக்களிடையே பிறந்தவர் பாதுகாப்பு மந்திரியானதும், மராட்டியக் குடிமகன் ஒருவர் நிதி மந்திரியானதும், காஞ்சியிலும், திருவாரூரிலும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்கள் முதல் மந்திரிகளானதும் அவர்களுடைய திறமையினாலா? முயற்சியினாலா?
எட்டாம் வகுப்பை எட்டிப் பார்க்காத ஓர் ஏழை, தமிழகத்தின் தலைவனாகி, ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கட்டி நூற்றுக்குத் தொண்ணூறு பேரைப் படிக்க வைத்தது எப்படி முடிந்தது?
இட்டமுடன் என் தலையில் இன்னபடி
என்றெழுதி விட்ட சிவன்.
என்றொரு பாடல் சொல்கிறதே, அதன் பொருள் என்ன?
ஒவ்வொரு உயிரின் வாழ்வும் தாழ்வும், வறுமையும் வளமும், நோயும் சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனின் இயக்கமே என்பதைத் தவிர வேறென்ன?
முற்றி முதிர்ந்த ஞானம் இவற்றை அடையாளம் கண்டு கொள்கிறது.
முயற்சியால் ஆகக்கூடிய திருவும், தெய்வத்தின் இயக்கத்தால் கிடைப்பதே.
ஆண்டவனின் தீர்ப்புக்கு யாரும் தப்பமுடியாது.
ஒரு தலைவருக்குப் புற்றுநோய் வந்தபோது நாத்திகம் பேசியதால் வந்ததுஎன்றார்கள்.
ஆத்திகம் பேசிய ரமணரிஷிக்கு ஏன் வந்தது?
சிலருக்குப் பொடி போட்டதால் வந்தது என்றார்கள்.
பொடி போடாதவர்களுக்கு ஏன் வந்தது?
`புகையிலை உபயோகிப்பதால் வருகிறதுஎன்கிறார்கள் மருத்துவர்கள்.
அதை உபயோகிக்காதவர்களுக்கு ஏன் வருகிறது?
ஆத்திகராக இருந்ததால், ஒருவர் நீண்டநாள் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள்.
நாத்திகர்களும் நீண்ட நாட்கள் வாழ என்ன காரணம்?
அளவோடு சாப்பிடுகிறவர்கள் அதிக நாள் வாழலாம் என்கிறார்கள்.
அளவின்றிச் சாப்பிடுவோரும் வாழ்வதற்கு என்ன காரணம்?
இன்பத்தையோ துன்பத்தையோ தெய்வம்தான் வழங்குகிறது என்பதைத் தவிர வேறு என்ன காரணம்?
எந்தக் கணக்கைக் கொண்டு தெய்வம் வழங்குகிறது?
ஒவ்வொரு பிறவியின் கணக்கைக் கொண்டும் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது.
நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூலை எழுதியவர், அறுபது ஆண்டிலேயே காலமானதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆகவே, நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் என்று ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.
நாம் பிறந்துள்ள இந்தப் பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து, அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப் பிறப்பில் பாதியையும், அடுத்த பிறப்பில் பாதியையும் அனுபவிக்கின்றோம்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
என்றான் வள்ளுவன்.
ஆகவே பிறவிகள் ஏழு என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, நம்மவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த பிறப்பு என்பது நம்முடைய ஆசையின்படியே விளைய இறைவன் அனுமதிப்பானானால், அடுத்த பிறவியில் நான் ஒரு நாயாகப் பிறந்து, இந்தப் பிறவியில் என்னிடம் நன்றியோடு நடந்தவர்களுக்கெல்லாம், அந்த நன்றியைத் திருப்பிச் செலுத்த விரும்புகிறேன்

  நன்றி:  ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள்
 நன்றி:http://www.mugaputhagam.in
என்றும் குருவின் சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்,அந்தியூர்

சீர்வளர்சீர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்!



சீர்வளர்சீர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்!

அடிகளார் அவர்களின் பிறப்பு புண்ணியப்பிறப்பு எனப் போற்றத்தக்கதாகும். இவர் பிறந்த ஊர் அவிநாசி வட்டம் முதலிபாளையம் என்னும் ஊராகும். இவருடைய தந்தையார் தவத்திரு. சிவராமசாமி அடிகள் என்றும் பெயரினர்; இவர் சிரவணபுரம் கௌமார மடாலயத்தைத் தோற்றுவித்த தவத்திரு. இராமனாந்த அடிகளோடு தொடர்புடையவர். கீரணத்தம் தவத்திரு மருதாசல அடிகளைக் குருவாகக் கொண்டவர்.இராமனந்த அடிகளையும் மருதாசல அடிகளையும் தமது தோட்டத்தில் தங்கியிருக்கச் செய்து பணிவிடை புரிந்து அவர்களாலேயே விநாயகப் பெருமான் திருக்கோயில் அமைத்துக் கொடுக்கப்பெற்று விநாயகர் வழிபாடும் வேற்பூசையும் செய்து வந்தவர்கள். தவத்திரு சிவராமசாமி அடிகள் ஆவார். இவருடைய அருட்துணைவியராக அமைந்த கப்பிணி அம்மையார், கணவனாருடைய சமயநெறி வாழ்வுக்கு உறுதுணையாய் ‘மனையறத்தின் வேராய்’ அமைந்து விளங்கியவர்கள். இப்பெற்றோர்களின் பெருமையினையும் புண்ணியத்தினையும் விளக்கும் படியாக இவர்களுக்கு மூன்றாவது மகவாகக் குரோதன ஆண்டு புராட்டாசித் திங்கள் மகம் நாளில் அவதரித்தார், நமது அடிகளார். இவரது பிறப்பு “தவஞ்செய்த நற்சார்பில் வந்துதித்த ஞானத்தை நண்ணுதல்எனவரும் மெய்கணாரின் திருவாக்கிற்கு ஏற்பத் தோன்றிய அருட்பிறப்பாகும்.

      அடிகளார் அவர்கள் வழக்கப்படியே இளமையில் தொடக்கக் கல்வி கற்றுத் தமது 15ஆவது வயதில் 1941ஆம் ஆண்டு சிரவணபுரம் கௌமார மடாலயத்திற்கு வந்து மடாலயத் திருப்பணிகள் செய்து வரலாயினர். நாளடைவில் தவத்திரு. இராமானந்த அடிகளின் திருவருளுக்குரியவராய் அவருக்கு அணுக்கத் தொண்டராக இருக்கும் பேறு பெற்றனர். அங்கு தவத்திரு. கந்தசாமி அடிகளிடம் சமய இலக்கியங்களைக் கற்றுணர்ந்தார்; கவிபாடுவதிலும் வல்லவரானார்.

  
      நன்றி: சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் ஸ்வாமிகள் அவர்கள் 

                          
                         ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                              சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!


கந்தரனுபூதி--வாசுகி அம்மையார் பொழிவு !

கோவையில் வாசுகி கண்ணப்பனாரின் சைவத்தமிழ் முழக்கம் :-


                சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அவர்கள் 
                           
சைவ சித்தாந்தப் பெருமன்றம் 110 ஆம் ஆண்டுவிழா மாநாடு சிரவையாதீனம்  தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களுடன் இணைந்து கோயம்பத்தூர் சின்னவேடம்பட்டி, கௌமார மடாலயத்தில், 2015 மே மாதம் 15, 16,, 17 நாள்களில் சிறப்பாக நடைபெற்றது.
    
 அவ்வமயம் 16 ஆம் நாள் நடந்த சைவ மகளிர் மாநாட்டில் ‘கந்தர் அநுபூதி’ என்னும் தலைப்பில் முனைவர் வாசுகி கண்ணப்பன் மிகச் சிறப்பான சொற்பொழிவு ஆற்றினார்.இவர் பல்மருத்துவத் துறையில் புகழ்நிறுவியவரும் சிறந்த தமிழறிஞருமாகிய நம் அனைவரின் நினைவில் வாழும் ஜே.ஜி.கண்ணப்பன் அவர்களின் துணைவியார் என்பதும் முழுநேர ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற வாசுகி அவர்கள் முத்தமிழிலும் மூதறிவு பெற்ற தமிழறிஞர் என்பதும் இங்குக்  குறிப்பிடத் தக்கவையாகும்..
தமது சொற்பொழிவின் தொடக்கத்தில் தென்னாட்டின் பெருமையைச் சிறப்பாகப் பின்வருமாறு அவர் தொகுத்துரைத்தார்

“கந்தரநுபூதி படைத்த பெருமகனார் அருணகிரிநாதசுவாமிகள், நான்கு திசைகளை வர்ணிக்கும்போது வடதிசை, குடதிசை, கீழ்த்திசை, செஞ்சொல் மாதிசை என்கின்றார். மா என்கின்றோபோதே அதன் பெருமை உள்ளங்கை நெல்லிக்கனியென உணரமுடிகிறது. அப்படிப்பட்ட தென்திசை உயர்ந்த திசை  என்று, 500ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வில்லிபுத்தூர் ஆழ்வார் ‘’சித்திக்கொரு விதையாகிய தென்னாடு’’ என்று கூறியுள்ளார். 1008 சிவத் தலங்கள் கொண்ட திருநாடு தென்னாடு. அதனால்தான் ‘’தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி’’ என்று பாடிப் பரவசமடைந்தனர். 63 நாயன்மார்களும், 12ஆழ்வார்களும் அவதரித்த புண்ணிய நாடு தென்னாடு. மெய்கண்ட சிவம், அருணந்தி சிவம், அருணகிரிநாதர், குமரகுருபரர், தாயுமானவர், இராமலிங்க அடிகளார், பாம்பன் சுவாமிகள் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழையடி வாழையாக வாழ்ந்துவரும் நாடு தென்னாடு. முச்சங்கம் கண்ட நாடு தென்னாடு. அத்தகைய தென்னாட்டில் பிறந்தோம் என்ற எண்ணத்தால் புளங்காகிதம் அடைந்து நாம் பெருமைப்படவேண்டும்.” என்று தென்னாட்டின் பெருமயைக் கூறியவர் “ அத்தகைய பெரியவர்களில் ஒருவரான அருணகிரியார் படைத்த கந்தரநுபூதியைப்பற்றி சிந்திக்கும் பாக்கியம் பெற்றேன் என்று எண்ணுகின்றபோது “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே” என்று பாடத்தோன்றுகின்றது. ” என வியந்துரைத்தார்.



அடுத்து அருணகிரிநாதரின் மாண்பை விளக்கும்வகையில் அவர் பேசியதாவது:
கந்தர் அநுபூதியின் ஆசிரியர் அருணகிரிநாதசுவாமிகள் ஆவார். உயிரையும், உணர்வையும், உரையையும், அறிவையும் தான் வணங்கும் அறிவின் உருவமாக, தமிழின் கடவுளாக, அழகின் சொரூபமாக, ஞானத்தின் விளக்கமாக விளங்கும் முருகப்பெருமானுக்கு அர்ப்பணித்து மகிழ்ச்சிகொண்டவர், மகிழ்ச்சி கண்டவர். இவர் 14ஆம் நூற்றாண்டில்,  முத்தம்மைக்கு மகனாகப் பிறந்தவர். தாய், சிவபெருமானை வேண்டி தவமிருந்து பெற்றார் இக்குழந்தையை. இவர் தாயிற்குப்பின் தமக்கை ஆதிலட்ஷிமியால் பேணப்பட்டவர். பிரபுட தேவ மகாராஜன் காலத்தில் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். ஆண்டவனிடம் உபதேசம் பெற்றவர்களில் மனித சமுதாயத்தில் அருணகிரிநாதரைத் தவிர வேறுயாரும் இல்லை. முருகபெருமானின் திருவருள் முற்றும் பெற்றவர். உலகப்பற்றை முழுவதுமாகத் துறந்த மா முனிவர். அகந்தைகொண்ட வில்லிபுத்தூராரை வென்று, தண்டிக்காது புத்தி புகட்டியவர். அதனால் ‘’கருணைக்கு அருணகிரி’’ என மனதார, வாயாரப் போற்றப்பட்டவர். போற்றப்படுபவர். இவரைப்போல் உண்மைப் பொருள்களைத் தெளிவாகச் சொன்னவர்கள் இல்லை என்பதை
               ‘’ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
            மெய்யாக ஓர் சொல் விளம்பினர்யார் – வையகத்தோர்
            சாற்றரிதென்று ஏசற்றார் தன்னனையாய் முக்கண் எந்தை
            நாற்றிசைக்கும் கைகாட்டினான்’’
எனப்பாடி தாயுமானவர் அவருக்கிணை அவர் மட்டுமேயாவார் என்கின்றார். சிவபெருமான் வாய்விட்டுச் சொல்லாததைச் சொல்லியவர் அருணகிரியார்.
    

 இவர் மதாணி என்று கூறப்படும் நவரத்ன மணிகள் கொண்ட பதக்கமாக, திருப்புகழ், திருவகுப்பு, திருஎழுகூட்டிருக்கை, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், கந்தரலங்காரம் கந்தரந்தாதி, கந்தரநுபூதி புனைந்து, படைத்து கந்தனுக்கு அதனை அணிவித்து மகிழ்ந்தவர். அதனில் இக்கந்தரநுபூதி ஒரு மணியாகும்.
     அருணகிரியார் யாரும் இதுவரை பாடியிராத சந்தப்பாடல்களானத் திருப்புகழைப் பாடினார். ஆனாலும மன நிறைவு அடையமுடியவில்லை. ஆசைப் பெருகிக்கொண்டே இருந்தது. அவரே,
           ‘’ஆசை கூர் பக்தனேன் மனோ பத்ம மான பூவைத்து நடுவேஅன்
           பான நூலிட்டு நாவிலேசித்ர மாகவே கட்டி ஒருஞான
           வாசம்வீ சிப்ர காசியா நிற்ப மாசிலோர் புத்தி அளிபாட
           மாத்ருகா புஷ்ப மாலைகோலப்ர வாள பாதத்தில் அணிவேனா?’’ எனப் பாடுகின்றார். மாத்ருகா மாலை என்பது நெடுங்கணக்குப் பெயர். எழுத்துக்களின் வரிசைக்குப் பெயர்.  அதாவது மனமாகியத் தாமரையைக் குஞ்சமாக வைத்து, சொல் மலர்களை அன்பான நூலினால் மிக மிக அழகாகவும், விளக்கமாகவும் கட்ட, அதில் ஞானமாகிய மணம் வீசவேண்டும். அந்த ஞான மணத்தைக்கண்டு பெரியோர்களாகளுடைய உள்ளங்களாகிய வண்டுகள் மொய்க்கவேண்டும். அப்படி ஓர் அழகான பூ மாலையை 


உன்னுடைய பவளம்போன்ற திருவடிக்குச் சாத்தவேண்டும் என்று அருணகிரிநாதர் ஆசைப்பட்டு அந்த ஞான முதிர்ச்சியில் பாடியதாகும், இது மிகச் சிறந்த பாராயண நூல். தாயுமானசுவாமிகள், திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் மற்றும் பலரும்  இப்பாடலை வெகுவாகப் புகழ்ந்துப் பாராட்டி மகிழ்ந்துள்ளார்கள். இவருடைய சரிதத்தை பலரும் பல வகைகளில் விரிவாக எழுதியுள்ளனர்.”
அருணகிரியாரின் பெருமையை விரித்துரைத்த வாசுகி கண்ணப்பனார் கந்தர் அனுபூதி பற்றிய ஒரு பத்திச்சுவைமிக்க பொழிவினை ஆற்றி அவையோர் அறிவுக்கு விருந்தளித்தார்.அவரது முழுப்பொழிவையும் இங்கே அளித்துள்ளோம்:


                                கந்தர்    
     முருகனுக்குப் பலப் பல பெயர்கள் உண்டு. ஒவ்வொரு பெயருக்கும் தனிச் சிறப்பு உண்டு.   நமது கௌமார மடம் வியப்புக்குரிய வகையில் 42 பெயர்களையும் அதற்கான பயன்கள் 58 எனவும் பதிவு செய்துள்ளது. அதனை நம் சைவசித்தாந்த இம்மாத இதழும் வெளியிட்டுள்ளது போற்றுதற்குரியது. வாகீச கலாநிதி கி.வ.ஜகந்நாதன் அவர்கள் படைத்த அநுபூதி விளக்கம் என்ற நூலில் வியக்கும் வண்ணம் முருகனுக்கு 100 பெயர்களைப் பதிவு செய்துள்ளார்.
     முருகனின் பல பெயர்களில் ஒன்றான கந்தர் என்ற சொல்லுக்கு பல பொருட்கள் உண்டு. இச்சொல்பற்றி வடமொழியில், ஸ்கந்தன் என்பதற்கு. நிகண்டில், பகைவரின் பராக்ரமத்தை ஒடுக்கச் செய்யக்கூடிய புஜபலபராக்ரமசாலி என்கின்றது. கந்தர் என்றால் தமிழ் இலக்கணத்தின்படி சேர்க்கப்பட்ட ஒன்று, சேர்க்கப்பட்டவன் என்று பொருள் கூறப்படுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் சிவபெருமான் பார்வதியிடம்    
     ‘’சேயவன் உருவம் ஆறும் திரட்டி நீ ஒன்றாய்ச் செய்தாய்
      ஆயதனாலே கந்தன் ஆம் எனும் நாமம் பெற்றான்’’ என்பதாய் கூறுகின்றார். அதாவது ஆறு குழந்தைகளாக இருந்தவர்களை வாரி அணைத்து பார்வதி தேவியாரால் ஒரு குழந்தையாகச் சேர்க்கப்பட்டவர் என்கின்றார். கந்தர் கலிவெண்பாவும் இதே கருத்தைச் சொல்கின்றது.
           ‘’காமத்தால் கெட்டவன் தசரதன்
           குரோதத்தால் கெட்டவன் சிசுபாலன்
           லோபத்தால் கெட்டவன் துரியோதனன்
           மோகத்தால் கெட்டவன் இராவணன்
           மதத்தால் நானே பெரியவன் என்று கெட்டவன் சூரபத்மன்
           மாற்சரியத்தால் கெட்டவன் கம்சன்’’

மனதின் உள்ளே இருக்கின்ற பகைவர்களாகிய இந்த காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் முதலியவைகளை அழிக்கிறவனுக்கு கந்தன் என்று பெயர். இந்த அறுவர்களையும் அறுபவர்களாக்கிவிடுபவன் கந்தன். 
     
யானைக் கட்டுத்தறிக்கு கந்து என்று பெயர். ‘’கந்து களிக்குங் கடாக் களிற்றின் வந்து…..’’ என்று புகழேந்திப் புலவர் நளவெண்பாவில் பாடியுள்ளார். உயிர்களாகிய யானைகளைக் கட்டுந் தறி போன்றவன் கந்தன். கந்தன் என்றால்  பற்றுக்கோடு என்றொரு பொருள் உண்டு. உயிர்களுக்கு உலகப்பற்றாகிய நோயைத் தீர்க்கும் பற்றுக்கோடாக அவர் இருப்பதால் கந்தன் என்ப்படுகிறார். பிரிந்திருக்கும் உயிர்களை பிரம்மமுடன் அனுபூதியால் சேர்க்கின்றவர்.
                                    

                               அநுபூதி
     அநு என்றால் தொடர்வது என்று பொருள். ‘’பூதி’’ என்றால் ஒன்றுபடுதல் என்று பொருள். ஆகவே கந்தரோடு ஒன்றுபடுவது கந்தர் அநுபூதி. சிவத்தோடு ஒன்றுபடுவது சிவாநுபூதி.
     அனுபவம் என்பது experience. அனுபூதி என்பது ever continuing experience தொடர்ந்த மறக்க இயலா அனுபவம். அதாவது ஒரு சிறிதும் மனதிலிருந்து நீங்காது நிலைத்திருப்பது. அருணகிரிநாதர் முருகபெருமானால் அருள் பெற்றபின் அவ்வுணர்விலேயே நீக்கமற நிலைபெற்றுவிட்ட நிலை. அதாவது ஜீவனாய் இருக்கின்ற தன்னை, பிரமம் தன்னுடன் இணைத்துக்கொண்டு, நீங்கா நிலையில் நிலைத்துவிட்ட நிலைதான் அநுபூதி நிலை.    
    
                 பல்வேறு கருத்துகள்
     அநுபூதியைப் பற்றிய பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அருணகிரியாரின் நூல்களில் வில்லிபுத்தூராருடன் வாதம் செய்யும் வகையில் படைக்கப்பட்ட கந்தரந்தாதி மட்டும்தான் முழுமையாக படைக்கப்பட்டது. மற்றவை சிதறிக்கிடந்த பல பாடல்களையெல்லாம் கண்டறியப்பட்டு தா.சுப்பிரமணிய பிள்ளை, தணிகைமணி வ.சு செங்கல்வராயப் பிள்ளை அவர்களால் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டது. அதிலும் பிரபுட தேவமகாராஜாவின் வேண்டுகோளின்படி, அவரின் கண்பார்வையைப் பெருவதற்காக பாரிஜாத மலர் கொண்டுவருவதற்காக கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கிளி உருவம் எடுத்த நிலையில், பொறாமைகொண்ட தேவி உபாசகர் சம்பந்தாண்டாரின் சூழ்ச்சியினால் உடல் எரிக்கப்பட்டு கிளி உருவிலேயே இக்கந்தரநுபூதி பாடப்பட்டது என்கின்றனர். இதனை, பாம்பன் சுவாமிகள் ஏற்கவில்லை.
   

முதன் முதலில் கந்தரநுபூதியாகத் தொகுக்கப்பட்டது 43 பாடல்கள்தான். அடுத்து தொகுக்கப்பட்டது 51 பாடல்கள். இதனில் முதலில் விநாயகர் காப்புச் செய்யுளாக ’’நெஞ்சக்கனகல்லும்’’ என்று தொடங்கப்பட்டு. நடைமுறையில் பாடப்படுகிறது.. இவ்வகையில்தான் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களும் அதற்கான உரையை மிக அழகாக எழுதியிருக்கிறார். ஆனால் பாம்பன் சுவாமிகள் இதனையும் ஏற்கவில்லை. நூலின் முதல் பாடலான
           ‘’ஆடும் பரிவேல் அணிசே வல்எனப்
            பாடும் பணியே பணியா அருள்வாய்
            தேடும் கயமா முகனைச் செருவில்
            சாடும் தனியா னைசகோ தரனே’’
என்பதில் யானை என விநாயக பெருமான் குறிக்கப்படுவதால் இதுவே காப்புச் செய்யுளாகும் என்கிறார். மேலும் 43 ஆம் பாடலில்
           ‘’ தூசாம் அணியும் துகிலும் புனைவாள்
            நேசா முருகா நினது அன்பு அருளால்
            ஆசா நிகளம் துகள்ஆ யினபின்
            பேசா அநுபூ திபிறந் ததுவே’’   
என்பதில் பேசா அநுபூதி பிறந்ததுவே எனக்கூறி முற்றுப்பெற்றதாகக் கருதுகின்றார்.
     101 பாடல்களைக்கொண்டும் கந்தரநுபூதி படைக்கப்பட்டுள்ளது.  ஆனால் அது பெருமளவு அங்கீகரிக்கப்படவில்லை.
   

  மேலும் 51 பாடல்களுக்கும் சக்கரம் வரைந்து பூசை செய்யும் வகையிலும் படைக்கப்பட்டது. மறைமலை அடிகளாரின் சீடர் மாம்பாக்கம் அழகரடிகள் அவர்கள் அச்சக்கரத்தை உருவாக்கினார். ஆனால் பாம்பன் சுவாமிகள் சக்கரம் வைத்து வழிபடுவதை ஏற்கவில்லை. இவைகள் எல்லாமே ஆராய்ச்சிக்குரியது. இருப்பினும் உலவும் கருத்துகளைத் உவக்கவேண்டும் என்ற நிலையில் உவந்து மகிழ்கின்றேன்.   
   கந்தரநுபூதி மிக எளிய வடிவில் நான்கு சீர்களில், நான்கு அடிகளில் கலிவிருத்தத்தால் அமைத்து எளிதில் மனனம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாடல்கள் உருவில் சிறியது, பொருளில் ஆழ்ந்த நுட்பமும், திட்பமும் நிறைந்த சாத்திர நூலாகும்.  படிப்பவர்களுக்கு மிகச் சுலபமாகப் படைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளி வடிவில், கிளி மொழியில் அமைந்துள்ளதால் பாடுவதற்கு எளிமையாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

                    கிளியின் வாக்கு
     அருணகிரி பெருமான் மற்றவர்களைப்போல் இறக்கவில்லை, திடீரென கிளியாக மாறி மறைந்துவிட்டார். இறைவனின் திருக்கரத்தில் நிலைகொண்டார் என்ற கருத்தும் நிலவுகின்றது. . அந்நிலையில் கந்தரனுபூதியைப் பாடினார். கிளி என்றால் பொதுவாகச் சொல்லப்படுவது ‘’சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை’’ என்பது. கிளி தானாகப் பேசாது. சொல்லிக்கொடுத்தால் திருப்பிச் சொல்லும். அருணகிரிநாதர் இவ்வுலகில் இருந்தவரை இறைவன் அருள் துணையிருக்கத் தாமே நினைத்துப் பாடினார். இப்பௌதிக உலகைவிட்டுச் சென்றார். இறைவனின் திருவருள் மயமான உடம்புடன் கிளியாக இறைவன் திருக்கரத்தில் நிலைபெற்றார். அப்பொழுது அக்கிளி பேசியது. அநுபூதியைப் பாடியது. கிளியா பாடியது. முருகன் சொன்னார் கிளி அப்படியே சொன்னது.  மனிதப் பிறவியைப்பாடிய பாட்டில் மனித உள்ளம் இருக்கும். அநுபூதியில் இறைவனின் செய்திகளெல்லாம் நிறைந்திருக்கும். அதனில் மற்ற பாடல்களில் இல்லாத ஒரு ஞான மணமும், திருவருட் செறிவும் நிறைந்திருப்பதை உணரலாம். இதனை உணர்ந்த நிலையில் இப்பாடலைக் கிளி மொழியில், கிளி குரலில்
           ‘’நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந்(து) உருகந்
            தஞ்சத் தருள்சண் முகனுக்(கு) இயல்சேர்
            செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே
            பஞ்சக்கர ஆனைபதம் பணிவோம்’’
எனப் படிக்கும் பழக்கமும் சிலர் கொண்டிருந்தனர் என்கின்றனர். 40 வருடங்களுக்கு முன் வாழ்ந்த திண்டுக்கல் வக்கீல் பி.கே.சண்முநாதன் அவர்களும் இதனை ஏற்கின்றார்கள்.
     பேரறிஞர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் முதல் பாடலை ‘’ஆடும்பரி வேல்’’ என ப்ரணவத்தை வைத்து ஆரம்பித்துள்ளது போற்றுதற்குரியது என்று பாராட்டுகின்றார்.


             சிந்திப்பதற்கான சில கருத்துகள்
      இறைவனுக்கு முக்கியமான இரண்டு இலக்கணங்கள் உண்டு. அதாவது சொரூப இலக்கணம், தடத்த இலக்கணம். சொரூப இலக்கணத்தில் இறைவன் தன்னில் தானாக இருப்பவர். எந்த ஊரோ, பெயரோ இருக்காது. தடத்த இலக்கணத்தில் அயலிடத்தில், அருகில், வடிவங்கள், அலங்காரத்துடன் அமைக்கப்படலாம். இப்பாடல், அநுபூதி என்பதால் இது சொரூப இலக்கணத்தில் அகண்டாகாரமாகத்தான் இருத்தல் வேண்டும். எங்கும், எந்தப் பெயரும், தலமும் குறிப்பிடப்படமாட்டாது. ஏனெனில் அனைத்தும் கடந்த நிலையில், இறைவனைவிட்டு என்றும் நீங்கா நிலையில், உணர்வில் கலந்திருக்கும் நிலையில் உள்ளவர் அருணகிரியார்.
     51 பாடல்களிலும் எங்கும் எத்தலமும், எந்தப் பெயரும் குறிப்பிடப்படவில்லை. சமத்காரமாகத் தன் திறமையைக் காட்டுவதற்காக, சிவத்தலங்கள் விளக்கப்படுகின்றன. உதாரணமாக  11ஆவது பாடலில் மூன்றாவது வரியில் வரும் ‘’நாகாசலம்’’ என்பதற்கு திருப்பதி, திருச்செங்கோடு எனக்கூறுவர். ஆனால் நாகா என்றால் இளமை, அசலம் என்றால் அசையாதது, குன்றாதது எனப் பொருள்படும். எனவே இளமை குன்றாதவனே என்று கூறுவதாக அமையும். ஆகவே கந்தரநுபூதி  அநுபூதி என்ற நிலையில் சொரூப இலக்கணத்தில் அமைந்துள்ளது சொரூப ஞானத்தைத் தரவல்லது எனத் தெளிவுறலாம்,
     சொரூப ஞானம் எனப்பார்க்கும்பொழுது காலத்தின் அருமை கருதி ஒரு பாடலைப்பார்க்கும் நிலையில் மிக முக்கியமான உயர்ந்தப் பாடலாகக் கருதப்படும் இரண்டாம் பாடலான,
      

              ‘’உல்லா சநிராகுல யோக விதச்
            சல்லாப விநோதனும் நீ அலையோ
            எல்லாம் அற என்னை இழந்த நலம்
            சொல்லாய் முருகா! கர பூபதியே’’   

என்ற பாடலில், உல்லாசம் என்பது எக்காலத்திலும் மாறுபாடில்லாது ஒரே தன்மையுடன் அதாவது புத்தியில் சஞ்சலமில்லாது உறுதியாய் இருத்தல் என்பதாகும். நிராகுல என்பது ஞான வடிவானவன், அறிவுடையவன் என்பதால் துன்பம் வந்தபோதும் துன்பம் கொள்ளமாட்டான் என்றறியப்படும். யோகம் என்பது யோகத்தால்தான் இன்பம் வரும் என உணர்த்தப்படுகிறது. கணவனும், மனைவியும் ஒன்றுபட்டால்தான் சிற்றின்பம், இறைவனும், ஆன்மாவும் ஒன்றுபட்டால்தான் பேரின்பம்.
     உல்லாசம் என்றால் சத்து, நிராகுல என்றால்  சித்து, யோகம் என்றால் ஆனந்தம். அதாவது சச்சிதானந்தமாகிய இறைவனே! என்ற ஆழமானப் பொருளைக் கொண்டுள்ளது.   அதாவது இறைவன் சச்சிதானந்தம் வேண்டுமென்று நினைக்கின்றான், பேசுகின்றான், பின் செய்கின்றான். இறைவன் உண்மை வடிவாயிருந்து நமக்கு அனைத்தையும் செய்கின்றான்.

·              உல்லாச, நிராகுல, யோகம் என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. உல்லாசம் என்றால், என்றும் ஒரே தன்மையாக மேன்மையாக இருத்தல். எது மேன்மையான மலை? திருபரங்குன்றம். அதுதான் மூலாதாரம், அதாவது உல்லாசம்.

·              நிராகுலம் என்றால் துன்பமற்று ஞானமயமாக இருப்பது. அதாவது திருச்செந்தூர். அது சுவாதிஷ்டானம்.

·         யோகம் என்ற வகையில் யோகக் கலையில் இன்பத்தைத் தருவது. அதுதான் பழநி மலை. அது மணிபூரகம்.

·         இத என்பது இதமாக இருப்பது. சுவாமி மலை. இது அநாகதம்.

·              சல்லாபம் என்றால் மலைகள்தோறும் விளையாடுதல். குன்றுதோறாடல் இது விசுத்தி.

·         விநோதம் என்பது பழமுதிர்ச்சோலை. அது ஆக்ஞை,
இப்படி ஆறு ஆதாரங்களில்  எழுந்தருளியுள்ள பெருமானே, நீ அல்லவா   உபதேசம் சொல்ல வேண்டும். எல்லாம் அற, நான் என்ற ஆணவம் நீங்க, என்னை இழந்த நலம் பெற்று,   ஞானம் பெறவைக்கவைக்கவேண்டும் என்ற கருத்தை உணர்ந்து தெளியலாம்.
   இறுதியாக உள்ள பாடல் கூட கந்தரநுபூதியில் உள்ளதா  என்பது உறுதியாகக் கூறமுடியாது. சேர்க்கப்பட்ட பாடலாகக்கூட இருக்கலாம், ஆனால் தவத்திரு கிருபானந்தவாரியார் அவர்கள் இப்பாடலைப் பாடித்தான் தன் சொற்பொழிவை நிறைவு செய்வார்கள்.
                 ‘’உருவா யருவா யுளதா யிலதாய்
               மருவாய் மலராய் மணியாய் யொளியாய்க்
               கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்\
               குருவாய் வருவா யருள்வாய் குகனே’’

என்ற பாடலில் உரு, அரு, உளது, இலது, மணம், மலர், மணி, ஒளி, கரு, உயிர், கதி, விதி, முதலிய எல்லாமாய் நின்று குகப் பரம்பொருளே! தேவரீர் அடியேனுக்கு குருவாக வந்து அருள் புரிவீர் என்று வேண்டுகின்றார். உருவாய் வருவாய் அருள்வாய் குகனே. அருவாய் வருவாய் அருள்வாய் குகனே, உளதாய், வருவாய் அருள்வாய் குகனே, இலதாய் வருவாய் அருள்வாய் குகனே, மருவாய் வருவாய் அருள்வாய் குகனே, மலராய் வருவாய் அருள்வாய் குகனே, மணியாய் வருவாய் அருள்வாய் குகனே. ஒளியாய் வருவாய் அருள்வாய் குகனே. கருவாய் வருவாய் அருள்வாய் குகனே, கதியாய் வருவாய் அருள்வாய் குகனே, விதியாய் வருவாய் அருள்வாய் குகனே, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! எனப்பாடி மன நிறைவு கொள்ளலாம்.”
வாசுகி கண்ணப்பனார் ஆற்றிய பொழிவு அனைவராலும் பாராட்டப்பட்டது.காரைக்காலம்மையாரின் கவின் தமிழோ!கோதைநாச்சியாரின் கொஞ்சுதமிழோ!என வியந்திடும் வகையில் நயமிக்க சொல்லாடலும் செவிக்கினிய இசை விருந்தும் வாசுகி அம்மையாரின் தனிச்சிறப்புகளாகும்.தம் துனைவர் வழிநின்று தமிழையும் சைவத்தையும் தம்மிரு கண்களாகப் போற்றி பல்வேறு இலக்கிய மைப்புகளில் வாசுகி அம்மையார் தமிழ்ப்பணி ஆற்றிவருவது இங்குக் குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும்.சென்னைக் கம்பன் கழகச் செயற்குழு உறுப்பினராகவும் அனைத்து இந்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றச் செயலாளராகவும் இவர் திறம்படப் பணியாற்றி வருகிறார்.
தமது சொற்பொழிவின் முடிவில் அவர் நிறைவாக உரைத்தவை:
கடல் மணலை எண்ணி விடலாம், பிறவிகளின் எண்ணிக்கையை எண்ணவே முடியாது. அப்படிப்பட்ட எண்ணிலடங்கா பிறவிகள் எடுக்கும் உயிரானது, விடாது நாள்தோறும் மனதினிலுள்ள மாசினைக் களையவேண்டும். அதாவது நான் என்ற மாசு அகற்றப்படவேண்டும் அகற்றினால்தான் பிறவிப் பிணியினின்று விடுபடமுடியும். ஆடைகளில், பாத்திரங்களில் உள்ள மாசு அதாவது அழுக்கினை அகற்ற அதற்கானப் பொருள்களைக் கொண்டு துலக்கவேண்டும். அதேபோல் ஆன்ம போதத்தினால் வரும் ஆசை, ஆசையினால் வரும் கோபம்,  கோபத்தினால் வரும் மயக்கம்,  மயக்கத்தினால் வருகின்ற தடுமாற்றம், தடுமாற்றத்தால் பிறரைக் கெடுக்கின்ற பகை போன்ற மனத்திலுள்ள நோய்கள் குணமாகவேண்டுமென்றால் ‘’கந்தர் அநுபூதி’’என்ற மருந்து உணரப்படவேண்டும், ஏற்கப்படவேண்டும், அன்றாடம் ஓதப்படவேண்டும். பல பிறவிகளில் சேர்த்துவைத்த வினைகள் ஒரு செயல்பாட்டில் தீருமா? என எண்ணலாம். அக்கருத்தை அப்பர் அடிகள்,
             “ விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
               உண்ணிய புகிலவை ஒன்று மில்லையாம்
               பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
               நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே’’
எனப்பாடி மிக அழகாக தெளிவுறுத்துகின்றார். ஆகவே கருணையே வடிவான முருகபெருமான் அவர்களாலேயே  அருளாசி வழங்கப்பெற்ற, அருணகிரிநாதசுவாமிகள் அவர்களால் வழங்கப்பட்ட கந்தரநுபூதியைப் படித்து, பாராயணம் செய்து முக்தி நிலை பெறுவோமாக! மேலும்,
             ‘’கந்தர் அனுபூதி பெற்று, கந்தர் அனுபூதி சொன்ன
               எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ’’
என்ற தாயுமானவர் பாடலை, என் ஆதங்கப் பாடலாகப் பாடி நிறைவுசெய்கின்றேன்.”  இங்ஙனம் அவையோர் ஆர்ப்பரிக்க, அனைவரும் பாராட்ட அவர்தம் [பொழிவை நிறைவு செய்தார்.
இத்தகைய பத்திப் பொழிவுகளை அவர் உலகெங்கும் நிகழ்த்தவேண்டும் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.தம் துணைவரின் அடியொற்றித் தளராது தமிழ்ப்பணியாற்றிவரும் அவரை நாம் அனைவரும் பாராட்டவேண்டும்.

                              நன்றி :http://paechu.blogspot.in/

                         என்றென்றும் குருநாதர் சேவையில் 
                         ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
                         ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்



                         ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                              சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!