வியாழன், 28 ஏப்ரல், 2016

பஞ்சேஷ்டியில் தீப வழிபாடு நடத்த நாள் உரைத்த ஜீவ நாடி


                                                             
                                  தீபம் ஏற்றி தொடங்கி வைக்கும் சித்தர் சுவாமிகள்
சென்னை வெள்ளம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அகத்திய சிவ சித்தர் சுவாமிகள் கொடுத்த பேட்டி இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதாவது இன்னும் அதிகமான வெள்ள பாதிப்புகளை மக்கள் சந்திக்க வேண்டும் என்பதே அது. அந்த பேட்டி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி. சித்தரிடம் பக்தர்கள் பிரார்த்தனை செய்து வெள்ளத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் சேதங்களில் இருந்து மக்களைக் காக்க என்ன வழி என்று கேட்டனர். அதற்கு பஞ்சேஷ்டி எனும் தலத்தில் அதிகமாக தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் பாதிப்பில் இருந்து ஓரளவு விடுபட முடியும் என்று சித்தர் பதில் உரைக்க சிறு ஆறுதல் கிடைத்தது. இந்த தகவல்களை அறிந்த காரைக்குடி அகத்தியர் திருமைந்தன் ஐயா அவர்கள் மதுரை இறையருள் மன்றம் பரமசிவம் ஐயா உட்பட பல நபர்களுடன் அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் சென்று நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளிடம் பஞ்சேஷ்டியில் எந்த நாளில் தீபம் ஏற்றினால் இயற்கைச்சீற்றம் குறையும் என்று ஞானஸ்கந்தர்  ஜீவ நாடியில் முருகப்பெருமானிடம் கேட்டு உரைக்குமாறு வேண்டுகோள் வைத்தார்கள். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் ஜீவ நாடியில் முருகனிடம் கேட்டு சித்ரா பௌர்ணமி அன்று தீபம் ஏற்றுங்கள் என்று உரைத்தார்கள். அவ்விதமே அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் குழுவினர் வேல் தீபம், சக்திகல தீபம் பிரமிடு தீபம் சிவ லிங்க தீபம் என 2108 தீபங்களை ஏற்றி உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு நடத்தினார்கள். ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜை இருந்ததால் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் இந்த தீப வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அகத்திய சிவ சித்தர் சுவாமிகள் அமாவாசை அன்று ஒரு நாள் மட்டுமே கருவறையை விட்டு வெளியே வரக்கூடியவர் இந்த தீப வழிபாட்டை துவங்கி வைத்து ஆசி கூறியது மிகவும் ஆச்சரியாமாக இருந்தது என்று அனைவருமே மகிழ்ச்சி அடைந்தனர். உலக நன்மைக்காக ஜீவ நாடியில் நாள் உரைத்து தீப வழிபாட்டிற்கு அருள் கொடுத்த ஞானஸ்கந்த மூர்த்தியை அனைவரும் ஒரு நிமிடம் கண்மூடி உலக நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வோம். அதன் படங்களில் சில....




ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-47


அதிருகின்ற கழல்களை அணிந்திருக்கின்ற உனது திருவடிகளைப் பணிந்து வணங்கும் உனது அடியேனாகிய  நான் அபயம் நீயே  என்று உண்மையாகிய  நிலையைக் காணுமாறு எனது இதயத்தில் இருந்து கிருபையாகிய கருணை புரிந்து எனது இடர்களும் சங்கையாகிய சந்தேகங்களும் கலங்கி ஒழிந்துபோகுமாறு அருள்வாயே
                                           
உமக்கு எதிராக ஒருவருமில்லாமல்  நடனமாடும் இறைவனாகிய சிவபெருமானின் ஒரு பாகமாகிய இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் பாலனே
                                                      
பதிகள் எங்கிலும் இருந்து விளையாடி, பல குன்றுகளிலும் அமர்ந்த பெருமாளே என்று நமது கௌமார குரு நாதர் அருணகிரிநாத சுவாமிகள் பாடியே திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாக மலர்கின்றது.
                                               
திருப்புகழ்
அதிருங் கழல்ப ணிந்து னடியேனுன்
     அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயந் தனிலி ருந்து  க்ருபையாகி
     இடர்சங் கைகள்க லங்க  அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி  நடமாடும்
     இறைவன் தனது பங்கி  லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து  விளையாடிப்
     பலகுன் றிலும மர்ந்த  பெருமாளே 

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                          
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
             ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                   சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

திங்கள், 25 ஏப்ரல், 2016

நாய் வளர்க்க அறிவுறுத்திய ஜீவ நாடி

                       தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி
எழுத்துக்கள் எதுவுமே எழுதப்படாத வெறும் பனை ஓலையில் ஒளி வடிவிலும் வரி வடிவிலும் சில தெய்வீகச் சின்னங்களின் வடிவிலும் தோன்றி முருகப்பெருமான் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளின் கண்களுக்குத் தென்படச் செய்து சில உள்ளுணர்வுகளைக் கொடுத்து யார் வந்து ஜீவ நாடி கேட்க அமர்கின்றார்களோ அவர்களின் கர்ம வினைகளைக் கரைக்கும்படியும் பாடல் வடிவில் முக்காலங்களையும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றார். உண்மையான ஜீவ நாடி என்பது  கலியுகத்தில் கிடைப்பது மிகவும் அபூர்வம் என்றே சொல்ல வேண்டும். நாடி ஜோதிடம் என்றாலே முகம் சுளிக்கின்ற ஒரு நிலையை தவறு செய்பவர்கள் சிலரால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஜீவ நாடியைப் பொறுத்தவரை எந்தவித எழுத்துக்களும் இல்லாமல் யாராலும் எழுதப்படாமல் சித்தர்களும் தேவதைகளும் தோன்றி வாக்குரைப்பதாகும். இது அருள்வாக்கு எனும் பட்டியலிலும் இடம் பெறாது. அருள்வாக்கு என்பது உள்ளுணர்வினால் உரைப்பது. ஜீவ நாடி என்பது ஓலைச்சுவடியில் தோன்றும் சித்தர்களால் உரைப்பது. ஜீவ நாடி படிக்க பூர்வ ஜென்ம தவவலிமையோடு மிகுந்த ஒழுக்கம் தேவையாகும். நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் பற்றி அனைவருமே நன்கு அறிவார்கள். தவ வலிமையோடு சீரிய ஒழுக்கம் உடையவர். முன் ஜென்ம கௌமார நெறியில் வந்தவர். இப்படி தொழில் முறையில் அல்லாமலும் வியாபார ரீதியில் அல்லாமலும் அருள் நோக்கிலேயே நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் செயல்பட்டு வருவதால்தான் கடந்த 20 ஆண்டுகளாக இந்த சேவையை எந்தவித விமர்சனங்களும் இன்றி செய்ய முடிகின்றது என்பது நிச்சயம், நிதர்சனம். சத்தியமான உண்மையாகும்.இப்படி இருக்கின்ற நிலையில் ஒருவர் நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் தவித்து வரும் நிலையில் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் மூலம் ஜீவ நாடி கேட்டு தற்போது விரைவில் குழந்தை பிறக்கின்ற நிலையில் இருக்கின்றார் என்பது ஆச்சரியமான செய்தி. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிகாரங்கள் ஜீவ நாடியில் உரைக்கப்பட்டு இப்போது இன்னும் ஒரு மாதத்தில் முருகன் அருளால் குழந்தை பிறக்க இருக்கின்றது. அவருக்கு மீண்டும் ஜீவ நாடி உரைக்கும் போது ஓலைச்சுவடியில் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளுக்கு ஒரு நாய் வடிவம் காட்சி கொடுத்திருக்கின்றது. அதைப்பார்த்த சுவாமிகள் உன் வீட்டில் இருக்கும் வயதான நாய் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் விரைவில் ஒரு குட்டி நாய்க்கு ஏற்பாடு செய்து வளர்க்குமாறு உரைத்த உடனேயே வந்தவருக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. காரணம் இது பற்றி சுவாமிகளுக்கு ஏற்கனவே தெரியாது.சுவாமி உண்மைதான் இப்போது இருக்கும் நாய் வயதாகிவிட்டதால் படுத்த படுக்கையாக இருக்கின்றது என்பதால் சென்ற வாரம் தான் ஒரு குட்டி நாய்க்கு ஏற்பாடு செய்ய பணம் கொடுத்திருக்கின்றேன் என்றார். அதற்கு நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அதுதான் நல்லது குழந்தை பிறக்கும் இந்த நேரத்தில் ஒரு நாய் வளர்க்கத் துவங்கினால் அது பைரவர் ஆசியைப் பெற்றுத்தரும் என்று உரைத்தார்கள். நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களை சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அவர் மகிமை தெரிவதில்லை. அருளாளர்கள் நம் சுவாமிகளிடம் இருக்கின்ற சக்தியை உணார்ந்து பலன் அடைகின்றார்கள் என்பது கண்கூடு.

                        ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

அரசு பணி கிடைக்க அருள் புரிந்த ஜீவ நாடி

                                                  ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி
ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வருகின்ற வாக்கு அப்படியே 100% பலித்து வருகின்றது. யாருக்கு பிராப்தம் இருக்கின்றதோ அவர்களுக்கு முருகப்பெருமான் ஜீவ நாடி மூலம் வாக்குரைத்து வளமான வாழ்வைத் தந்தருள்கின்றார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் தமது 13 வயது முதலாகவே முருக உபாசனை செய்து இந்த ஜீவ நாடி படிக்கின்ற தவ வலிமையைப் பெற்று இருக்கின்றார்கள். இந்த விதமாக ஒரு இளைஞர் ஜீவ நாடி கேட்க ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளை வணங்கி அமர்ந்தார். அந்த இளைஞனுக்கு உடனடியாக அரசுப் பணி கிடைக்கும் என்று வாக்கு உரைத்தார். அந்த இளைஞர் மகிழ்ச்சியடைந்தார். அதே போல் அரைஞான் கயிறு அணியாமல் இருக்கின்றாய் அது உனக்கு நலமல்ல உடனே அரைஞான் கயிறு அணிந்து கொள்ளவும் என்று அறிவுரை முருகப்பெருமான் ஜீவ நாடியில் சொல்வதாக ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் உரைத்த உடனேயே அந்த இளைஞனுக்கு தூக்கி வாரிப்போட்டது. தாம் மட்டுமே அறிந்த இந்த இரகசியத்தை முருகன் உரைத்து விட்டாரே என்று சொல்லி கண்ணீர் மல்கினார் அந்த இளைஞர். இப்போது அந்த இளைஞனுக்கு ஜீவ நாடி மீது நம்பிக்கை வந்தது. அடுத்து சில ஆலயப்பரிகாரங்களை உரைத்து இதை செய்து விட்டு அடுத்து ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வந்து கேட்கும்படி முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்தார். பரிகாரங்களைப் பொறுத்தவரை மக்களது கர்ம வினைகளைத் தீர்க்கும் நோக்கிலேயேதான் முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைக்கின்றார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளுக்கு சிறு வயது முதலாகவே பொருள் மீது பற்று இல்லை. அவர் நினைத்திருந்தால் ஜீவ நாடி மூலம் பல லட்சங்களை ஈட்டியிருக்க முடியும். எனவே ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் எந்த விதமான பரிகாரங்களையும் தாம் செய்து தருவது கிடையாது. அதேபோல் மூலிகை ரட்சைகள் போன்ற பொருட்களையும் உரிய நபர் மூலம் மக்கள் பெற வேண்டும் எனும் நோக்கில் உதவி மட்டுமே ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் செய்கின்றார். இந்த கலி யுகத்தைப் பற்றி நன்கு உணர்ந்தவர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள். இதைப் பற்றி ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களை நேரில் சந்தித்துப் பயன் அடைந்தவர்கள் நன்கு அறிவார்கள். காணிக்கை இல்லாமல் ஜீவ நாடி உரைத்தால் தட்சிணா தேவியின் சாபம் ஏற்பட்டு ஜீவ நாடி உரைப்பவருக்கும் கேட்பவருக்கும் தோசம் ஏற்படும் என்பதால் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொண்டே ஜீவ நாடி உரைக்க வேண்டும் எனும் குரு உத்தரவின்படியும் ஜீவ நாடியில் முருகனின் வாக்கின் படியும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொள்கின்றார்கள். அதையும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தி வருகின்றார்கள் என்பது கண்கூடு. தனது குடும்ப தேவைக்கு என தனது எம்.சி.ஏ எம்.பில் படிப்புக்கேற்ற தொழில் செய்கின்றார். முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்தபடியே அந்த இளைஞர் ஆலயப்பரிகாரங்களை செய்து உடனடியாக அரசுப்பணியில் சேர்ந்துவிட்டார் என்பது ஆச்சரியமான உண்மையாகும். அது மட்டுமல்லாது அரைஞான் கயிறையும் அணிந்து கொண்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளையே குருவாக ஏற்று வாழ்வில் ஏற்றம் கண்டு வருகின்றார் அந்த இளைஞர். இது போல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் மூலம் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியின் வழியாக முருகப்பெருமான் தினமும் இப்படி ஏதேனும் ஒரு திருவிளையாட்டை நடத்தி வருகின்றார்.
                      ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார் சிரவையாதீனம் அவர்கள்

கோவை சரவணம்பட்டியில் உள்ள ரூபி மெட்ரிக் பள்ளியில் கௌமார மடாதிபதி சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் 02.04.2016 சனிக்கிழமை அன்று திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து ஆசி வழங்கினார்கள்.
                                                           நன்றி:தினமணி நாளிதழ்
திருவள்ளுவர் சிலை திறப்பு 
ஆசியுரை
வள்ளுவன் தான் வகுத்த வழியில்
எள்முனை கூட மாறாமல் வாழும்
வள்ளலாம் எம் ஞான ஆசான்
பள்ளியில் சிலை திறந்தார் சிறப்பு
-ஸ்ரீஸ்கந்த உபாசகர்
                                        சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

முருகன் கௌபீனத்தைக் கண்டுரைத்த ஜீவ நாடி


கொங்கு மண்டலத்தில் உள்ள மிகச்சிறப்பான முருகன் தலத்தில் அர்ச்சகராக இருக்கும் ஒருவர் நமது குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளைச் சந்தித்து ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைக்கும் அருள்வாக்கைக் கேட்க அமர்ந்தார். அவருக்கு மிகச்சிறப்பான முறையில் வாக்குரைத்து வந்த முருகப்பெருமான் திடீரென உன் வீட்டில் என் கௌபீனம் இருக்கின்றது அதை ஏன் ஒரு பெட்டியில் போட்டு அடைத்து வைத்திருக்கின்றாய் அந்தப் பெட்டியைத் திறந்து அந்த கௌபீனத்தைப் பூஜித்து வா என்று உரைத்தார். அதைக்கேட்ட அந்த அர்ச்சகர் முருகா…முருகா..என்று உரக்கக்கூறி கண்ணீர் மல்கினார். சத்தியமான உண்மை இந்த ஜீவ நாடியில் வாக்குரைப்பது அந்த முருகப்பெருமானே…ஏனென்றால் அந்த கௌபீனம் பழனியில் இருந்து பெறப்பட்டதாகும். கடந்த 3 ஆண்டுகளாக என் வீட்டில் இருக்கின்றது. அதை ஒரு சிறு பெட்டியில் பூட்டி அறியாமையினால் வைத்துவிட்டேன் முருகப்பெருமானே இனிமேல்  உன் வாக்குப்படியே அதை பூஜை செய்கின்றேன் என்று கூறி இன்னும் பல்வேறு இரகசியங்களை ஜீவ நாடி மூலம் அறிந்து கொண்டு விடைபெற்றார் அந்த அர்ச்சகர். இப்படி மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவங்களை ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஜீவ நாடி மூலமும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் மூலமும் நடத்தி வருகின்றார்.
            ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

பக்தமான்மியத்தைக் கற்றுக் கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் சிரவை ஆதீனம் அருளுரை

 
கொங்கு நாட்டுக் கச்சியப்பர் என்றும் வைணவச் சேக்கிழார் என்றும் புகழப்படும் கோவை கௌமார மடாலயம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களால் பாடப் பெற்றது வைணவ அடியார்களின் வரலாற்றை விளக்கும் பக்தமான்மியம் எனும் நூல்.அருந்தமிழால் அற்புதமாகப் பாடப்பட்ட திருமால் அடியார்கள் புகழ்பாடும் பக்தமான்மிய அருந்தமிழ் வேள்வி 02.04.2016 சனிக்கிழமை அன்று கௌமார மடாலயத்தில் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் பெரும்புலவர்களால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
                                                        
 பெரும்புலவர்களின் அருந்தமிழ் வேள்வி முடிந்த பின்பு சிரவையாதீனம் அவர்கள் அருளாசி வழங்கினார்கள். அந்த அருளாசியில் பெரியோர்கள் இந்த பக்தமான்மிய அமுதத்தை சுவைப்பது போல இந்த அருமையான பக்தமான்மியத்தைக் கற்றுக் கொள்ள இளைஞர்களும் முன்வர வேண்டும் என்றும் புலவர்களின் விருப்பம் போல் இந்த அருந்தமிழ் வேள்வியை இனி வரும் காலங்களில் நகரங்களிலும் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் இப்படிப்பட்ட ஒரு அற்புதமான தமிழ் நூல் இருப்பது வைணவ சமயத்தின் பக்தர்களுக்குத் தெரிவதில்லை எனவே இது போன்ற நூல்களை அதன் பெருமையை அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடைமையாகும் என்றும் கூறி பெரும்புலவர்கள் அனைவரையும் வாழ்த்தி இந்த அருளாசியை நிறைவு செய்தார்கள்.


கொங்கு நாட்டுக் கச்சியப்பர் கவி
எங்கும் பரவி எல்லோரும் கற்று
மங்காத மகிழ்ச்சியும் செல்வமும் 
நீங்காமல் நிற்கவே நிறைந்து 
                                                              -ஸ்ரீஸ்கந்த உபாசகர்
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                                   
பட்ட மரம் துளிர்க்கும்
பாறை கூட உருகும்
பார்வையால் பாவம் பொசுங்கும்
பகலவனே எம் குருபரனே
பாதம் பணிந்தேன் சரண்!
                                                     -ஸ்ரீஸ்கந்த உபாசகர்

                                     சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

திங்கள், 4 ஏப்ரல், 2016

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி-38


திருச்செங்கோடு எனும் சிறப்பான தலத்தை நோக்கி எங்கள் வாகனம் விரைந்தது. எனக்கு திருச்செங்கோடு முறை சென்றாலும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் தலம் அது. மனமானது திடீரெனெ கோவைக்கிழார் அவர்கள் எழுதிய கொங்கேழு தலங்கள் குறித்த பாடலை நினைத்தது. இதோ அந்தப் பாடல்.

பாடல்:
திருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி
திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள்
கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும்
கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!"

காசி சுவாமிகள் ஏதும் பேசாமல் மௌனமாகவே இருந்தார்கள். அடியேன் என்னுடன் வந்தவர்களுக்கு திருச்செங்கோடு தலத்தின் சிறப்புகளை விளக்கிக் கொண்டே பயணம் செய்தேன். அதை இப்போது உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத் தலத்தின் தீர்த்தம் தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது. அர்த்தநாரீசுவரர் கோயில் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு மலையின் மீதுள்ளது. அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை 1200 படிகளைக் கொண்டுள்ளது. கிழமேற்கில் 262 அடி நீளமும் தென்வடலாக 201 அடி நீளமுடையது இக்கோயில். இதன் வடக்கு வாசல் இராஜகோபுரம் கிட்டத்தட்ட 84.5 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென் திசைகளிலும் இக்கோயிலுக்கு வாயில்களுண்டு. அவற்றுள் தென் திசை வாயிலுக்கு மட்டும் சிறுகோபுரம் உள்ளது. செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீசுவரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகள் கொண்டது இக்கோயில். மூலவர் அர்த்தநாரீசுவரர் சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் சன்னிதிக்கு முன் வாயில் இல்லை. மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணி யுள்ளது.ஆமை மண்டபம்ஆமை வடிவை மண்டபத்தின் கீழ்ப் பகுதியிலும் அர்த்தநாரீசுவரர் சன்னிதிப் பலகணியைப் பின்புலத்திலும் காணலாம். அர்த்தநாரீசுவரர் சன்னிதியின் முன்மண்டத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது. இக்கோயிலின் தூண்கள், மண்டபச் சுவர்களென அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோயிலில் செங்கோட்டு வேலவர் சன்னிதியும், அர்த்தநாரீசுவரர் சன்னிதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரிகணபதி சன்னிதியும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற இலிங்கத்துடன் நாகேசுவரர் சன்னிதியும், தென்புறத்தில் திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் சன்னிதியும் உள்ளன. இத்தலத்தின் இறைவன் அர்த்த நாரீசுவரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107 ஆவது திருப்பதிகத்திலும் திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள் ளார். இக்கோயிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு வேலவரை அருணகிரி நாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதியிலும் பாடியுள்ளார்.
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் உடைய ஆலயமாக திருச்செங்கோடு கோவில் அமைந்துள்ளது. தென்பகுதியில் கஜமுக பிள்ளையாரும், வடபகுதியில் ஆறுமுக சுவாமி ஆலயமும் அமைந்துள்ளது. அந்த இடத்தில் இருந்து மலையின் முதல் படியானது தொடங்குகிறது. இந்த இடத்தினை மலையடிவாரம் என்று அழைக்கின்றனர். அந்த படிகள் வழியாக சென்றால் முதலில் செங்குந்தர் மண்டபத்தை அடையலாம். அதனை அடுத்து காளத்திசுவாமிகள் மண்டபம் திருமுடியார் மண்டபம் மற்றும் தைலி மண்டபத்தையையும் அடையலாம். தைலி மண்டபத்தில் மேற்குபுறத்தில் 7 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட நந்தி ஒன்று ராஜகோபுரத்தை பார்த்தவண்ணம் உள்ளது. பசுவன் கோவில் என்று அழைக்கப்படும் இதன் பின் உள்ள பகுதியை நாகமலை என்று அழைக்கின்றனர். இவ்விடத்தில் 60 அடி நீளத்தில் ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் மிக பிரமாண்டமாய் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் தன்னை ஆபரணமாக சுமந்து கொண்டுள்ள சிவனின் ஆவுடையார் உருவினை சுமந்து கொண்டுள்ள ஆதிசேஷனை நாகர் உருவில் காணலாம் என்பதாகும். நீண்ட பெரிய பாறையிலேயே வடித்தெடுக்கப்பட்ட இந்நாகர் உருவமே நாகர் மலையின் முதலிடமாகும். இன்றைக்கும் மக்கள் இந்த நாகர் சிலைக்கு குங்குமம், சிகப்பும் தூவிச் சூடம் ஏற்றி தீபாராதணை செய்கிறார்கள். சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் வைத்தும் வழிபடுகிறார்கள். பழங்காலத்தில் மக்கள் படி வழியாக மட்டும் சென்று நாகதெய்வத்தை வழிபட்டார்கள் இன்று வாகன சாலை அமைத்து நடக்க முடியாதவர்கள் வாகன பாதையில் வாகனத்தில் சென்று நாகர் பள்ளம் என்று அழைக்கப்படும் பகுதி வரை சென்று நாக தெய்வத்தை வழிபடுகிறார்கள். இதன் இடதுபுறமுள்ள நாகம் கால வேறுபாட்டால் இடி, மின்னல் தாக்குதல்களால் வெடிப்புகள் ஏற்பட்டு சிதைந்த நிலையில் காணப்படுகிறது.  இதனையடுத்து உள்ள சில மண்டபங்களை கடந்து சென்றால் அறுபதாம் படி என்னும் `சத்தியப்படியினை' அடையலாம். இப்படியின் இறுதியில் முருகப்பெருமான் உள்ளார். ஒரே சீராக அறுபது படிகளை உடைய இவ்விடம் சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இம்மலையில் உள்ள 1206 படிகளிலேயே இந்த 60 படிகள்தான் மிகவும் சிறப்பு வாய்ந்தத படியாகும். அன்றைய காலத்தில் கொடுத்தல் வாங்கல் மற்றும் எண்ணற்ற தீர்க்க முடியாத வழக்குகளில் உண்மை நிலையை அறிய இப்படியினை பயன்படுத்தினார்கள். இப்படியின் மீது நின்று சத்தியம் செய்து கூறும் செய்திகளை சென்னை உச்சநீதிமன்றமே ஒப்புகொண்டதாக கூறுவார்கள். இதனையடுத்து பல மண்டபங்களை கடந்து சென்றால் கம்பீர தோற்றத்துடன் வடக்கு நோக்கிய வண்ணம் உள்ள ஐயங்கார பிள்ளையாரை வழிபடலாம் இங்கு 475 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட எழில்மிகு இராயர் கோபுரத்தை காணலாம். இந்த ஆலயத்தினுள் நாகு, கேது உள்ளிட்ட நவகிரக நாயகர்கள் உள்ளனர். அறுபத்து முன்று நாயன்மார்கள் திருஉருவ சிலைகள் உள்ளன. பஞ்சலிங்க மூர்த்திகளின் கோவில்கள் உள்ளன. விசாலாட்சி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கூத்தப்பெருமான் ஆலயம் உள்ளது. ஏழு கன்னியர் கோவில் உள்ளது. சகஸ்ர லிங்கம் எனப்படும் ஆயிரலிங்கர் ஆலயம் உள்ளது. தட்சிணாமூர்த்தி, சேட்டாதேவி, நாகர் ஆலயம், வைரவ தேவர், சூரிய தேவர், சித்தி விநாயகர் மற்றும் பல தெய்வங்களின் ஆலயங்கள் உள்ளது. நாகேஸ்வரர் ஆலயம் சிறப்பான சிற்பக்கலையுடன் உள்ளது. மலையின் உச்சியில் வந்தீசுவரர் எனப்படும் பாண்டீஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது. வீர ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. பின்வரும் திருப்பணி மாலை பாடல் திருச்செங்கோட்டின் பெருமையைப் பறைசாற்றுகின்றது.
பாடல்:
குருக்கோடு நவமணியும் நவநிதியும் நவரசமும் கொழிக்குங்கோடு
தருக்கோடு சுருபியும் சிந்தாமணியும் தழைத்த தெய்வத்தான மாமால்
இருக்கோடு பலகலைகளாகமங்கள் குரவோர்களிரைக்குங்கோடு
செருக்கோடு முமையரனைப் பிரியாம லினிதிருக்கும் திருச்செங்கோடே!!
இந்த திருச்செங்கோட்டு வேலனைக் காண எனக்கு பிரம்மா நாலாயிரம் கண் படைக்கவில்லையே என்று  நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள் அவர்கள் கந்தர் அலங்காரத்தில் பாடியுள்ளார்கள். இதோ அந்தப் பாடல்
பாடல்:
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நலாயிரம் கண் படைத்திலனே இந்த நான்முகனே
 இப்படி இந்த தலத்தின் பெருமைகளைப் பேசிக்கொண்டே வழிபாடுகளை முடித்தோம். பின்பு சிறிது நேரம் காசி சுவாமிகளுடன் அமர்ந்தோம். அப்போது சமய தீட்சையாகிய பஞ்சாட்சர மந்திர தீட்சை அளிப்பதாக காசி சுவாமிகள் தெரிவித்தார்கள். உடனே எங்கள் அடியார்களில் ஒருவரை அருகில் அழைத்து அமர்த்திக் கொண்டு அவரது இரு கண்களையும் மெதுவாக உள்ளுக்குள் அழுத்தினார்கள் காசி சுவாமிகள் அவர்கள். சிறுகச் சிறுக கண்கள் இரண்டிற்குள்ளும் காசி சுவாமிகளின் கைப் பெருவிரல்கள் இரண்டும் சென்று விட்டது. பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து கொண்டே காசி சுவாமிகள் கொடுத்த இந்த தீட்சையில் தீட்சை பெற்றுக் கொண்டிருந்த அந்த அடியவர் தனது கைகளை பட படவென அடித்துக் கொண்டு ஓம் நமசிவய....ஓம் நமசிவய...என்று அலறித் துடித்தார். அவர் அலறுவதைப் பார்த்த நாங்கள் சற்று கலங்கி விட்டோம். இப்போது மெதுவாக கை விரல்களைக் கண்களில் இருந்து விடுவித்தார் காசி சுவாமிகள்....அந்த அடியாரின் கண்களிப் பார்க்கவே முடியவில்லை அந்த அளவு இரத்தங்கள் கலங்கி அவருக்கு கண்களின் வெள்ளை விழிகளே தெரியவில்லை. அவர் அப்படியே சிறு மயக்கமாக அமர்ந்து கொண்டார். அடுத்து வாருங்கள் என்று காசி சுவாமிகள் கன்னடத்தில் அழைத்தார்கள். அடியேன் உட்பட ஒருவரும் தீட்சை பெறத் தயாராகவில்லை. எல்லோரும் ஒரு அடி பின்னால் தள்ளி அமர்ந்தார்கள். பலத்த ஒலியுடன் ஓம் நமசிவய.....என்று சொல்லிகொண்டே காசி சுவாமிகள் அவர்கள் என்னை அழைத்தார்கள். சரி நடப்பது நடக்கட்டும் என்று நானும் சென்று அவர் முன்பு அமர்ந்தேன். முன்பு அந்த அடியாருக்கு தீட்சை கொடுத்தது போலவே எனக்கும் கொடுத்தார் காசி சுவாமிகள். கண்கள் இரண்டும் இரத்தம் வருவது போல் சிவந்தது. கடுமையாக வலிக்கத் தொடங்கியது. ஆனாலும் கண்களின் உள்ளே ஒளி வடிவில் இறைவன் காட்சி கொடுத்தார். அந்த காட்சி தீட்சை எடுத்துக் கொண்ட அனைவருக்குமே கிடைத்தது. ஒரு வழியாக ஒரு சிலபேர்களுக்கு மட்டும் தீட்சை கொடுத்தார் காசி சுவாமிகள் அவர்கள். அது முதல் கண்ணுக்குள்தான் தெய்வ காட்சி கிட்டும் என்றும் கண்களில் சிறிது விபூதி வைத்துக் கொள் என்றும் உபதேசம் செய்தார்கள் காசி சுவாமிகள். அன்று முதல் இன்று வரை நமது ஞானஸ்கந்தாஸ்ரம அடியவர்கள் கண்களில் விபூதி வைத்துக் கொள்வதைக் காணலாம். அதன் பின்ணணி இதுதான். இப்படி காசி சுவாமிகள் அவர்களின் சந்திப்பால் அடியேனுக்கு சிவ மந்திர தீட்சையும் ஸ்பரிச தீட்சையும் கிடைத்தது. இந்த திருச்செங்கோடு தலத்தின் படிகள் மற்றும் பாதைகள் அமைக்க நமது கௌமார மடால்ய மூன்றாம் குரு மஹா சந்நிதானம், எனது குருநாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகளின் குருநாதர் தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள் திருப்பணிக்கு உதவியுள்ளார்கள் என்பது பெருமைக்குறிய செய்தியாகும். இப்படி சிவ தீட்சை கிடைத்த இடத்திலும் கூட கௌமார மடாலயத் தொடர்பு இருப்பது எனது முன்சென்ம தொடர்பிற்கு ஆதாரமாக உள்ளது எனலாம். இப்படி அருணகிரிநாத சுவாமிகளுக்கும், கோவை கௌமார மட்த்திற்கும் தொடர்புடைய இந்த திருச்செங்கோடு தலத்தில் சிவ தீட்சை கிடைத்து பெரும் பாக்கியம். பின்பு காசி சுவாமிகள் எங்களிடம் இருந்து ஆசி கூறி விடைபெற்று சென்றார்கள். நாங்கள் அனைவரும் மீண்டும் ஞானஸ்கந்தாஸ்ரமம் சென்று ஞானஸ்கந்த மூர்த்தியை நன்றி உணர்ச்சியோடு வழிபட்டோம். கொங்கு ஏழு ஸ்தலங்களில் அவிநாசி. திருமுருகன் பூண்டி, பவானி கூடுதுறை, திருச்செங்கோடு ஆகிய நான்கு தலங்களை தரிசனம் செய்து விட்டோம். இதற்கு அடுத்து கொடுமுடி, வெஞ்சமாக்கூடல், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் ஆகிய மூன்று தலங்களை தரிசிக்க வேண்டி இருந்தது. அதை ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழைமை அன்று தரிசிக்க ஆயத்தம் ஆனோம். அப்போது முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்த படியே மீண்டும் ஒரு அதிசயம் நடந்தது.
படம்: காசிசுவாமிகளுடன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் மற்றும் பக்தர்கள்

 தொடரும்....
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!