வெள்ளி, 4 செப்டம்பர், 2020

 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்.  

144 வண்ணச் சரபம், தண்டபாணி சுவாமிகள் இயற்றிய புலமை இலக்கணம் முற்றிற்று 

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

நூற்பா144

அருள்நிலை முடித்தற்கு ஆரால் ஆகும்என்று

அஞ்சி இந்தமட்டு அடக்கிச் செயல்வகைக்

குறிப்பொடு புலமை இலக்கணம் கூறிக்

கருதிய பயனில் கருத்துஅமைந் ததுவே.

திருவருளின் செயலை இத்தன்மைத்து என அறுதியிட்டுக் கூறி முடித்தற்கு எளியேன் போன்ற யாரால் இயலும் என்னும் அச்சத்துடன் இப்பிரிவை இத்துடன் நிறுத்திக் கொள்வதுடன் செயல்வகை இயல்பு எனப் பெயர்பெற்ற இப்பெரும் பகுதியுடன் புலமை இலக்கணத்தை முடித்துக் கொண்டேன், என் பணி முடிந்தது. இதனைக் கற்பார் இதன்வழி ஒழுகிக் கருணை மிகப்பெற்று மாதவம் முயன்று உலகிற்கு நலம் பயப்பதாகிய அருஞ்செயல்களைப் புரிந்து, பின் பிறவியின் முழுப்பயனாகிய வீட்டின்பத்தையும் அடைதல் வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்குகிறது என்றவாறு.

கருதிய பயன் என்பது இந்நூலாசிரியர் கொள்கைகட்கேற்ப விரித்துரைக்கப்பட்டது. இந் நூற்பயன் இவராலேயே முன்னர் பொதுப் பாயிரத்தின் ஆறாங்கவியில் கூறப்பட்டது.,

 இந்நூற்பாவுடன் இப்பிரிவும், செயல்வகை இயல்பும், அறுவகை இலக்கண நூலும் நிறைவுபெறுகின்றன

வண்ணச் சரபம், தண்டபாணி சுவாமிகள் இயற்றிய புலமை இலக்கணம் முற்றும். எனது திருமண நாளான இன்று(1-9-1982) நிறைவுற்றது பெரும்பாக்கியம் என்றே கருதுகிறேன். 

நன்றி: பதிவு தொல்காப்பியர் அன்பர் அடிப்பொடி புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர்,  உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம்,  கோவை.


புதன், 2 செப்டம்பர், 2020

  சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது

140  வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

 143  சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது.

நூற்பா143

தாய்வயிற்று இருந்து தரணியிற் பிறந்த

உடன்சிலர் பாடிய வொள்ளிய தமிழும்

பாரொடு வானில் பரந்தது அன்றே.

(பகவன் ஆதி என்னும் கணவன் மனைவியருக்குப் பிறந்த அவ்வை, உப்பை, அதிகன், உறுவை, கபிலர், வள்ளி, வள்ளுவர் என்ற எழுவரும்) தம் தாயின் அகட்டிலிருந்து வெளியேறி உலகில் தோன்றிய உடனே பாடிய சில கவிகளும் உலகிலும் வானிலும் பரவி உள்ளன என்றவாறு.

இச்சமயத்தில் இவ்வெழுவர் பாடியனவாக ஏழு கவிகள் தனிப்பாடல்களாக வழங்குகின்றன. “அளப்பரும் பனுவல் அகண்டம் ஆய நாத சத்தியின் நனந்தலை கிடந்து பகர்வார் வரவு பார்க்கின்றன”1 எனும் தம் கொள்கைக்கேற்ப வானில் பரந்தது என்றார். இதுவும் சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது.


நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர்,  உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.