திங்கள், 2 மார்ச், 2015

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 26 !



   ஒவ்வொருவரும் கர்ம வினைகளைக் கரைத்து கடைத்தேறுவதற்கே இந்த

பூலோகத்திற்கு வந்திருக்கிறோம். அதை மறந்து விட்டு மீண்டும்,

மீண்டும் கர்மாவைச் சம்பாதித்து கணக்கை அதிகரித்துக் கொண்டே

இருக்கிறோம். கர்மாவின் காலக்கண்ணாடியே ஜாதகம். அதில் உள்ள

கிரகநிலைகள் அனைத்தும் நம் இஷ்டத்திற்க்கு  அமைத்துக் கொள்ளும்

வழிகள் இப்போது இருக்கின்றன. அறுவை சிகிக்சை மூலம் பிறக்கின்ற

குழந்தைகளுக்கு முன் கூட்டியே நல்ல நேரம் கணித்து தோஷம் ஏதும்

இல்லாமல் நல்ல யோக திசைகள் வரும்படியும், தீர்க்காயுள்

இருக்கும்படியும், பார்த்து, பார்த்து ஜாதகம் கணித்து அந்த குறித்த

நேரத்தில் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து விடுகிறார்கள்.

இது நவீன தொழில் நுட்பத்தின் சாதனை. ஆனால் விதியை வெல்ல

முடியுமா? மதிக்கு அங்கு வேலை உண்டா? என்பது கேள்விக் குறியே?



குறித்த நேரத்தில் சிலருக்கு அறுவை சிகிச்சை நடப்பதில்லை அல்லது

அவர்கள் கேட்கும் தேதியில் 12 இலக்கணங்களில் எதைப் போட்டுப்

பார்த்தாலும் 1000 சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. எனவே 100%

யோகமுள்ள ஒரு ஜாதகத்தை நம்மால் முன்கூட்டியே கணிப்பது என்பது

ஒரு சிரமமான காரியம்தான். அங்கும் பூர்வ ஜெனம பாவ புண்ணியங்கள்

விளையாடி விடுகின்றன. காரணம் இங்கு ஜெனனம் எடுப்பதே

இறைவனைத் துதித்து, தொழுது போற்றி, பணிந்து, தேடி, நாடி, ஓடி,

தானங்கள், தர்மங்கள் செய்து நமது ஜென்மா கடைத்தேறும் வழியைத் தேட

வேண்டுமே தவிர அடுத்தவன் கெட்டாலும் தான் நன்றாக இருக்க

வேண்டும் என்று எண்ணக் கூடாது. அது மிகக் கொடியச் செயல்.



   இன்று ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்த உடனேயே பல அதிர்ஷ்டங்கள்

தானாகத் தேடி வந்து அபூர்வ அரிய நலன்களை அட்டியின்றி அடைய

எண்ணம் கொள்கின்றனர். ஒரு சிலருக்கு அவ்விதம் நடந்து நல்ல

நிலையைத் தருகிறது. ஒரு சிலருக்கு எதுவுமே நடப்பதில்லை. எதைத்

தின்றால் பித்தம் தீரும் என்ற நிலையில் அங்கும், இங்கும் அலைந்து

திரிந்து பல்வேறு குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். பலவகைகளில்

செலவும் செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டு தப்புவதற்கு வழியின்றி

தடுமாறிக் கொண்டு தடம் மாறிவிட்டு தன்னிலையை உணர முடியாமல்

தவித்துக் கொண்டு இருகின்றனர். ஒரே ஜோதிடரை நம்புவதில்லை. அது

இருக்கட்டும். ஒரே ஒரு சித்தரைக்கூட நம்புவதில்லை. சிலகாலம்

அகத்தியர், அப்புறம் அது ஒன்றும் சரியில்லை போகர் நல்லவர், இல்லை



புலிப்பாணிதான் கருணை மிக்கவர் சில மாதம் கழித்து தேரையார்

திவ்யமானவர், இல்லை குதம்பைச் சித்தர்தான் குதூகலத்தைக் கொடுக்க

சிறப்பானவர் என நினைத்து நிலை தடுமாறுகின்றனர். இது எல்லாமே

கிடையாது 108 சித்தர்களையும் பூஜித்தால் அதில் ஏதாவது ஒருவர்

நல்லது செய்யாமலா போய்விடுவார்? இப்படி பலர் பலவித வழிபாடுகளைச்

செய்து பல சித்தர்கள் தரிசனம் செய்தும் பலனே இல்லையே என்று

புலம்பிக் கொண்டு இருப்பவர்கள் அதிகம்.

 

எந்த சித்தர்களும் தன்னை வழிபட வேண்டும் என்று விருப்பம்

கொள்வதில்லை. மாறாக உண்மையான சரணாகதியோடு வருகின்ற

பக்தர்களை சித்தர்கள் என்றும் கைவிடுவதும் இல்லை. சித்தர்கள் நோக்கம்

ஜென்மாவைக் கடைத்தேற்றும் வழிகளைச் செய்வதே. கர்ம வினைகளைக்

குறைக்கும் வழிகளையே சித்தர்கள் சொல்கிறார்கள். நம்மைக்

கடைத்தேற்றுவதில் வல்லவர்கள் அவர்கள். இறைவனைத் தரிசித்தவர்கள்.

அவர்களுக்குத்தான் நெளிவு, சுளிவு தெரியும். மணி, மந்திரம்,

ஔஷதத்தில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் எதிர்ப்பார்ப்பது உண்மையான

பக்தி. இறைவழியில் மட்டும் நாட்டம் அவ்வளவே!.

 

நல்ல நபர்களாக யாருமே இந்த கலியுகத்தில் இருக்க முடியாது.

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் குற்றம் புரிந்துக் கொண்டே

இருக்கிறோம். ஆனாலும் ஆத்ம தாகம் அதிகமாகி கொண்டே செல்கிறது.

இறைதேடலும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. விரைவில் நல்ல

ஆன்மிக மாற்றம் வருவதற்கான அனைத்து அடையாளங்களும் ஆங்காங்கு

தென்படுகின்றன. இது நல்லதே.



  நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அகத்தியர், சுகர், காகபுஜண்டர்,

மற்றும் முருகப் பெருமான், பதஞ்சலி ஆகியோர் தோன்றி நம்பி வருகின்ற

பக்தர்களுக்கு பல நன்மைகளைச் செய்து வருகிறார்கள். பெரும்பாலும்

முருகப் பெருமானின் வாக்கே வெளிப்பட்டு வருகிறது. இருந்தாலும் முருகப்

பெருமானோடு சேர்ந்த அடிக்கடி வெளிப்பட்டு வருகின்ற சித்த புருஷர்

அகத்தியர் ஆவார். அந்த மகான், சித்தர் வரும் போதெல்லாம் இந்த

மக்களைக் குறித்து அடிக்கடி வருத்தப்படுவதாகச் சொல்லும் போதெல்லாம்

எனக்கும் ஓர் இனம்புரியாத வருத்தம் உண்டாகிறது.



   ஒரு நாள் அதிகாலை வேளை பூஜையில் இருந்தேன். சுமார் 6 மணி

இருக்கும். அப்போது என்னுள் ஒரு குரல் கேட்டது. மகனே என்று. நான்

ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் முருகப் பெருமானாக இருக்கும் என்று

யோசித்து முடிவு செய்வதற்க்குள் ஜீவநாடியை எடுத்துப் படி சில

விஷயங்கள் உனக்கு சொல்ல வேண்டும் என்றது குரல். ஆனால் அரை

மணி நேரம் என்னால் தியானத்தை விட்டு எழுந்திருக்கவே முடியவில்லை.



யாரோ ஒருவர் பலமாக என்னை ஆட்கொண்டு இருப்பதாக உணர்ந்தேன்.

ஒரு வழியாகச் சமாளித்து காலை 6.30 மணிக்கு ஜீவநாடிச் சுவடியை

   எடுத்த உடனேயே ஒருவித அதிர்வுகள் என்னுள் பாய்வதை உணர

முடிந்தது. சரி இன்று ஏதோ ஒரு தெய்வீக நிகழ்வு நடக்க இருக்கிறது

என்பது மட்டும் யூகிக்க முடிந்தது. மகனே எட்டாவது ஓலையைப் பிரித்து

படி என்றது குரல். சரி என்று எட்டாவது ஓலையைப் பிரித்தேன்.


  அந்த எட்டாவது ஓலையில் ஒரு வித ஒளி மஞ்சள் நிறத்தில் மின்னியது.

உடனே ஒரு கமண்டலம், தீர்த்த சொம்பு, தாடியுடன் ஒரு சிறிய

உருவம்போல் தெரிந்தது. ஒளி இன்னும் பிரகாசமாய் மாறியது. அதில்

வந்தது அகத்திய முனிவர். அருகில் முருகப் பெருமான். இதை எழுதினால்

கூட பலர் என்னை பரிகாசம் செய்யக்கூடும் என்று தவிர்க்கப் பார்த்தேன்.



அகத்தியரும், முருகப் பெருமானும் நீ இதை எழுத வேண்டும்

என்பதால்தான் இந்த உபதேசத்தைச் செய்கிறோம். பரிகாசிப்பவர்கள் பாவிகள்

அவர்களை மன்னித்து விடு. பக்தர்கள் கருணையானவர்கள் அவர்களுக்கே

இந்த உபதேசம் என்றார். எனக்கு மெய்சிலிர்த்தது. கண்ணீர் மல்க வந்த

உபதேசத்தை அப்படியே எந்த வித மறைவில்லாமல் எழுதிக் கொண்டேன்.

அதை அப்படியே அந்த அகத்தியர் ஆசி பெற்ற “திருவருள் சக்தி” இந்த மாத

இதழில் எழுதி உங்களுக்காகத் தருகிறேன்.

 


“திருவருள் சக்தி” எனும் பெயர் கொண்ட இந்த இதழ் அந்த இறைவனது

அருளையும், அகத்தியர் போன்ற பல சித்தர்கள் அருளையும்

பெற்றிருப்பதால்தான் இது போன்ற பல தெய்வீக இரகசியங்களை தாங்கி

தங்குத் தடையின்றி கடந்த 9 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டும், 10

ஆண்டிலும் பவனி வர இருக்கிறது. இதன் ஆசிரியர் கூட சித்தர்

அடிமையாக இருந்து சித்தர்களுக்குச் சேவை செய்து வருவதால் தான்

அவரால் இதை வெளியிட முடிகிறது. அகத்தியர் பின்வருமாறு உரைத்தார்.

                          “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

3 கருத்துகள்: