புதன், 2 செப்டம்பர், 2020

  சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது

140  வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

 143  சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது.

நூற்பா143

தாய்வயிற்று இருந்து தரணியிற் பிறந்த

உடன்சிலர் பாடிய வொள்ளிய தமிழும்

பாரொடு வானில் பரந்தது அன்றே.

(பகவன் ஆதி என்னும் கணவன் மனைவியருக்குப் பிறந்த அவ்வை, உப்பை, அதிகன், உறுவை, கபிலர், வள்ளி, வள்ளுவர் என்ற எழுவரும்) தம் தாயின் அகட்டிலிருந்து வெளியேறி உலகில் தோன்றிய உடனே பாடிய சில கவிகளும் உலகிலும் வானிலும் பரவி உள்ளன என்றவாறு.

இச்சமயத்தில் இவ்வெழுவர் பாடியனவாக ஏழு கவிகள் தனிப்பாடல்களாக வழங்குகின்றன. “அளப்பரும் பனுவல் அகண்டம் ஆய நாத சத்தியின் நனந்தலை கிடந்து பகர்வார் வரவு பார்க்கின்றன”1 எனும் தம் கொள்கைக்கேற்ப வானில் பரந்தது என்றார். இதுவும் சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது.


நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர்,  உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.





2 கருத்துகள்: