புதன், 13 செப்டம்பர், 2017

கவுமாரம் பொருந்தினோரே!

                          
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கவுமார மடம், திருவாமத்தூர், விழுப்புரம்
பாடல்:
மெய்யடியார் பதத்துகளைச் சிரசில் தாங்கி
  மேனிஎங்கும் உத்தூளமா நீறு பூசிச்
செய்யநிறக் கல்லாடை ஒன்றும் தண்டும்
  திருக்கரத்தில் கொண்டு கண்டி திகழப் பூண்டு
துய்ய நிறக் கோவணமும் கீளும் சாத்திச்
  சொந்தம்எனக்கொருவன் அவன் சுதன் நான் என்று
பொய்யன்ஒரு கூத்தில் வந்து தோன்றினாலும்
  புகழுமவர் கவுமாரம் பொருந்தினோரே
                                   -கவுமார நூல்
வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகளின் கவுமார நூலில் உள்ள ஒரு பாடல் இது. ஆறுமுகம் என்று ஆறுதரமோதி திருநீறு பூசி உன் பாத மலர் சூடுகின்ற அடியார்கள் பதமே துணை என்று திருப்புகழில் அருணகிரிநாத சுவாமிகள் பாடியுள்ளார். உண்மையாக இறைவனை வழிபடும் அடியார்கள் பாதமே நமக்கு தஞ்சமாகும். குரு பாதமே கதி என்பதும் குருவே துணை என்பதும், குருவே சரணம் என்பதும் குரு பிரணவ மந்திரம் ஆகும். அவர்களின் பாத தூசு நம் மீது பட்டால்கூட போதும் நாம் இறைவனை உணார்ந்து கொள்ள முடியும். எனவேதான் சித்தர்களை நோக்கியும் உண்மையான அடியார்களை நோக்கியும் இன்று தேடல் அதிகரித்துள்ளது. மெய் அடியார்களை இனம் காண்பது அரிது என்றாலும் நமது பக்குவ நிலைக்கேட்ப ஒரு மெய்யடியாரோடு தொடர்பை இறைவன் நமக்கு ஏற்படுத்தி தருவார். மெய்யடியார்களது திருப்பாதத்தை நமது சிரசில் தாங்குவதும், நீரில் குழைக்காமல் உத்தூளமாய் மேனி எங்கும் நீறு பூசுவதும், மேன்மை பொருந்திய காவிக்கல் சாயம் கட்டப்பட்ட தூய சற்று செந்நிறமான காவி உடையாகிய கல்லாடை புணைவதும் சந்நியாசத்தைக் குறிப்பதாகும். அப்படி முருகப்பெருமானே அணிந்து கோவணத்துடன் பழனியில் இருப்பது ஞான நிலையைக் குறிப்பதாகும். அப்படி கோவணம் பூண்டு தண்டம் எனும் யோகதண்டத்தைக் கையில் ஏந்தியும், ருத்திராக்கம் அணிந்து கொண்டும், இறைவன் முருகனே எனக்குச் சொந்தம் என்று சொல்லி வேடம் போட்டு ஒரு பொய்யன் கூத்துக்காக நடிக்கத் தோன்றினாலும் அவர் புகழப்படுகின்ற கௌமார சமயத்தைச் சேர்ந்தவர் என்பது இந்தப்பாடலின் பொருளாகும்.அதாவது அப்படி ஒரு தோற்றத்தின் பெருமையைக் குறிக்கவே சுவாமிகள் இப்படிப் பாடியுள்ளார்கள். போலி வேடம் இட்டு என்ன பயன்? கூத்துக்காக வேடமிடுவதற்கே கௌமாரம் என்றால் உண்மையாக இருந்தால் நினத்துப்பார்க்கவே மெய் சிலிர்க்கின்றதே!
கௌமார நெறியில் அடியார்கள் வழிபாடு அதிலும் குறிப்பாக குரு வழிபாடு, உத்தூளமாய் திருநீறு பூசிக்கொள்தல், ருத்திராக்கம் அணிதல், யோக தண்டத்தைக் கையில் கொள்தல், காவி ஆடையும் கோவணமும் அணிதல், முருகனே பரம்பொருள் எனும் கொள்கையைக் கடைபிடித்தல் இலக்கணமாம். இந்த அமைப்புகள் சந்நியாசத்தைக் குறித்தாலும் இப்படி பொய்யாக அணிந்து கொண்டிருப்பவனைக் கூட அந்த வேடத்திற்காக அவன் கௌமாரனே என்பது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கூற்று. பொய்யாக கூத்துக்காக வேடம் அணிந்து இருப்பவரே கௌமாரர் எனும் போது உண்மையாய் மெய்யாய் இப்படி கௌமார சின்னத்தில் இருப்பவர்களையும் கௌமார நெறியைக் கடைபிடித்து இருப்பவர்களையும் நாம் என்ன சொல்வது? சிரமேல் வைத்துக் கொண்டாட வேண்டுமே. அப்படியே மெய்யாக கௌமார மடாலயம் திகழ்வதும் நாம் செய்த தவப்பயனாக கொங்கு நாட்டில் கோயம்புத்தூரில் இருப்பதும் கௌமாரச் செல்வமாகிய முருகனைக் கொண்டாடி அறுசமய வழிபாட்டைக் கடைபிடித்து கௌமார இலக்கணத்தை 100 ஆண்டுகள் கடந்தும் நெறி பிறழாமல் திகழ்ந்து வருகின்றது கௌமார மடாலயம். மெய்யடியார்களை எங்கு சென்று தேடுவேன் என்பவர்கள் கோவை கௌமார மாடாலயம் வந்து தரிசனம் செய்யலாம். கோவையைச் சுற்றிலும் இருக்கும் மடாலயங்களுக்கு சந்நிதானங்களை வழங்கிய பெருமை கௌமார மடாலயத்தையே சாரும். மெய்யடியார்கள் தேடி வந்து தரிசிக்கும் இடம் கௌமார மடாலயமாகும். நூறு ஆண்டுகள் கடந்தும் காலத்திற்கேட்ப கல்விசேவை, மருத்துவச்சேவை, சமயப்பணிகள் என உலக நன்மைக்காக தற்காலம் கௌமார மடாலயத்தைத் திறப்படச் செயல்படுத்தி வருபவர் நம் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள். எனவே மெய்யடியார்களின் பாத தரிசனம் நமக்கு அளவிலா நன்மைகள் தரும் என்பதை அருணகிரிநாதர் மற்றும் அருணகிரி நாதரின் அம்சமாய்த் தோன்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் சொல்வதிலேயே அதன் மகத்துவம் தெரியும்.
கவிதை:
உத்தூளமாய் நீறுபூசி கண்டி பூண்டு
சித்தர்கள் தலைவன் குமரன் தன்னை
சித்தத்திலே வைத்து தெய்வமெனப் போற்றும்
பத்தர்கள் கவுமார நெறியினரே !

குருவை வணங்கி போற்றி செய்தல்
குருவே சரணம் என்று இருத்தல்
குருவே சிவமெனக் கருதி நிற்றல்
உருவே கௌமார நெறியினரே !

கூத்திலே நடிக்க போடும் வேடம்கூட
சித்தத்தில் கவுமார நெறியென்று எண்ணி
மொத்தமாய்க் கண்ட தண்டபாணி சாமிதன்னின்
சித்தமே கௌமார நெறியதாமே !

தண்டத்தை ஏந்தியதால் அவர் தண்டபாணி
கண்டத்தில் அக்கமணியும் அழகாய்ப் பூண்டார்
அருணகிரியின் அம்சமாய் அவதாரம் செய்து
குருவாய் இராமானந்தருக்கு வந்து சேர்ந்தார்

கவுமார தோற்றமும் கவுமாரநெறியும் கொண்டு
கவுமார மடத்தை சிரவணமாபுரியில் தொடங்கி
கவுமாரர் பலரையும் உருவதாக்கி உண்மை
கவுமாரம் இராமானந்தர் கண்டார்

(திருப்பெருந்திரு. இராமானந்த சுவாமிகள் அவர்கள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்களிடம் உபதேசம் பெற்று கவுமார தோற்றமும் நெறியும் தாங்கி கவுமார சபையை கோவை சரவணம்பட்டி அருகே இருக்கும் சின்னவேடம்பட்டியில் தொடங்கி தம்மை நாடி வந்த பலரை உண்மையான கவுமாரர்களாக ஆக்கினார்கள்)

குருஉருவே திருஉரு என்ற நெறியில்
உருவாக குருஉருவைப் பூசை செய்து
குருபெயரே தெய்வத்திற்கும் தண்டபாணி என்று
உருவழிபாடு செய்தவரே இராமானந்தர்

(திருப்பெருந்திரு இராமானந்த சுவாமிகள் அவர்கள் தமது குருவாகிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் திரு உருவத்தையே தியானப் பொருளாகக் கொண்டு பூசித்து அவர் பூசிக்கும் முருகன் உருவத்திற்கும் தண்டபாணி சுவாமிகள் என்றே பெயர் வைத்து வணங்கினார். பின் நாளில் தண்டபாணிக் கடவுள் எனும் நாமம் ஏற்பட்டது)

மெய்யடியார் பலரும் மடம் தேடிவந்து
மெய்யான உபதேசம் மகிமை பெற்று
மெய்யாக பல்வேறு மடாலயம் தன்னில்
மெய்யாக சந்நிதானம் ஆனாரே

(கோவை பேரூர் ஆதீனம், தென்சேரிமலை ஆதீனம் ஆகியோர்கள் கவுமார மடத்தில்  இருந்து சென்றவர்கள் என்பது வரலாற்றுண்மை)
                                                                                               
                             தவத்திரு.சாந்தலிங்க ராமசாமி அடிகளார், பேரூர் ஆதீனம்


         தவத்திரு முத்து சிவராமசாமி அடிகளார்,  தென்சேரிமலை ஆதீனம்

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                        
படம்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் குரு பூஜையில் சிரவையாதீனம்
           இணையதளம்:  www.kaumaramutt.com
            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                  சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!! 

பழநி பட்டணம் சுவாமிகள் மகிமை

அவதாரம்                       பரிபூரணம்
கி.பி.4932                        கி.பி.4999
கி.பி.1831                        கி.பி.1898
சற்குரு நிருவான தேசிகர் சுவாமிகள்
ஸ்தலம்: தளவை மடம்
தளவாய்ப்பட்டி.
 ஸ்ரீ பட்டணம் சுவாமிகள் துதி
ஆதிமறை முடிவாலு மறிய வொண்ணா
அருளுருவே யடியவர்பவ நீக்க வேண்டி
ஓதரிய உலகமதில் உதித் தெழுந்த
வுத்தமனே மத்தனுளத் துணர்வே போற்றி
வாதமிடுஞ் சமய நெறிக் குள்ளலைந்த
வம்பனுக்குத் தத்துவமசி வகையோ டீந்த
மூதுணர்வே சின்மயமாய் விளங்கும் மாரி
முத்தனடி சிரமுளத்திற் போற்றி வாழ்வாம்.
பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் அவதார மகிமை
   சேலம் தளவாய்பட்டி நிருவாண தேசிகர் சுவாமிகளால்உன் வாயிலிருந்து சொற்கள் மாரி போல் பொழிந்து முத்துகளாகவே உதிர்கின்றனஎன்று கூறி பட்டணத்திலிருந்து வந்து கதா காலட்சேபம் செய்து கொண்டிருந்த சின்னசாமி தாஸ் என்பவரை மாரிமுத்து என்றழைக்க தமது 21-ம் வயதில் துறவு பூண்டு மக்களால் பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
    குரு நிருவாண தேசிகனுக்கு தொண்டு புரிந்து ஒரு மண்டலம் மோன நிலையை சாதிக்க பாலாம்பிகையின் குண்டத்தின் முன்னிலையில் ஆசார நியமத்துடன் மௌனமாகவே யாகாதி கருமங்களை செய்து குரு நிருவாண தேசிகனின் சன்னதியில் அன்றடைந்த நிலையே நிலையாக கொண்டு ஒரு மண்டலம் பூர்த்தியாகும் முன் அம்பிகை தரிசனம் கிடைக்கப்பெற்று புளகாங்கிதத்துடன் நா தழு தழுத்த நிலையில் அம்பிகையின் மீது பாமாலை பாடினார். இந்த ஜெபமாலையை ஆசாரத்துடனும் ஆதரவுடனும் கற்று நலன் பெற்றவர்கள் அநேகர்.
   மகேஸ்வர பூஜைக்கு சாமான்கள் பெற அகமமதையுடைய ஏத்தாபூர் பார்ப்பனர் தெருவிற்கு சென்று நான்கு வர்ணாசிரமத்தை பற்றி பேசி நிஷாத்தாத்பர்யங்களை சாந்த முறையிலே விளக்கி ஹடயோகப்ரதீகள் போன்ற நூல்களில் காணாத அநேக அரிய பெரிய உன்னத உபர்நிதிகளை ஸ்வாமிகள் தம் திருவாக்கால் சரமாரியாக பொழிந்து அனைவரையும் சிறிது நேரம் அமைதியடைய செய்து பூஜைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்த்து அவ்வூர் மக்களை குரு நிருவாண தேசிகனிடம் சரணடைய செய்தார்.
   குருநாதர் ஆணைப்படி யாத்திரை செய்த பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் நிலைப்பாடி கிராமத்திற்கு சென்று மக்களிடம் யாத்திரை சென்று வந்ததை விளக்கி கூறி ஆசி வழங்கினார்.
   தலை மாணவரான மாரிமுத்து சுவாமிகள் நிஷ்டானு பாவத்தில் தேசிகன் நிருவிகற்ப சமாதி அடைவதை தெரிந்து சந்நிதானம் வந்து பூர்வீக அபிடேகங்கள் செய்து நிஷ்டையில் தன் குருநாதர் நிருவாண தேசிகரை அடக்கம் செய்தார்.
   தனது குருநாதரின் ஆணைப்படி மடத்தின் அருகில் உள்ள கிணற்றை பெரியதாக வெட்டி குளமாக்கியும் குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்நானம் செய்யவும் தளவாய்ப்பட்டி கிராமம் நகரமாகவும் மற்றும் பிரம்ம உற்சவமும் தெற்ப உற்சவமும் நடைபெற வழி வகுத்தார்.
   தனது குருநாதரின் எண்ணப்படி தளவாய்ப்பட்டி மக்கள் தங்க ஆபரணங்களை விரும்பி கொடுக்கும்படி செய்து வேணுகோபால், ஆஞ்சநேயர் சிலைகளை சொர்ணத்தால் உருவாக்கினார். ஒவ்வொரு தை அமாவாசையன்று வேணுகோபால், ஆஞ்சநேயர் தங்க விக்ரகங்கள் தேரில் பவனி வருவதை தளவாய்பட்டி மக்கள் கண்டு களித்து வருகிறார்கள்.
   பொருள், புகழ், அருள் முதலிய ஐஸ்வர்யங்கள் நிறையப் பெற்றது தளவாய்ப்பட்டி.
   தங்கட்கு பெருநிதி கிடைக்க பெற்றதாக எண்ணி மகிழ்ந்து சுவாமிகளிடம் அடைக்கலம் புகுந்து உடல், பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணித்து சேவை செய்து அவ்வூர் மக்கள் அனைவரும் இன்றும் ரதோற்சவம் நடத்தி அருள் பெருக்கி பொருள், புகழ் முதலியன பெற்று இன்புற்று வாழ்கின்றனர்.
   குருநாதர் அறிவுரைப்படி மாரிமுத்து சுவாமிகள் அறுபடை வீட்டில் மூன்றாம் படை வீடான பழநியம்பதி வந்து வரத்தாற்றங்கரையில் தியானம் மேற்கொண்டு தனது அடியார்களுக்கும் அடைக்கலம் தந்து உபதேசங்கள் வழங்கி 1934-ம் ஆண்டு புரட்டாசி திங்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பரிபூரணமானவர்கள்.
   அவரது சிஷ்யர்களில் ஒருவரான முத்துசாமி சுவாமிகள் முருகன்பால் குருநாதர் கொண்ட பற்றையும் பக்தியையும் பார் புகழ் செய்ய வேண்டும் என்பதற்காக அவரது சமாதியின் மீது முருகன் சிலையை நிறுவினார்கள்.
   போகர் உருவாக்கிய சிலை போல் முத்துசாமி சுவாமிகள் உருவாக்கிய சிலை உள்ளதை பார்த்து மக்கள் வியப்புறுகிறார்கள். சுவாமிகளின் பிரதம சீடரான வேலாயுத சுவாமிகளின் சமாதியும் அருகில் உள்ளது.
   சுவாமிகளின் சிஷ்யரான முத்துசாமி சுவாமிகள் மடத்தை போற்றி பரிபாலனம் செய்து வந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் குரு பூஜையை தளவாய்ப்பட்டி மற்றும் பழனியை சுற்றியுள்ள பகுதிகளில் மகேஸ்வர பூஜைக்கு வேண்டிய பொருட்களை பக்தர்களிடம் இருந்து வரவழைத்து அவரும் சில முக்கிய இடங்களுக்கு சென்று வசூல் செய்து சிறப்பாக நடத்தி குருவை போற்றி வந்தார்.
   அவருக்கு பின் ஆலோசனைக் குழு பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் மடாலயத்தை நிர்வகித்து வந்தது. அவ்வாலோசனைக் குழு 1981 – ஆம் ஆண்டு கோவை சிரவணபுரம் கௌமார மடாலயத்திடம் ஒப்படைத்தார்கள். தற்பொழுது பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் திருமடம் சிரவை ஆதினத்தின் கீழ் இயங்குகிறது.ஆதீன கர்த்தர் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அவர்கள் ஓவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பட்டணம் சுவாமிகளுக்கு மிகச்சிறந்த முறையில் குரு பூஜையை நடத்தி வருகின்றார்கள். வருகின்ற புரட்டாசி ஆயில்யம் அன்று குரு பூஜையோடு குடமுழுக்கும் நடக்க இருக்கின்றது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
படம்: சென்ற புரட்டாசி ஆயில்யம் அன்று பட்டணம் சுவாமிகள் குரு பூஜை

                இணையதளம்: www.kaumaramutt.com

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!