திங்கள், 19 மே, 2014

கொங்குநாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த ஜீவசமாதி !

                                                                                   சதாசிவப் பிரம்மேந்திரர்.




சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாநகரிலே சோமநாத யோகியார், பார்வதி தேவி என்ற புனிதத் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.


இளமையிலேயே சிறந்த முறையில் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, குண்டலினி யோகப் பயிற்சியை அனுஷ்டித்து நல்ல பிரம்ம தேஜஸுடன் விளங்கி வந்தார் சோமநாத யோகியார்.
பிரம்மச்சரிய விரதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சோமநாத யோகி 25 வயது வரை திருமணம் பற்றிய எண்ணமே இல்லாமல் வளர்ந்து வந்தார். பிறகு அவருடைய பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க, 25 வயதுக்குப் பின்பு திருமணம் செய்து கொண்டார் சோமநாத யோகியார்.

பார்வதி தேவி என்ற புனிதவதியைத் திருமணம் செய்து கொண்ட சோமநாத யோகியார், அதன் பின்னரும் கடுமையாக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து தம் மனைவியையும் தவ வாழ்க்கையில் ஈடுபடுத்தினார்.

திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் கழித்து, நமக்கு சத்புத்திரப் பேறு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது சுவாமி! என்று பார்வதி தேவி பணிவுடன் நினைவூட்டினார்.
இன்றிலிருந்து ஸ்ரீராமநாமத்தை அப்யசிக்கத் தொடங்கி கோடிக்கணக்கான முறை ஸ்ரீராமநாமம் கூறி, உனது உடம்பில் உள்ள இரத்தம், இரத்த அணுக்கள் எல்லாவற்றிலும் ஸ்ரீராமநாமம் பாய்ந்திட வேண்டும்… அதன் பிறகு நமக்குப் பிறக்கும் மகன் சத்புத்திரனாகப் பிறந்து இவ்வுலகை நல்வழிப்படுத்துவான்! என்று சோமநாத யோகியார் கூறிவிட்டார்.

அதன்பிறகு சில ஆண்டுகள் இருவரும் ஸ்ரீராமநாம ஜபம் செய்து வந்து, ஒருமுறை இராமேஸ்வரம் திருத்தலம் சென்று ஸ்ரீராமநாதப் பெருமானைத் தரிசித்து அந்தத் திருத்தலத்தில் தங்கியிருந்த தினத்தன்று இரவு ஸ்ரீராமநாதப் பெருமான் இருவரின் கனவிலும் தோன்றி சத்புத்திரன் பிறப்பான் என்று அருளினார். பின்னர் இருவரும் மதுரை திரும்பினார்கள்.
அன்றிலிருந்து 10-ஆவது மாதத்தில் தங்க விக்கிரகம் போன்ற ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. சிவராமகிருஷ்ணன் என்று பெயரிட்டுச் சிறப்பாக வளர்த்து வந்தனர்.
குழந்தைக்கு மூன்று வயதாகும் முன்பே சோமநாத யோகி இமயமலைக்குத் தவம் புரியச் சென்றுவிட்டார்.

சிவராமகிருஷ்ணன் இளம் வயதிலேயே தம்முடைய குருமார்கள் மெச்சும் சீடராக விளங்கினார். முற்பிறவித் தவங்களின் பலன் போல், கற்றது அனைத்தும் அவரின் கைவசமாயிற்று.
ஏகசந்தக்ராஹி எனப்படும்படி, ஒரு முறை கேட்டதுமே அதனைக் கிரகித்துக் கொள்ளும் திறன் படைத்தவராக விளங்கிய சிறுவயது சிவராமகிருஷ்ணனுக்கு வேத சாஸ்திரப் பாடங்கள் கற்பித்த சாஸ்திரிகள், அவரைத் திருவிசைநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள் என்ற பெரிய வித்வானிடம் அனுப்பி வைத்தார்.

அதற்கு முன்பே 12-ஆவது வயதில் சிவராமகிருஷ்ணனுக்குத் திருமணமும் ஆகி விட்டது. ஐந்து வயதுப் பெண் குழந்தையே அவருடைய மனைவி. திருமணம் முடிந்ததும் பெண்ணின் தாய் – தந்தையர் உரிய வயதில் தம்முடைய மகளைப் புகுந்த வீட்டில் கொண்டு வந்து விடுகிறோம் என்று சொல்லி அழைத்துச் சென்றனர். அந்தக் கால வழக்கம் அது.
திருமணம் முடிந்தவுடன் திருவிசைநல்லூர் சென்று மேலும் சாஸ்திரங்களை ஓதி வந்தார் சிவராமகிருஷ்ணன். வேத சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ளும் போதே அறிவுடன் அனுபூதியும் பெற்று விடுகிற உன்னத நிலையைப் பெற்றிருந்த சிவராமகிருஷ்ணனுக்கு பரமசிவேந்திராள் என்ற பெரியவரிடத்தில் பாடம் கேட்கும் அரிய வாய்ப்பும் கிடைத்தது.
சீடனுடைய பெரும் புலமையை உணர்ந்த பரமசிவேந்திராள் அவருக்குப் பெருமை செய்யும் காலத்தை நோக்கிக் காத்திருந்தார்.

சில காலம் கழித்து, மைசூர் மகாராஜாவின் மந்திரிகள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, அம்மைசூர் மகாராஜாவின் ஆஸ்தான வித்வான் என்னும் பெரும் பதவியை அலங்கரிக்குமாறு சிவராமகிருஷ்ணனை ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார் பரமசிவேந்திராள்.
மைசூர் மகாராஜாவும் தம்மிடம் பரிசு கேட்டு வரும் வித்வான்களின் திறமையை ஆராயும் பரீட்சாதிகாரியாக சிவராமகிருஷ்ணனை நியமித்து விட்டார்.
பரீட்சாதிகாரியாக, எல்லாம் அறிந்த சிவராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதால், எந்த வித்வானுக்கும் இவரது கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாததால் பரிசு பெறுவது குறைந்தது. வித்வான்களின் மனக்குறை ஒருவாறு பரமசிவேந்திராளுக்குத் தெரிய வர, அவர் சிவராமகிருஷ்ணனை அழைத்து, உன்னுடைய வாக்குச் சாதுர்யத்தைக் கொண்டு எல்லா வித்வான்களின் வாய்க்கும் பூட்டுப் போடுகிறாயா? என்று கடிந்து கொண்டார்.

இங்ஙனம் பரமசிவேந்திராள் கடிந்து கொண்டதற்குக் காரணம், சிவராமகிருஷ்ணனின் சாஸ்திர ஞானம் உண்மையான ஆன்மிக அறிவைத் தருவதற்குப் பதில் அவரை வீணான வாத விவாதங்களில் இழுத்து விடுகிறதே என்ற ஆதங்கமே ஆகும்.
ஊர் வாயை எல்லாம் அடக்குகிற நீ உன் வாய்க்கு எப்போது பூட்டுப் போடுவாய்? என்று பரமசிவேந்திராள் கேட்ட அடுத்த கணமே பேசுவதை விட்டொழித்து மௌன விரதம் பூண்டார் சிவராமகிருஷ்ணன். அவருக்குச் சன்னியாச தீட்சை அளித்து சதாசிவம் என்ற பெயரையும் சூட்டிய குருநாதர் பரமசிவேந்திராள், நீ விரும்பிய இடத்துக்கெல்லாம் சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ளலாம்! என்று அனுமதி அளித்தார்.

அன்று சதாசிவமாகக் கிளம்பிய சிவராமகிருஷ்ணன்தான், தமது புனித வாழ்வின் இறுதிக்குள் தவ வாழ்வின் உன்னத உயரங்களைத் தொட்டு, சித்துக்கள் பல புரிந்து பலரையும் ஆட்கொண்டு சதாசிவ பிரம்மேந்திராள் என்று போற்றப் பட்டார்.
குருவின் அனுமதி பெற்றுக் கிளம்பிய சதாசிவம் நேராகக் கரூர் அருகிலுள்ள நெரூருக்கு வந்து சேர்ந்தார். ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஆற்றங்கரையைத் தேர்ந்தெடுத்துத் தவம் புரியத் தொடங்கினார்.

மந்திரயோகம், பரிசயோகம், பாவயோகம், அபாவயோகம், மகாயோகம் என்ற ஐந்து வகை யோகங்களையும் செய்முறையில் கொண்டுவந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் சகல வித சித்துக்களையும் விளையாட்டாக அரங்கேற்றுகிற சக்தியைப் பெற்றார்.
ஒருமுறை கொடுமுடி என்ற ஊர் அருகில் காவிரி ஆற்றின் நடுவில் உள்ள அகத்தியர் பாறை என்ற பெரும்பாறையில் சதாசிவப் பிரம்மேந்திரர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். காவிரியில் வந்த பெருவெள்ளம் இவரை உருட்டிக் கொண்டு போய் மணலுக்குள் புதைத்து விட்டது. அப்போதும் நிஷ்டையில்தான் இருந்தார்.

சில மாதங்கள் கழித்து, காவிரியில் மணல் எடுக்க வந்த சிலர் மண் வெட்டியின் முனை பட்டு இரத்தம் வடிந்ததைக் கண்டு பதறிப்போய் மண்ணை விலக்கிப் பார்த்தால் சதாசிவரின் உடல் தென்பட்டது. காயம் பட்டது கூடத் தெரியாமல் ஆழ்ந்த நிஷ்டையில் நீடித்திருந்தார் அவர்.
பிறகு ஊர்ப்பெரியவர்கள் வந்து, அவரது உடலைத் தேய்த்துச் சூடேற்றி எழுப்பி வைத்து, உணவளித்ததும் எதுவும் நடக்காதது போல் எழுந்து சென்று விட்டாராம் சதாசிவப் பிரம்மேந்திரர்.
இதேபோன்று புதுக்கோட்டை அரசரது சமஸ்தானத்துக்கு உட்பட்ட காடுகளில் உள்ள வைக்கோல் போர்களில் கால் தடுக்கி விழுந்து அப்படியே கிடந்திருக்கிறார் சதாசிவர். இதை அறியாமல் மேலும் மேலும் வைக்கோல் போர்களைப் போட்டு மூடிவிட்டார்கள் பணியாளர்கள்.
அப்படியே கிடக்கிறார் சதாசிவம்.

ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து வைக்கோல் போர்கள் எல்லாம் மாடுகளால் தின்று தீர்க்கப்பட்ட பிறகே எழுந்து நடந்தார். தகவல் அறிந்த புதுக்கோட்டை மகாராஜா விஜயரகுநாதத் தொண்டைமான், சதாசிவப் பிரம்மேந்திரரிடம் மன்னிப்புக் கேட்டார். மௌன மொழியிலேயே உபதேசங்களும் பெற்றார். கூடவே, சதாசிவர் சித்தியடையும் முன்னர் ஒருமுறை தரிசனம் அளிக்க வேண்டும் என்ற வரத்தையும் கோரிப் பெற்றார்.


சதாசிவம் எழுதிக்காட்டியபடி உத்தமர் கோவிலில் உள்ள கோபாலகிருஷ்ண சாஸ்திரிகளை அணுகி வேதசாஸ்திரக் கருத்துக்களை உபதேசம் பெற்றார் மன்னர்.
கரூரில் உள்ள பெரியவர்கள் கேட்டுக் கொண்டபடி அங்குள்ள தான்தோன்றி மலையப்பரைப் பூசித்து ஜன ஆகர்ஷணச் சக்கரம் எழுதிப் பூசை செய்து பிரதிஷ்டை செய்தார்.
இதனால் திருப்பதி வேங்கடாசலபதியின் தரிசனம் பெறுவதற்குச் சிரமப்பட்டுச் செல்வதற்குப் பதிலாக, தான்தோன்றி மலையப்பரையே வழிபட்டு இன்றளவும் பக்தர்கள் பலன் அடைகிறார்கள்.
தஞ்சை மகாராஜா தன் மகளது கண்நோய் தீர்வதற்கு, சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொண்டான். அம்மனோ, நான் உன்னருகிலேயே இருக்கிறேன் என்று மகாராஜாவின் கனவில் வந்து சொல்ல- சதாசிவ பிரம்மேந்திரரின் துணையால் புன்னைநல்லூரில் மாரியம்மன் எழுந்தருளியிருக்கும் புற்றை மன்னர் கண்டு பிடித்தார்.

அந்தப் புற்று மண்ணில் அஷ்ட பந்தன மருந்துகளைக் கலந்து மாரியம்மன் உருவத்தை உருவாக்கிக் கொடுத்தார் சதாசிவ பிரம்மேந்திரர். மேலும் ஜன ஆகர்ஷணச் சக்கரம் ஒன்று எழுதிப் பிரதிஷ்டை செய்தார்.

அம்மன் பூசை நடைபெறத் தொடங்கியவுடன் இளவரசியின் கண் நோய் முற்றிலும் குணமானது.
மதுரையில் நடைபெறும் திருவிழாவிற்குப் பல குழந்தைகளைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வந்ததும், தம்மைத் தாக்க வந்தவர்களை மரம் போல் நிற்கச் செய்ததும், பலரது நோய் நொடிகளைத் தமது அருட்பார்வையாலேயே போக்கியதும் சதாசிவப் பிரம்மேந்திரரின் அருள் விளையாட்டுக்களாகும்.
ஒரு சமயம் மனது சுயநினைவின்றி பிரம்ம நிஷ்டையில் ஒரு முஸ்லீம் சிற்றரசரின் அவையில் நுழைந்து விட்டார் பிரம்மேந்திரர். கோபம் கொண்ட அரசன் தன் வாளால் அவரது கைகளை வெட்டி விட்டான். ஒரு கை கீழே விழுந்து விட, மற்றொரு கை பாதி ஒட்டியபடி தொங்கிக் கொண்டிருந்தது. இரத்தம் கொட்டிக் கொண்டிருந்த நிலையில் இவர் தொடர்ந்து செல்ல, பயந்து போன அரசன் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள, இரண்டு கைகளையும் எடுத்து ஒட்டிக் கொண்டு ஒன்றும் நடவாதது போல் சென்று விட்டார் பிரம்மேந்திரர்.
இந்த நிகழ்ச்சியின் போது சிறிதே நினைவு வந்த நிலையில் தவறு செய்த முஸ்லீம் மன்னனை மன்னித்து விட்டார்.

இருந்தாலும், தாம் இதுபோல் திகம்பர நிலையில் ஆங்காங்கே திரிவதால் தம்மை அறியாத மக்களில் சிலர் தம்மைத் தாக்குவதும், பிறகு வருந்துவதுமாக நிகழ்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தோன்றியது பிரம்மத்திற்கு.

இத்துடன் தமது சித்திகளை நிறுத்திக் கொண்டு தமது பூதவுடலை மறைத்து மகாசமாதி அடைந்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.
நெரூரில் தாம் தவத்தைத் தொடங்கிய இடத்திலேயே சதாசிவர், முன்னமே வாக்குக் கொடுத்தபடி தமது சீடர்களான புதுக்கோட்டை மகாராஜா, மைசூர் மகாராஜா, தஞ்சாவூர் மகாராஜா மூவரையும் மானசீகமாக நினைக்க, மூவரும் விரைந்து வந்து சேர்ந்தனர்.

அவர்கள் மூலம் அமைக்கப்பட்ட குகையில் அமர்ந்து கொண்டார் சதாசிவப் பிரம்மேந்திரர். பின்னர் பக்தர்கள் விபூதி, மஞ்சள்பொடி, உப்பு, செங்கற்பொடி முதலியவற்றை இட்டு மூடினர். மேலே ஒரு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்தனர். மகாசமாதியின் மேல் வில்வமரம் ஒன்றும் எழுந்தது.
அவ்விடத்தில் ஜீவசமாதியாய் எழுந்தருளியிருந்து இன்றளவும் பக்தர்களுக்கு அருள் செய்து வருகிறார் சதாசிவப் பிரம்மேந்திரர்.

7 கருத்துகள்:

  1. அய்யா,முகவரியை முழுவதும் குறிப்பிடுங்கள்.............

    பதிலளிநீக்கு
  2. புரியவில்லை எந்த முகவரி உங்களுக்கு வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. ஐயா, சதாசிவ பிரம்மேந்திரர் வரலாறும், திருவிளையாடல்களும் மிக அற்புதம். இன்னும் பல சித்தர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தாங்கள் எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறோம், கௌமாரப் பயணத்தில் அடியேனையும் தாங்கள் பயணியாக சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள பாலா அவர்களுக்கு,

    உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி. எங்கள் குருநாதர் ஆசிர்வாதத்தோடும் முருகப்பெருமானின் அருளாசியோடும் புதிய பதிவுகள் உங்கள் ஆதரவோடு தொடரும்.

    Please add our FB ID : kaumarappayanam or shivprakash7032

    பதிலளிநீக்கு
  5. ஐயா இவருடைய ஜீவ சமாதி எங்குள்ளது

    பதிலளிநீக்கு
  6. ஐயனின் ஜிவசமாதி உள்ள நெரூரின் முழுமையான முகவரி தாருங்கள் ஐயா

    பதிலளிநீக்கு