வியாழன், 31 ஆகஸ்ட், 2017

புலவர் புராணத்தில் ஒரு துளி

 கௌமார குரு நாதர் தவத்திரு.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் புலவர் புராணம் என்ற பெயரில் 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்கள். இது மூவாயிரம் பாடல்களைக்கொண்டதாகும். அதில் ஒரு துளி பகழிக்கூத்தர் பற்றி நமது குருநாதர் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களிடம் இருந்து வெளிப்பட்டது. 
                                                    
                                                               பகழிக்கூத்தர்
பகழிக்கூத்தர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் இயற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர். இவர் இயற்றிய மற்றொரு நூல் சிந்தாமணிச் சுருக்கம்.  இவருடைய ஊர் ஏரல். இவ்வூர் திருநெல்வேலி அருகே உள்ள திருவைகுண்டத்தைச் சார்ந்த பெருங்குளத்துக்கு கிழக்கே உள்ளது.இவர் இயற்றிய நூல் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்.இவர் வைணவ மரபினர்.இப்பிள்ளைத் தமிழைப்பாடி வயிற்று நோய் நீங்கப் பெற்றார். இவர் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றி முடித்ததும் சபையோரில் சிலர் இவர் வைணவர் என்று மரியாதை செய்தாது புறக்கணித்தனர். அன்றிரவு முருகவேளுக்குச் சாத்தப்பட்டிருந்த ரத்ன பதக்கம் காணாமற்போக, விடியற் காலையில் கோயிலார் தேட, அது நித்திரை செய்து கொண்டிருந்த பகழிக்கூத்தரது கழுத்தில் அணியப்பட்டிருப்பதைக் கண்டு,அவர் மகிமையை அறிந்து தாம் செய்த அபசாரத்தை பொருத்தருளும் படி அவரைக் கேட்டுக் கொண்டு அவரைப்பல்லக்கில் ஏற்றி ஊர்வலம் வந்து மரியாதை செய்தனர்எனவேதான் சமயபேதங்கள் பார்க்காமல் அறுசமய வழிபாடுகளயும் செய்வது கௌமார நெறியாகும். இதை முறைப்படுத்தியவர் கௌமார குரு நாதர் தவத்திரு.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள் ஆவார். அவரிடம் இருந்து தோற்றம் பெற்றதே கோவை கௌமார மடாலயம் ஆகும். புலவர் புராணப் பாடலை நமது கௌமாரபயணம் வாசகர்கள் படித்து அருள் பெறுக.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் அருளிய பழிக்கூத்தரைப் பற்றி கௌமார குரு நாதர் தவத்திரு.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய புலவர் புராணம் எனும் நூலில் உள்ள பழம்பாடல்.

பூமாது போற்றும் புகழ்ப்பகழிக் கூத்தாவுன்
பாமாலை கேட்கயாம் பற்றோமோ- யேமம்
கொடுக்க வறியேமா கூற்றுவன்வா ராமற்
றடுக்க வறியேமா தாம்.
                            -புலவர் புராணம்

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள்
                 www.kaumaramutt.com
                     
படம்: எம்மதமும் சம்மதமாய் ஹஜ் கமிட்டி தலைவருக்கு பாராட்டு தெரிவித்த சிரவையாதீனம் அவர்கள். நன்றி: தினத்தந்தி

            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக