செவ்வாய், 24 ஜூலை, 2018

கௌமார மடாலயம் சித்திரத் தேர் வரலாறு-சுருக்கம்

சிரவணபுரம், கௌமார மடாலயம், தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் சித்திரத் தேர் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்...


#கௌமார_மடாலயம், தண்டபாணிக் கடவுள் திருக்கோயில்த் தேர் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்...

☀️நமது #சிரவணபுரம் கௌமார மடாலயதில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள, எல்லாம் வல்ல தமிழ்க் கடவுளான #முருகப்பெருமானின் திருவடிகளுக்குச் சமர்ப்பிக்க ஒரு திருத்தேர் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், நமது சிரவை ஆதீனம் மூன்றாம் குருமகா சந்நிதானங்கள் #தவத்திரு_கஜபூசைச்_சுந்தர_சுவாமிகள் அவர்களின் எண்ணத்தில் தோன்றியதன் காரணமாக உருவானதுதான் நமது சித்திரத் தேர்.
☀️


☀️தனிச்சிறப்புகள்:


பொதுவாக எல்லா தேர்களிலும் 5 பூதப்பார்கள்தான் இருக்கும். (தேரின் அடிப்பாகத்தில் தாங்கக்கூடிய குறுக்குக் கட்டைகள் ஒவ்வொன்றுக்கும் பூதப்பார் என்று பெயர்) ஆனால் சித்திரத் தேர் 6 பூதப்பார்களால் உருவாக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு. மேலும் 12 கோணத்தில் இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது.
தேரின் அடிப்பாகத்தைப் பூதங்களும், அதற்கு மேலாக கூர்மம் (ஆமை) தாங்குவதாகவும், அதற்கு மேலாக பூமாதேவியும், அதற்கு மேலாக ஆதிசேடனும் தாங்குவதாக சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு மேலுள்ள பகுதி “சித்தூர் மட்டம்” என்பதாகும்.
☀️சித்தூர் மட்டம் - பால ரூப சிற்பங்கள் 
முருகக் கடவுளின் “பால ரூப” சிற்பங்கள் இப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளன. சிவபெருமான் நெற்றிக்கண் திறந்து ஆறு குழந்தைகளையும் உண்டாக்கும் காட்சியும், உமாதேவியார் ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்க்கும் காட்சியும், தம்பதிகளாய் சிவன் பார்வதி காளை வாகனத்தில் குழந்தையை எடுப்பதற்காகச் செல்லும் காட்சியும், நாரதரின் வேள்வியில் தோன்றிய முரட்டு ஆட்டை வீரபாகு சிறைப்பிடித்தல், முரட்டு ஆட்டை அடக்கி வாகனமாக்கிய முருகன், வீரபாகு நாரதருடன் தோன்றும் காட்சி, கைலாயத்தில் பாலமுருகனைப் பிரம்மன் மதிக்காமல் சென்ற காட்சி, பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை சிறை வைத்தல், பிரணவ மந்திரத்தின் பொருளைச் சிவபெருமானுக்கு ஓதுதல், மயிலை அன்புடன் அணைத்து மயூரப்பிரியராக முருகன் காட்சி தருதல், மூன்று முகம் ஆறு கைகளுடன் முருகன் கார்த்திகேயராகத் தோன்றுதல், மாம்பழத்திற்காக உலகை மயில் மீது சுற்றி வலம் வருதல், ஞானப்பழத்தை விநாயகர் பெறுதல், இறுதியில் முருகன் பழனியில் ஆண்டியாய் நிற்றல், யானையுடன் கூடி “கஜாரூடர்” என்ற பெயருடன் முருகன் காட்சி தருவது போன்றவை தத்ரூபமாகச் “சித்திரத் தேரில்” சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
☀️பேரூர் மட்டம் - போர்க்கோலச் சிற்பங்கள்:


சித்தூர் மட்டத்திற்கு மேலுள்ள பகுதி “பேரூர் மட்டம்” என்பதாகும். இப்பகுதியில் கடவுள்களின் போர்க் கோலச் சிற்பங்கள் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. பேரூர் மட்டத்தின் முன்பகுதியில் சிவன், முருகன், விநாயகர், அம்பிகை, திருமால், சூரியன் சிற்பங்களும் முருகன் கிரவுஞ்சமலை மீது வேல் ஏவும் காட்சி, தாரகாசுரனை அழிக்கும் காட்சி, சூரபதுமன் தர்பார் காட்சி, பானுகோபன் வீரபாகு போர்க் கோலம், சிங்கமுகன் முருகன் போர்க் காட்சி, சூரபதுமனுடன் முருகன் போர்க் காட்சி, மாமரமாய் நின்ற சூரபதுமன் மேல் வேல் ஏவும் காட்சி, மாமரம் பிளந்து அது சேவலாகவும், கொடியாகவும் மாறிய காட்சி, சிவபெருமான் யானை உரி போர்த்த மூர்த்தியாய் நின்ற காட்சி, சிவன் யமனை எட்டி உதைத்த காட்சி, ராவணன் போர்க்கோலம், கம்சன் கண்ணன் போர், கண்ணன் மோகினி உருவில் பத்மாசுரனை வஞ்சம் தீர்த்த காட்சி, துர்க்கை மகிசாசுரன் போர்க்காட்சி போன்ற போர்க் கோலச் சிற்பங்கள் காண்போரைக் கவரும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளன.

☀️இருதயப் பகுதி:

சித்திரத்தேரின் நடு மையத்தை இருதயப் பகுதி எனக் குறிப்பிடுவர். இருதயப் பகுதி என்றும் துடிப்புள்ளது என்பதால் இப்பகுதியில் அமைந்த எல்லா சிற்பங்களும் நடனமாடுவது போன்ற தோற்றமுடையதாக அமைக்கப்பட்டுள்ளன.
☀️நாராசனப் பகுதி – அடியார்களின் சிற்பங்கள்:
இருதயப் பகுதிக்கு மேல் அமைந்துள்ளது நாராசனம் என்ற பகுதி. இதில் முருகனைப் போற்றிப் புகழ்ந்த அடியவர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன அகத்தியர், நக்கீரர், அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், இராமானந்த சுவாமிகள், கந்தசாமி சுவாமிகள் ஆகியோரின் சிற்பங்களும் இதையடுத்து குமரகுருபரர், சிதம்பரம் சுவாமிகள், சிவப்பிரகாசர், சிவஞான பாலைய சுவாமிகள், வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்ற அடியார்களும் அடுத்து சைவ அடியார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்பர், திலகவதியார் ஆகியோரும் அடுத்து வைணவ அடியார்களான பெரியாழ்வார், இராமானுஜர், திருமங்கையாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், மத்வாச்சாரியார் ஆகியோரும் அடுத்து தத்துவ ஆசிரியர்களான மெய்கண்ட தேவர், அருணந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம், சாந்தலிங்க சுவாமிகள், திருவள்ளுவர் ஆகியோரும் அடுத்து முருகன் அடியார்களான ஆதிசங்கரர், போகர், பாம்பாட்டிச் சித்தர், செந்தில் நாயகர் சுவாமிகள், சுந்தரத்தம்மையார், முருகானந்த சுவாமிகள் ஆகியோரும் அடுத்து கௌமார மடாலயம் அடியார்களான பேரூர் சுந்தர சுவாமிகள், சபாபதி சுவாமிகள், பாப்பநாயக்கன்பாளைய சுவாமிகள், ராசு சுவாமிகள், தாயம்மாள், முருகதாச சுவாமிகள் ஆகியோரும் அடுத்து கிருபானந்த வாரியார், அரங்கமுத்து சுவாமிகள், குமாரசாமி சுவாமிகள், சாந்தலிங்க ராமசாமி அடிகளார், ராமகிருட்ண சுவாமிகள், தம்பி சுவாமிகள் ஆகியோரும் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கின்றார்கள்.
☀️தேவாசனப் பகுதி – தேவர்களின் சிற்பங்கள்:
நாராசனம் என்ற பகுதிக்கு மேலுள்ள பாகம் தேவாசனமாகும். இப்பகுதியில் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலியோரின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
☀️சிம்மாசனப் பகுதி: 
தேவாசனப் பகுதியின் நடுநாயகமாக முருகப்பெருமான் அமரச் சந்தன மரத்தாலான நவரத்தினச் சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுந்தர சுவாமிகள், இராமானந்த சுவாமிகள் ஆகியோர்களின் உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன மேலும் அஷ்ட்டலட்சுமிகளின் திருவுருவங்களும் இதில் செதுக்கப்பட்டுள்ளன.
☀️மகுடங்கள்:
சிம்மாசனப் பகுதிக்கு மேல் மரத்தாலான மூன்று மகுடங்கள் அழகுடன் சித்திரத்தேரை அலங்கரிக்கின்றன.
☀️சிற்பிகள்:


மேலும் சித்திரத் தேரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிற்பத்திற்கும் ஒரு கோவில் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிற்பத்திலும் கால் நகங்கள் கூட துல்லியமாகத் தெரிகின்ற அளவுக்கு மிக மிக நுட்பமாக செதுக்கியிருப்பதை நோக்கும்பொழுது, இதை உருவாக்கிய சிற்பக் கலைஞர்கள் தனிச்சிறப்பு மிக்க கலைத் திறனோடு, சிரவணபுரம் தண்டபாணிக் கடவுளின் திருவருளையும் பெற்றவர்கள் என்றால் அது மிகையாகாது.

☀️இத்தனைச் சிறப்புகள் வாய்ந்த இந்த சித்திரத் தேரைக் காண ஒவ்வொரு ஆண்டும், கோவை, சிரவணபுரம், கௌமாரமடாலயம், அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு குருவருளும் திருவருளும் பெறுமாறு அன்புடன் வரவேற்றுக் கட்டுரையை நிறைவு செய்கின்றோம்.
குருவடி சரணம் – திருவடி சரணம்

(நன்றி: #தவத்திரு_கஜபூசைச்_சுந்தர_சுவாமிகள் மணிவிழா மலர் -1989)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக