செவ்வாய், 24 ஜூலை, 2018

முருகப் பெருமான் - குறிஞ்சிக் கிழவன்

#குறிஞ்சிக்_கிழவன்:
#முருகன் குறிஞ்சி நிலக் கடவுள் என்பதைத் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களால் அறியலாம். உலகிலுள்ள ஆன்மாக்கள் ஆணவமலத்தால் கட்டுண்டு கிடப்பதைக் கண்டு, பேரிரக்கம் கொண்டு, அவற்றை உய்விக்கும் பொருட்டுச் சிவசக்தியாகிய பரமேசுவரி தனு கரண புவன போகங்களை உண்டாக்கி, அனுபவிக்கச் செய்து, ஆன்மா பரிபக்குவ நிலையடைந்தவுடன் சிவத்துடன் கலக்கச் செய்து பேரின்பப் பெருவாழ்வு வாழச் செய்வார்.

இப்படிப்பட்ட அன்னை #உண்ணாமுலையிடம் கந்தன் ஞானமாகிய பால் அருந்தி சரவணப் பொய்கையிலுள்ள தாமரை மலராகிய தொட்டிலில் ஏறிக் கார்த்திகை மாதர் அறுவரின் திருமுலைப்பாலை உண்டு மகிழ்ந்தார். அப்போது #உமையம்மையார் கண்ணுதற் கடவுளுடன் சென்று அவ்வுருவம் ஆறினையும் தன்பொற்கரங்களால் எடுத்து அணைத்துக் #கந்தன் எனப் பெயரிட்டு உச்சிமோந்து மகிழ்ந்தார்.


முருகன் பல திருவிளையாடல்களைப் புரிந்து வளர்ந்து கடலின் நடுவில் தோன்றித் துன்பம் செய்த கிரவுஞ்ச மலையை அழித்துச் சூரசம்காரம் செய்தான். 

இளமையும், அழகும், அலங்காரமும் உடைய முருகனை, குறிஞ்சி நிலத்துக்கு உரியவன் (#குறிஞ்சிக்_கிழவன்) என்று #கந்தர்_அலங்காரம் கூறும். 
அழகனை, இளைஞனை, முருகனை வயதான கிழவன் என்று #அருணகிரிநாதர்கூறுகிறார். முருகன் தோன்றியவுடனே நாம் அழியப் போகிறோம் என்று எண்ணி கடலும், கிரவுஞ்ச மலையும், சூரபதுமனும் அழுதார்களாம்.
இன்னோரன்ன முருகன்பிறப்பு, வளர்ப்பு, சூரசம்காரம் ஆகிய விபரங்களையும், ஆன்மாக்களின் தத்துவார்த்தங்களையும் அருணகிரிநாதப்பெருமான் அழகாக கீழ்வரும் அலங்காரப் பாடலில் கூறுகிறார்.
"திருந்தப் புவனங்கள் ஈன்றபொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டிலேறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழக் குரழ விம்மிஅழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்றோதும் குவலயமே."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக