செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

கந்தர் கலிவெண்பா

1. திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா

(ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)


(குறிப்பு: எங்கெங்கு பதம் பிறிப்பதனால் பொருள் மாறுபடவில்லையோ அங்கெல்லாம் பதம் பிறிக்கப்பட்டுள்ளது.)
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
நாதமும் நாதாந்த(1) முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத(2) போதமாய் - ஆதிநடு
.1
(1) நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த
(2) போதமுங் காணாத

அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு
.2

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத .
.3

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியல்
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும்
.4

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்
ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம்
போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து .
5

உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்
.6

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும்
7

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய ..
.8

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
தொன்னுால் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னுால் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னுால் .
9

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்
சரியைகிரி யாபோகம் சார்வித்து - அருள்பெருகு
சாலோக சாமீப சர்ரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் .
.10

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி - உலவா
.11

தறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக்
கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் .
.12

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமுன்றும் - பாழாக
ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் ..
.13

அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்த தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் ..
.14

வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்துஉலவா இன்பம் -மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப் .
.15

பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து (1)உள்நின்று
ஒருமலர்த்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு ..
.16
(1) கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள்செய் துண்ணின்

முன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேயிருத்தி
ஆன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும்
யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்த முடியாக - ஞானம் .
.17

திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா - இருநிலமே
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் .
.18

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்
துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட .
.19

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் ..
.20

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் .
.21

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்
பாச இருள்துரந்து (1) பல்கதிரில் சோதிவிடும்
.22
(1) பாச விருடுரந்து ப்ல்கதிரிற் சோதிவிடும்

வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன்
.23

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்
.24

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
.25

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த
சிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர்
.26

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன்
.27

புரிநுாலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்
நாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி .
.28

இளம்பருதி நுாறா யிரங்கொடி போல
வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து
.29

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்
30

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த
கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி .
31

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ
32

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப்
33

பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம்
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில்
34

ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ .
35

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரசும் -சந்ததமும்
36

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைந்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ்
37

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள்
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து
38

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் .
39

எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று .
40

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர்
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல்
41

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய .
42

முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி .
43

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள்
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலுதித்து
44

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து - எங்கோன்
விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா - படைப்போன்
45

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும்
46

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல்
தாரகனும் மாயத் தடங்கிரியும் துாளாக
வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த்
47

தெள்ளு திரை கொழிக்கும் செந்துாரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம்
48

சூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய
வீரனைத் துாதாக விடுத்தோனே - காரவுணன்
வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு .
49

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன்
50

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு .
51

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்த்த மோலோனே - மூவர்
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே - மறைமுடிவாம்
52

சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்தப் - பூமருவு .
53

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து .
54

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க்
கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும் .
55

பல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்
பூதமுந்தீீ நீரும் பொருபடையும் - தீது அகலா .
56

வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் மயில்வேலும் - கச்சைத்
57

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் .
58

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை
59

எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து
60

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.
61

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக