சனி, 15 பிப்ரவரி, 2014

கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாது


”கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாது,” என்று பெரியோர்கள்

கூறுவதுண்டு. காரணம் கல்லால் ஏற்படும் வேதனை தற்காலிகமானது,

அதன் விளைவுகளின் தன்மையை மனித அறிவால் ஓரளவு கணிக்க முடியும்.

ஆனால், கண் திருஷ்டியின் விளைவுகளோ பல ஆண்டுகளுக்கும் ஏன் பல

பிறவிகளுக்கும் கூட தொடரக் கூடியது. அதன் விளைவுகளின் தன்மையை

மனித அறிவால் கணித்துக் கூற முடியாது.

மனிதன் தன்னுடைய பூர்வ ஜன்மத்தில் செய்த வினைகளின்

பலனையே இப்பிறவியில் நோய்களாகவும், விபத்துக்களாகவும், கடன்

தொல்லைகளாகவும் அனுபவித்து வருகிறான் என்று சொல்கிறோம்

அல்லவா? அது போல மனிதர்கள் அனுபவிக்கும் திருஷ்டி துன்பங்களும்

அவர்களுடைய பூர்வ ஜென்ம செயல்களின் பலன்களே என்பதில்

ஐயமில்லை.

கண் திருஷ்டியைக் களையும் சஹஸ்ர தீப தரிசனம்

நோய்த் துன்பங்கள், கடன் தொல்லைகள் போன்ற துன்பங்களை இறை

வழிபாடுகள், தீர்த்த யாத்திரைகள் போன்ற ஆன்மீக சாதனங்களால்

முற்றிலும்தணிக்க முடியாது என்பது உண்மையே ஆயினும்

அத்துன்பங்களின் விளைவுகளை நிச்சயமாக இறை வழிபாடுகளால் ஓரளவு

குறைத்துக் கொள்ளலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலும்,

எத்துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள தேவையான மன உறுதியைப் பெற

ஆன்மீக சாதனம் ஒன்றுதான் வழி என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

திருஷ்டிகள் சூழும் வாயில்கள்ஒருவர் அழகான புது கார் ஒன்றை வாங்கி

அதில் பயணம் செய்கிறார் என்றால்அப்போது அந்தக் காரையும் அதில்

பயணம் செய்பவரையும் அனைவரும் ஒரே கண்ணோட்டத்தில்

பார்ப்பதில்லை. அந்தக் காரின் சொந்தக்காரருக்கும்

அவருடைய அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் போன்றோருக்கும் கார்

மூலம் மிகவும் சந்தோஷம் கிடைக்கலாம். அவருடைய சகோதர,

சகோதரிகள் அந்த அளவிற்கு ஆனந்தத்துடன் அந்தப் புதுக் காரை

வரவேற்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. அவருடைய நண்பர்கள், மற்ற

உறவினர்கள் பலவித கேள்விக் குறிகளுடன் அந்தக் காரை எதிர்

கொள்வார்கள். அவருடைய எதிரிகளுக்கும், தினமும் மைல் கணக்கில்

நடந்தோ, சைக்கிள் போன்ற வாகனங்களிலோ பயணம் செய்ய வேண்டிய

நிலையில் உள்ளவர்களும் அந்தப் புதுக் காரைப் பார்க்கும்போது தங்களையும்

அறியாமல் ஒரு பொறாமை எண்ணத்தை மனத்தில் வளர்த்து விடுவார்கள்.

இவ்வாறு அந்தக் காரைப் பார்த்து சந்தோஷம் அடைபவர்களின் புண்ணிய

சக்திகளும், பொறாமை கொள்பவர்களின் புண்ணிய சக்திகளும்

ஒன்றையொன்று எதிர் கொள்ளும்போது இந்த சக்திகளில் பொறாமை

சக்திகளின் வெளிப்பாடு அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலையையே

நாம் திருஷ்டி என்று அழைக்கிறோம்.

இவ்வாறு நல்ல எண்ணெங்கள், நற்சக்திகளின் விளைவுகளை விட தீய

சக்திகளின், பொறாமை எண்ணங்களின் தாக்குதல் அதிகரிக்கும்போது

அந்த சக்திகளின் தீவிரத்தைப் பொறுத்து விபத்துகள், காரின் சில பாகங்கள்

பழுதடைதல், தீப்பிடித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுதல் போன்ற துன்பங்கள்

ஏற்படுகின்றன.அதனால்தான்,

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

அதாவது, அழுக்காறு என்னும் பொறாமைத் தீ அறத்தைப் பாழக்கி விடும்

என்று வள்ளுவப் பெருந்தகை எச்சரிக்கிறார்.

எனவே எந்த அளிவிற்குப் புண்ணிய சக்தியை பெருக்கிக் கொள்கிறோமோ

அந்த அளவிற்கு பொறாமை எண்ணங்களிலிருந்தும் அதன் விளைவாக

ஏற்படும் திருஷ்டி தோஷங்களிலிருந்தும் நம்மையும் நம்முடைய

உடைமைகளையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

பொறாமை ஏற்படுவதற்கு மூல காரணமாக இருப்பது கண்தானே. அதனால்

திருஷ்டி ஏற்படும்போது அது எந்த வித காரணத்தால் ஏற்பட்டாலும் அதை

கண் திருஷ்டி என்றே வகைப்படுத்துகிறோம். கண்களால் தூண்டப்பட்ட

மனது பக்குவம் அடையாத நிலையில் இருக்கும்போது அது பொறாமை

எண்ணமாக வடிவெடுத்து மற்றவர்களைத் தாக்குகிறது.

இவ்வாறு ஒரு எண்ணம் பொறாமையாக மாறி மற்றவர்களுக்கு அது

துன்பத்தை இழைக்கும்போது எந்த அளவிற்கு அதனால் ஏற்படும் விளைவுகள்

கொடியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு பொறாமை கொண்டவர்களின்

புண்ணிய சக்திகள் கரைந்து விடும் என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.

இவ்வாறு மனிதர்களைத் தாக்கும் பொறாமை சக்திகள் அவர்களின் கண்கள்,

மூக்கு, காது போன்ற ஒன்பது துவாரங்கள் வழியாக உடலில் புகுந்து

துன்பத்தை விளைவிக்கின்றன. எனவே பொறாமை எண்ணங்களின்

தாக்குதல்களிலிருந்து தப்பிக்க விழைவோர் அவர்கள் உடலில் உள்ள நவ

துவாரங்களைத் தூய்மைப்படுத்தும் வழிபாடுகளை மேற்கொள்வதால்

திருஷ்டித் துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

நவ துவார வழிபாடுகள்

மனித உடல் ஒன்பது சரீரங்களின் தொகுதியாகும். கோயில் கோபுரங்களில்

உள்ள கலசங்கள் மனித உடலின் தூல ரூபமாகும். எனவே, ஒன்பது

கலசங்களுக்குக் குறையாமல் உள்ள கோயில் கோபுரங்களை தினந்தோறும்

குறைந்தது மூன்று நிமிடங்கள் கண்ணார தரிசித்து வழிபடுதலால் மனித

சூட்சும சரீரங்கள் தூய்மை பெறுவதுடன் உடலில் உள்ள நவதுவாரங்களும்

சீர் பெறும். அதனால் திருஷ்டி துன்பங்களின் தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.

திருவானைக் கோவில் போன்ற திருத்தலங்களில் மூல மூர்த்தியை

நவசாளரங்கள் வழியாக தரிசனம் செய்து வழிபடுவதால் கண் திருஷ்டிகள்

நம்மை எளிதில் தாக்காத வகையில் கவச சக்திகளைப் பெருக்கிக் கொள்ள

முடியும். ஒன்பது சாளரங்களுக்கு மேல் உள்ள சிறுகமணி சிவத்தலம்

போன்ற திருக்கோயில்களிலும் இத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டு

பயனடையலாம்.

மனித உடலின் நவதுவாரங்களுக்கு அதிபதியாக விளங்கும் தெய்வங்களே

விநாயகப் பெருமானும், ஆஞ்சநேய மூர்த்தியும் ஆவார்கள். உலகிலேயே

மிகப் பெரிய சுயம்பு பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையார்

அருளும் மலைக் கோட்டையை ஒன்பது முறைக்குக் குறையாமல் கிரிவலம்

வந்து வணங்குவதால் கண் திருஷ்டி துன்பங்கள் விலகும்.

ராமபிரான் கயிலை ஈசனை வழிபடுவதற்காக திருக்கயிலையிலிருந்து

சிவலிங்க மூர்த்தியைப் பெற்று வருமாறு ஆஞ்சநேயரை அனுப்பினார்

அல்லவா? அப்போது ஆஞ்சநேய மூர்த்தி கயிலையில் எம்பெருமானை லிங்க

வடிவில் பூஜித்து அதன் பின்னரே ராமேஸ்வரத்திற்கு சிவலிங்கத்தைக்

கொண்டு வந்தார். அவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி கயிலை ஈசனை வழிபடும்

சித்திரத்தை அல்லது உருவப் படத்தை அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள

விஸ்வநாத லிங்க மூர்த்தியை தொடர்ந்து வழிபடுவதால் கண் திருஷ்டிக்

கோளாறுகள் நம்மை அண்டாது.

பொதுவாக, ஜாதக ரீதியாக செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக

விளங்குபவர்கள் கண் திருஷ்டி துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை.

முருக பக்தர்களும், கௌமார உபாசகர்களையும் திருஷ்டித் துன்பங்கள்

அண்டாது. எனவே குமரன் அருளும் மலைத் தலங்கள் யாவும் கண்

திருஷ்டியை நீக்கும் தலங்களே. அதிலும் சிறப்பாக திருச்செங்கோடு,

செங்கோட்டை அருகே திருமலை, கோயம்புத்தூர் அருகே அனுவாவி மலை

போன்ற குமரத் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டிக் காப்புத்

தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன.

திருமண வைபவங்களில்நவ தானியங்களை மண்சட்டிகளில்வளர்த்து

முளைப் பாலிகைகளை வழிபடும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. புது மணத்

தம்பதிகள் மேல் விரவும் கண் திருஷ்டி தோஷங்களைக் களைவதற்காகவும்,

தம்பதிகள் நற்சந்ததிகளைப் பெற்று வாழவும் இந்த முளைப் பாலிகை வழிபாடு

ஒரு முக்கிய திருமண வைபவமாக நிறைவேற்றப்படுகிறது.

இயற்கையாகவே, முளைப் பாலிகை வழிபாடு திருஷ்டி தோஷங்களை

நீக்கும் ஆதலால் மண் சட்டிகளில் முளைப் பாலிகைகளை வளர்த்து திருச்சி

சமயபுரம் அருகே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்திலும், கண்ணாயிரம்,

செந்தாமரைக் கண்ணன், கண்ணாத்தாள் போன்று கண் பெயருடைய

இறைவன், இறைவிகள் அருளும் தலங்களில் சமர்ப்பித்து வழிபாடுகள்

நிறைவேற்றுவதால் கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாது பாதுகாத்துக்

கொள்ளலாம். இந்த முளைப்பாலிகைகளை கன்றுடன் கூடிய பசுக்களுக்கு

வழங்குவதும் ஓர் அற்புத வழிபாடாகும்.

குழந்தைகள் மேல் படியும் திருஷ்டி தோஷங்கள்

பெரியவர்களை விட குழந்தைகளைத் திருஷ்டி தோஷங்கள் நிறையவே

பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலான குழந்தைகள் சுறுசுறுப்பாக

ஆரவாரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மேல் இயற்கையாகவே

பெரியவர்களுக்கும் உடல்நலம் குன்றியவர்களுக்கும் பொறாமை

எண்ணங்கள் உருவாகி அவை திருஷ்டி தோஷங்களாக வளர்ந்து

குழந்தைகளைத் தாக்குகின்றன.

இதனால்தான் முன் பின் தெரியாதவர்களிடம் குழந்தைகளைத் தரக் கூடாது

என்று நம் முன்னோர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தனர். தற்காலத்தில்

தம்பதிகள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில்

இருந்தால் அத்தகையோர் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டு விடும் முறை

வெகுவாக வளர்ந்து வருகிறது. பெற்றோர்களைத் தவிர மற்றவர்கள்

குழந்தைகளுக்கு ஊட்டும் உணவு நிச்சயமாக அவர்கள் உடல்

ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

இத்தகைய குழந்தைகளே எதிர்காலத்தில் பெற்றோர்கள் மேல் பாசம் என்பது

என்னவென்று தெரியாமல் தான் தோன்றித்தனமாக வளர்ந்து தங்கள்

பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விடும் சூழ்நிலை

உருவாகி விடுகிறது. பெற்றோர்கள் இதை நன்றாக ஆத்ம விசாரம் செய்து

உரியமுறையில் செயல்பட வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும் வெளி இடங்களுக்கு அவர்களைக்

கூட்டிச் செல்லும்போதும் கட்டாயம் குழந்தைகள் கன்னத்தில் ஒரு திருஷ்டி

பொட்டு வைத்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் கூட குழந்தைகள் திருஷ்டி

பொட்டு இல்லாமல் இருக்கக் கூடாது. இது பெற்றோர்களின் தலையாய

கடமை.கலியுக நியதியாக குழந்தைகள் மூன்று அல்லது ஐந்து வயது வரை

தெய்வீகத் தன்மையுடன் விளங்குவதால் அவர்களுக்கு எதிர்காலத்தில்

நடக்கப் போகும் நிகழ்ச்சிகளும் தங்கள் பெற்றோர்களுக்கு வரக் கூடிய

துன்பங்களும், ஆபத்துகளும் முன் கூட்டியே தெரிய வரும். எனவே,

முடிந்தவரை அக்குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு வரக் கூடிய

துன்பங்களைத் தாங்களே எடுத்து அனுபவிப்பதால் பெரும்பாலான

குழந்தைகள் அடிக்கடி நோய் வாய்ப்படுகின்றன. இதை அறிந்தால்தான்

குழந்தைகளை தேவையில்லாமல் சபிப்பதோ, அவர்களை அடிப்பதோ, கடுஞ்

சொற்களால் நிந்திப்பதோ எவ்வளவு தவறான செயல் என்பதை பெற்றோர்கள்

உணர்ந்து கொள்ள முடியும்.

குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு இடுவதற்கு உகந்த திருஷ்டிக் கண்

மையை பெற்றோர்கள் தாங்களாகவே வீட்டில் தயாரித்துக் கொள்தல் நலம்.

இந்த திருஷ்டிக் கண் மையை குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல்

பெரியவர்களின் திருஷ்டி நிவாரணத்திற்காகவும், கண் பாதுகாப்பிற்காகவும்,

தெய்வ மூர்த்திகளின் அலங்காரத்திற்காகவும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

திருஷ்டிக் கண் மை தயாரிக்கும் முறை

கரிசலாங் கண்ணி இலைகளை சிறிது நீர் விட்டு அம்மியில் வைத்து நன்றாக

அரைக்க வேண்டும். நவீன மிக்சி, கிரைண்டர்களைத் தவிர்க்கவும். அவ்வாறு

அரைத்த விழுதை ஒரு வெள்ளைத் துணியில் இட்டு சாறு பிழிய வேண்டும்.

அந்த சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மண் சட்டியில் அல்லது

வாணலியில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

அப்போது சடசட வென்று எண்ணெய் பொரியும். நீர் முழுவதுமாக ஆவியாகி

வெளியேறி விட்டால் எண்ணெயிலிருந்து சப்தம் எழாது. அப்போது எண்ணெயை

இறக்கி வைத்து ஆற வைக்க வேண்டும். இதுவே கரிசலாங் கண்ணி தைலம்

தயாரிக்கும் எளிய முறையாகும்.

இவ்வாறு தாங்களாக தயாரித்த கரிசலாங்க கண்ணி தைலத்தால் பெண்கள்

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், ஆண்கள் புதன், சனிக் கிழமைகளிலும்

தலைக்குத் தேய்த்து எண்ணெய்க் குளியல் நிறைவேற்றி வந்தால் கண்கள்

குளிர்ச்சி பெறும், தீர்க்கமான கண் பார்வை கிட்டும், கண் கோளாறுகள் அறவே

நீங்கும். தோல் நோய்கள் நெருங்காது, இளநரையை தவிர்க்கக் கூடிய எளிய

வைத்திய முறை இது. மலச்சிக்கல்ஏற்படாது. ஆயுள்வளரும்.

ஏழரை ஆண்டு சனி, ஜன்ம சனி, அஷ்டம சனி போன்ற சனீஸ்வர பகவான்

பீடிப்பால் துன்பம் அனுபவிப்போர் சனீஸ்வர பகவான் தனிச் சன்னதி

கொண்டு விளங்கும் திருத்தலங்களில் நல்லெண்ணெயுடன்

கரிசலாங்கண்ணி தைலத்தை கலந்து எட்டு தீபங்கள் ஏற்றி வழிபடுதலால்

நவகிரகங்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து ஓரளவு நிவாரணம் கிட்டும்.

அகால மரணங்களைத் தவிர்க்கக் கூடிய அற்புத வழிபாடு இது.

கண் திருஷ்டிகளைக் களையும்

திருஅண்ணாமலை தரிசனம்

சந்ததி இன்றி தவிப்போரும், பெண் வாரிசுகளை மட்டும் பெற்று நிராதரவாய்

வருந்துவோரும், முதுமையில் துணை அற்றோரும் சனி ஹோரை நேரத்தில்

அகல் விளக்கில் கரிசலாங்கண்ணி தீபம் ஏற்றி அஸ்தமன சூரிய மூர்த்தி

விளங்கும் ஆலயங்களில் வழிபடுதலால் முதுமை சுமையாய் மாறாமல் உரிய

பாதுகாப்பை இறைவன் அளிப்பார்.

இந்த தைலத்தால் இறைவனுக்கு விளக்கேற்றி வைக்க வேண்டும்.

ஒரு கொட்டாங்குச்சியில் (தேங்காய் மூடி) உட்புறம் சுத்தமான பசு

வெண்ணெயைத் தடவி அந்த விளக்கு தீபத்தின் மேல் காட்ட வேண்டும்.

அப்போது தீபத்திலிருந்து எழும் புகை வெண்ணெயின் மேல் படிந்து சிறிது

நேரத்தில் வெண்ணெய் கறுத்து விடும்.

இந்த கரிய குழம்பை ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொண்டு

குழந்தைகளுக்கு மையிடுவதற்காக, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு

வைப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளின் மேல்

படியும் அனைத்து விதமான திருஷ்டி தோஷங்களையும் களையக் கூடிய

சக்தி வாய்ந்த காப்பாகும்.

இறை மூர்த்திகளுக்கு கண் மை காப்பு

மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட கண் மை கொண்டு பெருமாள், அம்பாள்

போன்ற தெய்வ மூர்த்திகளை அலங்கரித்து வழிபடுதலால் குழந்தைகள்

மட்டும் அல்லாமல் பெரியவர்களையும் கண் திருஷ்டி தோஷங்களிலிருந்து

விடுவிக்கும் அற்புத வழிபாட்டு முறையாக அமைகிறது. சிறப்பாக பிரதோஷ

காலங்களில் இறை மூர்த்திகளுக்கும், தேய்பிறை அஷ்டமி தினங்களிலும்,

நவராத்திரி பூஜைகளிலும் இத்தகைய கண் மை காப்பு அற்புத பலன்களை வாரி

வழங்கும்.

சுமங்கலிகள் தொடர்ந்து இத்தகைய கண் மையை இட்டு வந்தால் அவர்களின்

சுமங்கலித்துவம் பெருகுவதுடன் கணவன் மனைவி அன்யோன்ய உறவு

வளர்ந்து குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். நவராத்திரியில் சுமங்கலிகள்

வழங்கும் மங்கலப் பொருட்கள் தானத்தில் அவசியம் மேற்கூறிய கண் மையை

சிறிதளவாவது அளித்தல் நலம்.

32 அறங்களில் ஒன்றான கண் மை தானம் கண் திருஷ்டியைக் களைவதோடு

மட்டுமல்லாமல் காட்ராக்ட், புரை விழுதல், கண்களில் நீர் வடிதல், மாலைக்

கண் போன்ற கண் நோய்களையும் தடுக்கும் வல்லமை உடையது.

பெரியவர்கள் தங்களுக்கும், இறை மூர்த்திகளுக்கும் உபயோகிக்கும்

கண் மைகளில் பசு வெண்ணெய்க்குப் பதிலாக தாங்கள் கையால் அரைத்த

சந்தனத்தையும் பயன்படுத்தலாம்.

உடல் சுத்தி வழிபாட்டு முறைகள்

”உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”, என்றவாறு முறையான உடல்

சுத்தி வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் திருஷ்டி தோஷங்கள் நம்மைத்

தீண்டாதவாறு ஓரளவு பாதுகாத்துக் கொள்ளலாம்.

திருஷ்டி தோஷம் என்பது ஒருவித எண்ண சக்தியே. இந்த எண்ண சக்தி

உடலில் தங்கிப் பெருக வேண்டுமானால் அதற்கேற்ற அசுத்தமான சூழ்நிலை

வேண்டும். முழுக்க முழுக்க தூய்மையான ஒரு மனித உடலில் தீய சக்திகள்,

தோஷ எண்ணங்கள் நிச்சயமாக நிலைத்திருக்க முடியாது. எனவே முடிந்த

மட்டும் காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளையும் தலைக்கு நீர்

வார்த்து குளித்தல் அவசியம். குறைந்த பட்சம் காலை மாலை என இரண்டு

முறையாவது தலைக்குக் குளித்தலால் தீய சக்திகள் உடலில் குடி புகும்

வாய்ப்புகள் தோன்றாது.

இறைப் பிரசாதங்களான விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம், கண் மை

போன்றவற்றை அணிதல், மணிக் கட்டு, இடுப்பில் கறுப்புக் கயிறு,

கங்கன்களை அணிதல், பெண்கள் தோடு, மூக்குத்தி, வளையல்கள், கொலுசு,

மெட்டிகள் போன்ற ஆபரங்களை அணிதல் போன்றவை திருஷ்டி நிவாரண

சாதனங்களாகும்.

சுத்தமான பருத்தி ஆடைகள் திருஷ்டி தோஷங்களிலிருந்து எளிதில்

நிவாரணம் அளிக்க வல்லவை. எந்த அளவிற்கு பருத்தி ஆடைகளால்

உடலை மறைத்து வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு திருஷ்டி

தோஷங்கள் நம்மை அண்டாது.

இலவம் பஞ்சிற்கு திருஷ்டி தோஷத்தை எதிர்க்கும்தன்மை

இருப்பதால்இலவம் பஞ்சினால் ஆன படுக்கைகள், தலையணைகள்,

திண்டுகள், மெத்தைகளைப் பயன்படுத்துதல் நலம். கோடிக் கணக்கான பணம்

புரளும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கூட இலவம் பஞ்சினால் ஆன

மெத்தைகளில் அமர்ந்து பஞ்சு திண்டுகளில் சாய்ந்து கொண்டிருப்பதை

காண்கிறோம். இதனால் அவர்களைக் காண வருபவர்களின் எண்ண

அலைகள் அவர்களைப் பாதிக்காத வகையில் தெளிவான மன நிலையில்

நிலைத்திருக்க இத்தகைய பருத்தி, இலவம் பஞ்சு உபகரணங்கள்

உறுதுணையாக அமைகின்றன.

விஞ்ஞான ரீதியாக நமது உடலில் பல பகுதிகளில் வளரும் முடியில் எவ்வித

பாகுபாடும் இல்லை ஆயினும், மெய்ஞ்ஞானக் கண் கொண்டு பார்த்தால்

உடலில் ஒவ்வொரு பகுதியில் உள்ள முடிக்கும் வெவ்வெறு விதமான

தனித்தன்மை உண்டு. இவ்வகையில் நமது முகத்திலும், அக்குள்களிலும்

வளரும் மயிர்க்கால் பகுதிகளில் எதிர்மறை எண்ணங்கள் தங்கிப் பெருகும்

வாய்ப்புகள் இருப்பதால் முடிந்த மட்டும் இந்த இரண்டு இடங்களிலும்

முடிகளை நீக்கி தூய்மையாக வைத்திருப்பது அவசியம். அதே போல் கை, கால்

நகங்களிலும் சேரும் அழுக்கு தீய சக்திகளை ஈர்க்கும் தன்மை உடையதால்

நகங்களை அவ்வப்போது கத்தரித்து தூய்மையாக வைத்துக் கொள்ள

வேண்டும்.

தங்கத்திற்கும் தங்க ஆபரணங்களுக்கும் தூய்மையான எண்ணங்களையும்

தெய்வீக மந்திர சக்திகளையும் ஈர்க்கும் சக்தி இயற்கையாகவே

அமைந்துள்ளது. அதனால் ஆண்கள், தங்கக் கடுக்கன்கள், மணிக்கட்டில்

கங்கன்கள் (ப்ரேஸ்லெட்) போன்ற ஆபரணங்களையும் பெண்கள் முடிந்த

அளவு தங்க ஆபரணங்களைப் பயன்படுத்துவதும் கண் திருஷ்டி தோஷங்கள்

நம்மை அண்டாது காத்துக் கொள்ளும் நடைமுறைப் பழக்கமாகும்.

அக்காலத்தில் இதைக் கருத்தில் கொண்டுதான் பெண்களுக்கு தலை முதல்

கால் வரை தங்கம், வெள்ளி, மாணிக்கம், வைரம் போன்றவற்றால்

அலங்கரிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இந்த பாரம்பரியம் இன்றும்

பல குடும்பங்களில் நடைமுறையில் இருப்பது வரவேற்கத் தக்கதே.

தங்கத்தின் விலை அதிகமாகி விட்டது என்ற காரணத்தைக் காட்டி தற்போது

பல பெண்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை குறைத்துக் கொண்டு

விட்டனர்.

உண்மையில் டீவி, ஹோட்டல், சினிமா போன்ற தேவையில்லாத ஆடம்பர

செலவுகளைக் குறைத்துக் கொண்டால் நிச்சயமாக நடுத்தரக் குடும்பத்தைச்

சேர்ந்தவர்களும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்புத் தரும் தங்க

ஆபரண்ங்களை நிச்சயமாக வாங்கிப் பயன்பெற முடியும்.

உண்மையிலேயே தங்க ஆபரணங்களை வாங்க வசதியில்லாதவர்கள் என்ன

செய்வது? அவர்களுக்கும் அருள்புரிய காத்திருக்கிறான் அருணாசல ஈசன்.

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் குறைந்தது 5 கிலோ

எடை தங்கத்தை, தங்க ஆபரணங்களை தானம் செய்ய வேண்டும் என்ற இறை

நியதி இருப்பதைப் போல, அவரவர் எடை அளவு உள்ள தங்கத்தை ஒரு சேர

தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது அவசியம் தரிசனம் செய்ய வேண்டும்.

அதாவது ஒருவருடைய எடை 80 கிலோ என்றால் அவர் ஒரு முறையாவது 80

கிலோ தங்கக் கட்டியை தன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய

வேண்டும். அப்போதுதான் மனிதப் பிறவியில் முக்தி பெற முடியும். இந்த

நியதியின் பின்னால் உள்ள ஆன்மிக ரகசியம் புரியாவிட்டாலும், இவ்வளவு

அளவு உள்ள தங்கத்தை ஒரு சேரப் பார்த்தால் அது நிச்சயமாக ஒரு

மனிதனைச் சேரும் திருஷ்டி தோஷங்களை நீக்கும் என்பதைப் புரிந்து

கொண்டாலே போதும். இன்றைய உலகில் இது நடக்கக் கூடியதா என்று

பலருக்கும் சந்தேகம் தோன்றலாம். உண்மையில் சாத்தியமல்லாத ஒரு

நியதியை இறைவன் வகுத்து வைத்திருக்க மாட்டார் அல்லவா?

இவ்வாறு எடைக்கு எடை தங்க தரிசனப் பலன் தரும் இடங்கள் நிறைய

உண்டு நமது புண்ணிய பூமியில். உதாரணமாக, திருஅண்ணாமலையில்

கிரிவலப் பகுதியில் ஸ்ரீகாமாட்சி அம்மன் சந்நிதிக்கும் ஸ்ரீசேஷாத்ரி

ஸ்வாமிகள் ஆஸ்ரமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைவதே

ஸ்வர்ணாகர்ஷண முகட்டு தரிசனம் ஆகும். ரோஹிணி நட்சத்திரம் 60 நாழிகை

நிரவும் நாட்களிலும், மூன்றாம் பிறையை தரிசனம் செய்த ஒரு நாழிகை

நேரத்திற்குள்ளும் (24 நிமிடங்கள்) இந்த ஸ்வர்ணாகர்ஷண தரிசனத்தைப்

பெறுவோர்களுக்கு அவர்கள் எடைக்கு எடை தங்கம் தரிசனம் செய்த பலனை

திருஅண்ணாமலையார் அருள்வார்.

அது போல மேற்கூறிய நாட்களில் திருச்சி அருகே உள்ள ஐயர்மலை

திருத்தலத்தில் கிரிவலப் பாதையில் ஹிருதய கமல தரிசனம்,

மலையடிப்பட்டியில் சிவ லிங்கத்தின் ஆவுடை எதிரே நின்று மலையைப்

பார்த்தபடி பெறும் தரிசனம் போன்றவையும் தங்க தரிசனப் பலன்களைத் தரும்

என்று சித்தர்கள் உறுதி அளிக்கின்றனர். பழனி போன்ற மலைத் தலங்களில்

பெறும் தங்கத் தேர் தரிசனமும் இத்தகைய பலன்களை வர்ஷிக்கக் கூடியதே.

உண்மையில் முற்காலத்தில்பல திருத்தலங்களிலும் திருஷ்டி

தோஷங்களைக் களைவதற்காக இறை விக்ரஹ மூர்த்திகளை சுத்தமான

தங்கத்தில் வார்த்து பூஜித்து வழிபட்டனர். கலியுக மக்களின் பேராசை

காரணமாக இத்தகைய ஸ்வர்ண விக்ரகங்கள் தற்போது மறைபொருளாகி

விட்டன. ஆனால், நம்பிக்கையுடன் இத்தகைய இறை மூர்த்திகளை வழிபட

விரும்புவோர்களுக்கு அம்மூர்த்திகளை கண்ணால் பார்த்து வழிபட

முடியாவிட்டாலும் தீர்த்த யாத்திரைகளின் போது இத்தலங்களில் மறை

பொருளாக உள்ள தங்க மூர்த்திகளின் அனுகிரக சக்திகளையும்

அத்தலங்களில் நிரவியுள்ள திருஷ்டிக் காப்பு சக்திகளையும் பெற முடியும்.

வாகனங்களைக் காக்கும் வழிபாடுகள்

இன்றைய உலகில் இரு சக்கர வாகனங்களும், சிலருக்கு நான்கு சக்கர

வாகனங்களும் இன்றியமையாத வசதிகள் ஆகிவிட்டன. இந்நிலையில்

வாகனங்களை திருஷ்டிக் கண்களிலிருந்து பாதுகாத்துக் கொண்டால்தான்

மனிதனுடைய அன்றாட அலுவல்களைப் பிரச்னைகள் இல்லாமல் கவனித்துக்

கொள்ள முடியும். சில எளிய வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம்

வாகனங்களின் மேல் திருஷ்டி தோஷங்கள் படியாமல் அவை நமது உற்ற

நண்பர்களாக மாற வழி தேடிக் கொள்ளலாம்.

வாகனங்களை எப்போதும் கிழக்கு நோக்கி நிறுத்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்

கொள்ள வேண்டும். முதன் முதலில் வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கும் போது

சிறிது தூரமாவது கிழக்கு நோக்கி ஓட்டிச் சென்று விட்டு பிறகு நாம் செல்ல

வேண்டிய இடத்தை நோக்கி வண்டியை ஓட்டுவது நலம்.

எக்காரணம் கொண்டும் பழைய வாகனத்தை வாங்க வேண்டாம். நமது சக்திக்கு

ஏற்ற புது வாகனத்தை வாங்கிக் கொள்வதால் தேவையில்லாத பலவித

பிரச்னைகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

திருக்கோயில்களுக்குச் சென்று அங்கு பெறும் சுவாமி பிரசாத மாலைகளை

பலரும் வாகனத்தின் முன்னால் கட்டி விட்டு விடுகிறார்கள். இது தவறான

பழக்கம் என்பதை நினைவில் கொள்ளவும். இதனால் இறைவனின்

பிரசாதமான மலர்கள் தெருவில் விழுந்து மக்கள், விலங்குகளின் பாதங்களில்

மிதிபடும் சூழ்நிலை உருவாகும். இதனால் ஏற்படும் தோஷங்கள்

வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் பாதிக்கும். இறைப் பிரசாதமாக

பெற்ற மலர் மாலைகளை காரின் உட்புறத்தில் வைத்து அம்மலர்கள் உதிர்ந்த

பின் அவைகளைக் கவனமாகச் சேகரித்து ஓடும் நதிகளில், கடலில் விட்டு

விடுதலே முறையான வழிபாடாகும்.

அது போல திருஷ்டிக்காக வாகனங்களின் கீழ் எலுமிச்சை பழங்களை

வைத்து நசுக்காமல் அவற்றை கார்களின் உள்ளே வைத்திருந்து காய்ந்த

பின் மலர்களுடன் சேர்த்து நீர் நிலைகளில் சேர்த்து விட வேண்டும். இதைக்

குறித்த புராண சம்பவம் ஒன்று உண்டு. குந்தியின் மைந்தனான கர்ணன்

முற்பிறவி ஒன்றில் நிம்புபூஷணன் என்ற காரணப் பெயருடன் மகத நாட்டின்

இளவரசனாக விளங்கினான். கிருஷ்ண பகவான் தன்னுடைய தலையில்

மயிற் பீலியைச் சூடி இருப்பது போல நிம்பு பூஷணன் தான் வளர்த்திருந்த

தீட்சையில் (குடுமியில்) எப்போதும் இறை பிரசாதமாகப் பெற்ற ஒரு எலுமிச்சை

கனியை சூட்டியிருப்பான். ஒரு முறை நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக்

கொண்டிருக்கும்போது அவன் தலையிலிருந்த எலுமிச்சைக் கனி வீழே

விழுந்து தரையில் உருண்டோடியது. அதை அவன் குனிந்து எடுப்பதற்குள்

அவ்வழியே வந்த எருமை மாடு ஒன்று அதைத் தன் கால் குளம்பால் நசுக்கி

விட்டது. அதனால் ஏற்பட்ட சாபம் காரணமாகவே மகாபாரத யுத்த களத்தில்

கர்ணனின் ரதம் பூமியில் அழுந்தி அவன் உயிர் விட நேர்ந்தது என்பதை

உணர்ந்து இனியேனும் எலுமிச்சை கனி பிரசாதத்தை சரியான முறையில்

பயன்படுத்தும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

வாரம் ஒரு முறையாவது சிறப்பாக செவ்வாய்க் கிழமை அன்று கட்டாயம்

வாகனங்களை சுத்தமான நீரால் சுத்தம் செய்து விபூதி குங்குமத்தால்

அலங்கரித்து, வாகனங்களை வலம் வந்து சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து

நமஸ்காரம் செய்து வழிபடுவதால் எத்தகைய ஆபத்துகளிலிருந்தும்

அவை நம்மைக் காப்பாற்றும் என்பதை மறந்து விடாதீர்கள். வாகனங்களை

அலம்பும்போது டயர்களை நீர் விட்டு சுத்தம் செய்யத் தவறாதீர்கள்.

வாகனச் சக்கரங்கள் எச்சில், மலம் போன்ற பல அசுத்தங்களின் மேல்

உருண்டோடுவதால் டயர்களால் செய்யப்பட்ட பாதணிகளை அணிவதும்,

பழைய டயர் பைகளில் உடைத்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதும்

தேவையில்லாத பல கர்ம வினைப்படிவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து

கொள்ளவும். இதனால் விளையும் தோஷங்கள் ஏராளம்.

இல்லங்களில் படியும் திருஷ்டி தோஷங்கள்

வாகனங்களைப் போல அவரவர் இல்லங்களின் மீது படியும் திருஷ்டி

தோஷங்கள் நிறைய உண்டு. எமது ஆஸ்ரமத்திலிருந்து பெறப்படும்

கருவலரி போன்ற சங்குகள் கடுமையான கண்திருஷ்டி தோஷங்களையும்

களையும் வல்லமை உடையவை. இத்தகைய சங்குகளை இல்லங்களின்

முன் வாயிலில் வைத்து உரிய வழிபாடுகளை மேற்கொள்வதால் கண்

திருஷ்டி தோஷங்களிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.


பொதுவாக, வீடுகளுக்கு சுண்ணாம்பு, பெயிண்ட் போன்ற பூச்சுகளைப் பூசி

எப்போதும் வீடுகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். எந்த

அளவிற்கு உங்கள் இல்லங்களில் தூசி, ஒட்டடை, அழுக்கு, குப்பை கூளங்கள்

போன்றவை சேராமல் இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் இல்லங்கள்

திருஷ்டி தோஷங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும். குப்பை கூளங்களே

தோஷங்களை ஈர்க்கும் பெட்டகங்கள். கண்ணாடி போல் உங்கள் இல்லங்கள்

தூய்மையாக இருந்தால் கண்ணாடியில் விழும் சூரிய ஒளியைப் போல்

திருஷ்டி எண்ணங்கள் பிரதிபலிக்கப்பட்டு வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று

விடும்.

வீட்டின் முன்புறம் பாதுகாப்புச் சுவர்களில் உள்ள கதவுகளை இரும்புக்

கம்பிகளால் அமைத்து கருப்பு வண்ணங்களைப் பூசுவதால் திருஷ்டி

தோஷங்கள் வீட்டின் உள்ளே புகாதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம். இரும்பு

உலோகத்திற்கும் கருப்பு வண்ணத்திற்கும் திருஷ்டி சக்திகளை ஈர்த்து

வைத்துக் கொள்ளும் தன்மை உண்டு.

கோபுர தரிசனம் கடுமையான

திருஷ்டி விளைவுகளையும் களையும்

அவ்வப்போது வீட்டில் உள்ள அனைவரையும் வீட்டின் முன் வாசலில் அமர

வைத்து ஒரு பூசனிக்காய் மேல் கற்பூரத்தை ஏற்றி வைத்து திருஷ்டி கழிப்பது

நலம். இதனால் வீட்டில் வசிப்பவர்கள் மேல் படியும் தோஷங்களும் வீட்டின்

மேல் படியும் கண் திருஷ்டி தோஷங்களும் விலகும் என்பது உண்மையே.

ஆனால், இவ்வாறு திருஷ்டி கழித்த பூசனிக்காயை முச்சந்தியிலோ,

நாற்சந்தியிலோ உடைத்து விடுவதை நடை முறையில் பலரும் பழக்கமாக

வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு திருஷ்டி பூசனிக்காயை நடுரோட்டில் உடைத்தால் பரவெளியை

அடைந்த திருஷ்டி தோஷங்கள் மீண்டும் யதா ஸ்தானத்தை சேர்ந்து விடும்

என்பது நியதி, அதாவது எங்கிருந்து திருஷ்டி வந்ததோ அங்கேயே திரும்பிச்

சென்று விடும், அதனால் திருஷ்டிகள் கழியாத நிலையே உருவாகும். மேலும்

அவ்வாறு உடைந்த பூசனிக்காய் துண்டுகள் மீது ஏதாவது வாகனங்கள் ஏறி

வழுக்கி விழுந்து, குழந்தைகளுக்கோ மக்களுக்கோ துன்பங்கள் ஏற்பட்டால்

அந்த துன்பங்களும் வேதனைகளும் பூசனிக்காயை உடைத்தவர்களைச்

சென்று சேரும் என்பது உண்மை. எனவே, இது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்

கொண்டு வந்த கதையாகி விடுமல்லவா?

இத்தகைய துன்பங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் திருஷ்டி கழித்த

பூசனிக்காயை நடுரோட்டில் உடைக்காமல் முச்சந்தி அல்லது நாற்சந்தியில்

வாகனங்களுக்கோ, மற்றவர்களுக்கோ இடையூறு இல்லாத வண்ணம் ஒரு

ஓரத்தில் வைத்து விட்டு வந்து விட வேண்டும். அந்த பூசனிக்காய் வெயிலில்

காய்ந்து உலர்ந்து விட்டாலோ அல்லது பூசனிக்காயை ஏதாவது ஆடோ,

மாடோ தின்று விட்டால் திருஷ்டி தோஷங்கள் விரைவில் கழிந்து விடும்

என்பது சித்தர்கள் கூறும் அறிவுரை.

வீட்டைக் கட்டிய பின் அதில் படியும் கண் திருஷ்டி தோஷங்களைக் களைவது

ஒரு புறம் இருக்க வீட்டைக் கட்டும்போதே சில வாஸ்து லட்சண விதிகளைப்

பின் பற்றுவதால் பெரும்பாலான தோஷங்கள் வீட்டை அண்டாதவாறு

பார்த்துக் கொள்ளலாம். இத்தகைய வாஸ்து இரகசியங்கள் எமது ஆஸ்ரம

வெளியீடுகளான ”பூமி அந்தர வாஸ்து சுந்தர இரகசியங்கள் (இரண்டு

பாகங்கள்)” என்னும் நூல்களில் காணலாம்.

பொதுவாக, நிலம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் சதுரம் அல்லது நீண்ட

சதுரம் (செவ்வகம்) வடிவத்தில் வீடுகளைக் கட்டுவதால் பெரும்பாலான

கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம்.

நிறைய பணம் கொடுத்து இடத்தை வாங்கி விட்டோம் என்ன செய்வது? என்று

நினைத்துக் கொண்டு கோணல்மானலாக நிலம் முழுவதும் கட்டிடத்தைக்

கட்டி வேதனையை அனுபவிப்பதை விட சரியான வடிவத்தில் வீட்டைக் கட்டி

எஞ்சிய இடத்தில் மணம் பரப்பும் மலர்ச்செடிகளை வளர்த்து, இறைவனை

பூஜிப்பதால் நிம்மதியான, அமைதியான, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.

தம்பதிகள் மேல் படியும் திருஷ்டி தோஷங்கள்

மனித வாழ்விற்கு இன்றியமையாத திருமண வைபவங்களில் புது மணத்

தம்பதிகள் மேல் படியும் திருஷ்டி தோஷங்கள் ஏராளமானவை. இத்தகைய

தோஷங்களைக் களைவதற்காகவே பண்டை காலத்தில் பலவிதமான ஹோம

வழிபாடுகளையும், சடங்குகள் சம்பிரதாயங்களையும் வைத்தார்கள். இவை

அனைத்துமே அர்த்தமுள்ளவை, தம்பதிகள் நீண்ட காலம் அமைதியுடனும்

ஆரோக்கியத்துடன் வாழ்ந்து சமுதாயத்தை அமைதிப் பூங்காவாக

வளப்படுத்தும் தன்மை கொண்டவை.

திருமணத்தை மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாள் வைபவமாக

கொண்டாடுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தின்

அதாவது முருகன், பெருமாள், சிவ பெருமான் இவர்களின் திருமண

வைபவங்களின் நிகழ்த்தி அன்னதானம், மங்கலப் பொருட்களைத் தானமாக

அளித்து வந்தார்கள். இது எத்தகைய திருஷ்டி தோஷங்களையும் களையும்

வல்லமை படைத்தது.

மேலும் திருமணத்திற்குப் பின் நிகழும் சாந்தி முகூர்த்த வைபவத்தை திருமண

நாள் அன்றே நிகழ்த்தாது பல நாட்கள் அல்லது மாதங்களுக்குப் பின் ஒரு நல்ல

முகூர்த்த நாளைக் குறித்து நிகழ்த்தினர். இதனால் அத்தம்பதிகளின் மேல்

எந்தவித எதிர் வினை எண்ணங்களும், துராசை தாக்குதல்களும் ஏற்படாமல்

புது மணத் தம்பதிகள் காப்பாற்றப்பட்டனர்.

காசி யாத்திரை என்பது தற்காலத்தில் வயதான பின் நிறைவேற்ற வேண்டிய

திருத்தல யாத்திரையாக கருதப்படுகிறது. உண்மையில் மணமான தம்பதிகள்

திருமணம் நிகழ்ந்தவுடன் காசி, கயா, அயோத்தி போன்ற திருத்தலங்களுக்கு

யாத்திரையாகச் சென்று அபரிமிதமான புண்ணிய சக்தியைச் சேர்த்துக்

கொண்டு அதன் பின்னர் இல்லற வாழ்வில் ஈடுபட்டால்தான் அவர்களுக்குப்

பிறக்கும் குழந்தைகள் உடல், மன ஆரோக்கியத்துடன் விளங்கி குடும்பத்திற்கு

ஒளி விளக்காய்த் திகழ்வார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் சாந்தி முகூர்த்த வைபவத்தை திருமணம் நிகழ்ந்த

அன்றே நிறைவேற்றுவது நடைமுறைக்கு வந்து விட்டாலும் தம்பதியர்

திருமணம் நிகழ்ந்த ஒரு மண்டல காலத்திற்குள்ளாவது காசி, கயா, அயோத்தி

போன்ற திருத்தலங்களை அவசியம் தரிசித்தல் நலம். காசி திருத்தலத்தில் உள்ள

64 தீர்த்தக் கட்டங்களிலும் நீராடி காசி விஸ்வநாதரைத் தம்பதிகள் தரிசித்தலால்

அவர்கள் மேல் படியும் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது

உண்மை.

காசி, கயா போன்ற திருத்தலங்களை வழிபடும் அளவுக்கு தம்பதிகளுக்கு

பொருள் வசதி, நேர அவகாசம் கிட்டாவிட்டாலும் தென்னிந்தியாவின்

கயா திருத்தலமாகத் திகழும் திருச்சி அருகே பூவாளூர் திருத்தலம்,

மாந்துறை, திருவிடைமருதூர், திருச்சி அருகே உத்தமர் கோயில் போன்ற

திருத்தலங்களையாவது அவசியம் தம்பதிகள் தரிசிக்க வேண்டுமாய்க்

கேட்டுக் கொள்கிறோம். இதனால் தம்பதிகள் திருஷ்டி தோஷங்கள் தங்களைத்

தாக்காதவாறு பாதுகாத்துக் கொள்வதுடன் உத்தமமான குழந்தைச்

செல்வங்களைப் பெறத் தேவையான தெய்வீக புண்ணிய சக்திகளை பெற்றுக்

கொள்ளவும் இவ்வழிபாடுகள் பெரிதும் துணை புரியும்.

பெரும்பாலான சிவத்தலங்களில் ஸ்ரீவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாத தெய்வ

மூர்த்திகள் எழுந்தருளி இருப்பார்கள். புது மணத்தம்பதிகள் திருமணத்திற்கு

முன்னும் பின்னும் வாரம் ஒரு முறையாவது இம்மூர்த்திகளைத் தரிசித்து

தங்கள் கையால் தொடுத்த மணமுள்ள மலர் மாலைகளைச் சூட்டி

வழிபடுதலால் இல்லற வாழ்வு இன்பமூட்டும்.

தற்காலத்தில் திருமணத்திற்கு முதல் நாளே வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு

செய்து மணமக்களை ஒன்றாக அமர வைத்து பல கேளிக்கை நிகழ்ச்சிகளை

நிறைவேற்றுகிறார்கள். இதனால் பலவிதமான தோஷங்கள் தம்பதிகளைச்

சூழும் என்பதை நினைவில் கொள்ளவும். இன்னும் சில திருமணங்களில்

சாந்தி முகூர்த்த வைபவத்திற்கு ஓத வேண்டிய மந்திரங்களை திருமண

நிகழ்ச்சியின்போதே ஓதி தங்கள் கடமையை திருமணப் புரோகிதர்கள்

நிறைவேற்றி விடுகின்றனர். பெரும்பாலும் இத்தகைய வைபவங்களில்

மாப்பிள்ளைகள் பங்கு கொள்ள முடியாமல் போகும்போது அவர்களுக்குப்

பதிலாக புரோகிதர்களே மாப்பிள்ளைகள் சொல்ல வேண்டிய மந்திரங்களையும்

தாங்களே சொல்லி அந்தச் சடங்கை நிறைவேற்றி விடுகிறார்கள்.

இதனால் விளையும் அசம்பாவித வேதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்க

இயலாது.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்…

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை சுமார் ஆறு மணி இருக்கும். பள்ளிக்கு

விடுமுறை ஆதலால் சிறுவன் வெங்கடராமன் தனது குருநாதர்

கோவணாண்டிப் பெரியவருடன் நடைப் பயணமாக திருச்சியிலிருந்து

மணப்பாறை செல்லும் கருங்கல் பதித்த சாலையில் சென்று கொண்டிருந்தான்.

முதல் நாள் இரவே பெரியவருடன் திருச்சிக்கு வந்து விட்ட சிறுவன்

அங்கு பல திருத்தலங்களையும் தரிசித்து விட்டு பெரியவருடன் முதல்

நாள் நிகழ்ச்சிகளைப் பற்றி சுவாரஸ்மாகப் பேசிக் கொண்டே சென்று

கொண்டிருந்தான்.

பெரியவர் சிறுவனுக்கு ஒரு சிறு குன்றைக் காட்டி, ”இதுதாண்டா ராச்சாண்டார்

திருமலை கோயில். எதிர் காலத்தில் பலருக்கும் பயன்தரக் கூடிய கோயில்.,”

என்று கூறிக் கொண்டே அருகிலிருந்த ஒரு ஆலமர நிழலில் அமர்ந்து

கொண்டார். சிறுவனும் அவர் அடுத்து கூறப் போகும் சுவாரஸ்யமான

தெய்வீகமான தகவல்களைக் கேட்பதற்காக உன்னிப்பாக காதைத் தீட்டிக்

கொண்டு அவர் அருகில் தரையில் அமர்ந்து கொண்டான்.

பெரியவர் தொடர்ந்து, ”எதிர்காலத்துல கல்யாணம் என்பது ஒரு வியாபாரச்

சந்தையாகி விடும். நல்ல குணமுள்ள நற்பழக்கங்கள் உள்ள வரன்களைத்

தேடுவதை விடுத்து ஏட்டுப் படிப்புக்கும், பணத்திற்கும், கௌரவத்திற்கும்

முக்கியத்துவத்தை கொடுத்து சம்பந்தங்கள் ஏற்படுவதால் அதனால்

ஏமாற்றங்களையே தம்பதிகள் சந்திக்க வேண்டி வரும்.”

”மேலும், எதிர்காலத்தில் காசுக்காக திருமணப் பொருத்தம் பார்ப்பவர்கள் பெருகி

விடுவதால் உண்மையான ஜாதகப் பொருத்தம் அமையாத சூழ்நிலையில் தான்

தோன்றித் தனமான திருமணப் பொருத்தங்கள் அமைந்து அவற்றையே வேறு

வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையே உருவாகும்.”

”எனவே, முடிந்த வரை நெருங்கிய சொந்தத்தில் உள்ள வரன்களைத்

தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனமான செயலாகும். நல்ல குடும்பத்திற்கும்,

நல்ல பழக்க வழக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வரன்களைத் தேடி

திருமணம் முடித்தால்தான் மண வாழ்வு மணக்கும் என்பதை எதிர்காலத்தில்

உன்னை நாடி வரும் அன்பர்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லு, ”

”ஆனால், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் நிகழ்த்தினால் பிறக்கும்

குழந்தைகள் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி குறைந்திருக்கும் என்று சிலர்

வாதிடுவார்கள். உண்மையில் குழந்தை பாக்கியம் மட்டும் அல்லாது

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்துமே,

இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும், அது அவனுடைய முந்தைய

ஜன்மங்களின் செயல்களால் வருவதே. இதில் எவ்வித சந்தேகமோ ஐயப்பாடோ

வேண்டாம். ”

எனவே உறவினர்களுக்குள் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதே

இனி வரும் சந்ததிகளுக்கு நன்மை பயக்கும். அப்படி உறவினர்களுக்குள்

முறையான திருமண சம்பந்தங்கள் கூடி வராத நிலையில் மட்டுமே மற்ற

முறைகளில் வரன்களைத் தேடலாம். ஆனால், அத்தகைய சந்தர்ப்பங்களில்

மணமகன், மணமகள் இருவரையுமே முழுமையான மருத்துவ சோதனைக்குப்

பின் தேர்ந்தெடுப்பதால் எதிர்வரும் துன்பங்களிலிருந்து ஓரளவு பாதுகாத்துக்

கொள்ளலாம்.”

திருஷ்டி கண்டி வழிபாடு்

”தவறான பழக்க வழக்கங்களால் இனி பிறக்கும் ஆண்களும் பெண்களும்

பெரும்பாலோனார் சந்ததிகளை உருவாக்கும் அளவிற்கு ஆரோக்கியமான

உடல், மன வளத்தைப் பெற்றிருக்க மாட்டார்கள். அத்தகையோர் இத்தல ஈசனை

வணங்கி வழிபடுவதால் அவர்களுடைய பூர்வ ஜன்ம நற்செயல்களைப்

பொறுத்து இறைவன் அவர்களின் குறையை நிவர்த்தி செய்வான். ”

”ஆண் மலடு, பெண் மலடு போன்ற குறைகளை நிவர்த்தி செய்வதுடன் கால்

பாதங்கள் மூலம் வரும் திருஷ்டி தோஷங்களைக் களையும் திருஷ்டி நிவாரண

சக்திகள் இத்தலத்தில் பொங்கி பெருகுவதால் சிறு வயது குழந்தைகளுக்கும்

பள்ளிக் குழந்தைகளுக்கும் காலணி தானம் அளிப்பது இத்தல இறைவனுக்கு

உகந்த வழிபாடாகும்.”

இவ்வாறு ராச்சாண்டார் கோவில் திருத்தல ஈசனின் மகிமைகளை பெரியவர்

வர்ணித்துக் கொண்டிருக்க அவற்றை ஆனந்தமாகப் பருகிக் கொண்டிருந்தான்

சிறுவன். அப்போது சுமார் 30, 35 வயதுள்ள இரு நண்பர்கள் கோவணாண்டிப்

பெரிவயரைக் கண்டு அவரை வணங்கி அவர் அருகில் அமைதியாக நின்றனர்.

கைச் சாடை மூலம் சிறுவன் அருகில் அமரும்படிக் கூறவே, அவர்களும்

பெரியவரின் காலடியில் அமர்ந்து கொண்டு கோவணாண்டியின் அமுத

மொழிகளை கேட்கத் தொடங்கினர்.

”இனி வரும் இல்லற வாழ்வில் தம்பதிகள் ஒருவொருக்கொருவர் சந்தேகக்

கண் கொண்டு பார்ப்பதால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகளும்,

விவாகரத்துகளும், தற்கொலைகளும் நிகழும். எதிலுமே திருப்தியில்லாத

சூழ்நிலையில் மண வாழ்வு பாலைவனமாகத் தோன்றும். இல்லற இன்பம்

என்பது கானல் நீராக மாறிவிடும்.”

”இந்நிலையை மாற்றவல்ல கருணா மூர்த்தியே இத்தல பெருமான் ஆவார்.

ஒவ்வொரு வாரமும் புதன், வியாழன் வெள்ளிக் கிழமைகளில் ஒவ்வொரு

நாளும் 12 தீபங்களுக்குக் குறையாமல் ஏற்றி இத்தல அம்பிகையையும்

இறைவனையும் வழிபடுவதால் இல்லற நல்லறமாய் இனிமை பெருக

இறைவன் நல்வழி காட்டுவான். புதன் கிழமை நல்லெண்ணெய் தீபமும்,

வியாழக் கிழமை இலுப்பெண்ணெய் தீபமும், வெள்ளிக் கிழமை தேங்காய்

எண்ணெய் தீபமும் ஏற்றி தீப வழிபாட்டை நிறைவேற்றுதல் நலம்.”

பெரிவரின் வார்த்தைகளைக் கேட்ட அந்த நண்பர்களுக்கு அவை

அவர்களுக்காகவே தரப் பட்ட ஆறுதல் வார்த்தைகளாகத் தோன்றவே

அவர்களில் மூத்தவன் தடாலென்று பெரியவரின் கால்களில் விழுந்து,

அவர் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழத்

தொடங்கினான். சற்று நேரம் கழித்து பெரியவர் மௌனமாக அவனிடமிருந்து

தன்னை விடுவித்துக் கொண்டார்.

சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.

பின்னர் பெரியவர் அந்த நண்பர்களிடம், ”எதையுமே வருமுன் காப்பதுதான்

புத்திசாலித்தனம். வந்த பின் சுமப்பதால் யாருக்கு என்ன லாபம்? எப்படியோ

நடந்தது நடந்து விட்டது. இனி நடக்கப் போவதைப் பற்றித்தான் யோசிக்க

வேண்டும்,” என்று பீடிகையாகச் சொன்னார்.

சிறுவனுக்கு பெரியவர் கூறிய வார்த்தைகள் ஒன்றும் விளங்கவில்லை.

ஆனால், வந்திருந்தவர்கள் பெரியவர் கூறிய விஷயங்களைத் தெளிவாகப்

புரிந்து கொண்டவர்கள் போல் தலையாட்டினார்கள்.

அவர்களின் பிரச்னை என்ன என்பதை பெரியவர் சில நாட்கள் கழித்து

சிறுவனுக்கு விளக்கினார். அதாவது, அந்த நண்பர்களில் ஒருவனுக்கு சிறு

வயது முதல் தவறான பழக்க வழக்கங்கள் இருந்து வந்தது. அதே சமயம்

ராச்சாண்டார் திருத்தல ஈசனிடம் நீங்காத அன்பும் வைத்திருந்தான். தன்னுடைய

இருபதாவது வயது முதல் தவறாது ஒவ்வொரு பிரதோஷ பூஜையிலும்

இறைவனை வழிபட்டு, நந்தி எம்பெருமானுக்கு அருகம்புல் மாலையும்,

தேங்காய் பச்சரிசி வெல்ல பிரசாதமும் படைத்து பக்தர்களுக்கு வழங்கி வந்தான்.

இறை பக்தியை விட அவனிடம் சபல புத்தி மேலோங்கி நின்ற காரணத்தால் பல

பெண்களிடம் சகவாசம் கொண்டான். அதனால் சிறுவயதிலேயே பல விதமான

உடல் உபாதைகள் அவனிடம் குடி கொண்டன. நில புலன்கள் தோட்டம் துரவு

வசதிகளுடன் விளங்கியதால் அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு ஒரு நல்ல

மணமகளைத் தேர்ந்தெடுத்து மணம் முடித்து வைத்து விட்டனர்.

தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருந்ததால் இல்லறம் அவனுக்கு

சுவைக்கவில்லை. திருமணம் நடந்த ஓராண்டிற்குள் முக்கிய உடல் உறுப்பை

அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டிய சூழ்நிலையும் அமைந்து

விட்டது.

இந்நிலையில்தான் அவன் பெரியவரை ராச்சாண்டார் திருத்தலத்தில் தரிசனம்

செய்யும் பேறு பெற்றான். நடந்த விவரங்கள் அனைத்தையும் அவர்களிடம்

இருந்து கேட்டுக் கொண்டார் பெரியவர். தற்போது அவனுடைய இளம்

மனைவிக்கு எப்படி ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது

என்பதுதான் அவனுடைய கவலையாக இருந்தது. அது பற்றி பெரியவரிடம்

வாய் விட்டுக் கேட்டும் விட்டான்.

பெரியவர், ”இவ்விஷயத்தில் நீ எடுத்துள்ள முடிவு சரியான முடிவுதான்.

ஆனால், அதில் ஒரு சிறிய மாற்றம் மட்டும் செய்தால் போதும்,” என்றார்

பெரியவர்.

அப்படி அவன் எடுத்த முடிவு என்ன? தன்னுடைய ஆருயிர் நண்பனுக்கு

தன்னுடைய இளம் மனைவியை திருமணம் செய்து வைத்து விட்டு

தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அவள் பெயரில் எழுதி வைத்து

விட்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வதாக அவன் மனதிற்குள்

முடிவெடுத்திருந்தான். அவன் மனதைப் படித்த பெரியவர் அதை ஓரளவு

ஆமோதிப்பதுபோல் கூறினார்.

பெரியவர் நிதானமாகத் தொடர்ந்தார், ”நீ இந்த சின்ன விஷயத்திற்காக

உயிரை விடத் தேவையில்லை. உன்னுடைய மனைவியின் நல்வாழ்விற்காக

சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைப்பதற்குப் பதிலாக அதில்

பாதியை நீ வைத்துக் கொண்டு உன்னுடைய பாக்கிக் காலத்தை கோயில்

திருப்பணிகளுக்காக செலவிட்டு வந்தால் உன்னுடைய பழைய கணக்கும்

தீர்ந்து விடும்,” என்று அறிவுறுத்தினார்.

பெரியவர் கூறியபடியே செய்வதாகச் சொல்லிவிட்டு நிறைவான மனதுடன்

அவ்விரு நண்பர்களும் பெரியவரிடம் இருந்து விடை பெற்றுச் சென்றனர்.

அவர்கள் சென்றதும் பெரியவர் சிறுவனிடம், ”சப்ஸ்ட்யூட் போட்டதால் வந்த

துன்பத்தைப் பார்த்தாயா? இங்கு வந்தவன் பூர்வ ஜன்மத்தில் திருமணங்களை

நடத்தி வைக்கும் புரோகிதனாக இருந்தான். பல திருமணங்களிலும் மாப்பிள்ளை

ஓத வேண்டிய மந்திரங்களை தானே ஓதி பல சாந்தி முகூர்த்த சடங்கையும்

நடத்தி வைத்தான். இவன் குரல் வளம் சிறப்பாக இருந்ததால் அதை வியாபாரப்

பொருளாக்கி இலவசமாக வேதம் ஓதுவதை விடுத்து வேதத்தை விற்க

ஆரம்பித்தான். அதனால் முப்பிறவியில் அவன் யார் யாருக்கெல்லாம் சாந்தி

முகூர்த்த சடங்கை நிறைவேற்றி வைத்தானோ அவர்களுடன் இப்பிறவியில்

பழக வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. ஆனால், அதே சமயம் இத்தல

இறைவன்பால் அன்பு பூண்டு பிரதோஷ வழிபாடுகளை முறையாக பல

வருடங்கள் நிறைவேற்றி வந்ததால் பல பிறவிகளில் அவன் பட வேண்டிய

அல்லல்களை இத்தல ஈசன் இந்த ஒரு பிறவியிலேயே அவன் கர்மத்தைத்

களைந்து அவனைக் கரையேற்றும் மார்கத்தை இந்த அடிமையிடம்

(பெரியவரிடம்) ஒப்படைத்து விட்டார்,” என்று ஒரு பெரிய கர்ம பரிபாலன

கீதையை சிறுவனுக்கு உபதேசித்தார் பெரியவர்.

திருமணத்திற்கு முன்னால் மாப்பிள்ளையையும் பெண்ணையும் ஒன்றாக

அமர வைத்து வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதால் பலவித

தோஷங்கள் மணமக்களைச் சாரும் என்று கூறினோம் அல்லவா? அதே

போல திருமணத்திற்குப் பின்னும் கூட பொது இடங்களில் தம்பதிகள் தங்கள்

அன்யோன்யமான உறவை வெளிப்படுத்துவதிலும் ஜாக்கிரதையாக இருக்க

வேண்டும்.

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அதில்

முக்கியமானது சிரிப்பு. மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்தவன். மற்றவர்களை

சிரிக்க வைக்கும் சக்தி உடையவன். மிருகங்களால் சிரிக்க முடியாவிட்டாலும்

மற்றவர்களை சிரிக்க வைக்கக் கூடிய சக்தி உடையவை. இரண்டாவதாக,

மனிதர்களைப் பொறுத்த வரையில் காமம் என்பது மறைபொருளாக இருக்க

வேண்டியது அவசியம். இந்த மானிட தர்மம் அவமதிக்கப்படும்போது

அதனால் மனிதர்கள் பலவித திருஷ்டி தோஷங்களுக்கும், சாபங்களுக்கும்

ஆளாகிறார்கள்.

பல குடும்பங்களில் ஏற்படும் விவாகரத்து, சண்டை சச்சரவுகள்,

அமைதியின்மை சந்ததியின்மை, உடல் மன நோய்கள் போன்றவற்றிற்கு

தம்பதிகளின் அஜாக்கிரதையே காரணம் என்பதை ஆத்ம விசாரம் செய்து

பார்த்தால் அவர்களே இதை எளிதில் உணர முடியும். எனவே தம்பதிகள்

பொது இடங்களில் மற்றவர்களின் தேவையில்லாத பார்வை தங்கள்மேல்

படியாத அளவிற்கு தங்கள் நடிவடிக்கைகளை பொறுப்புடன் வைத்துக்

கொள்வதால் பலவிதமான திருஷ்டி தோஷங்களிலிருந்து தங்களைப்

பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக