புதன், 26 ஆகஸ்ட், 2020

கம்பர் சொல்லால் சோழர் குலம் அழிந்தது

 134 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  


   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை) 

              137  கம்பர் சொல்லால் சோழர் குலம் அழிந்தது

  நூற்பா137   

             கவிதை ஒன்றால் கதிரவன் குலத்து

             மன்னவர் அனைவரும் மாண்டனர் அன்றே.

இதன்பொருள்: சோழனின் பொறிப்பெட்டிலிருந்து அம்பு பாய்ந்து இறக்கும் தருவாயிலிருந்த கம்பநாடன் பாடிய ‘வில்லம்பு சொல்லம்பு’ என்ற வெண்பாவால் சூரியன் மரபாகிய சோழ மன்னர் அனைவரும் மாய்ந்தனர் என்றவாறு.

விளக்கம்: இவ்வரலாறு முன் காட்டப்பட்டது. இதில் இடம்பெற்ற கவிதை “வில்லம்பு சொல்லம்பு மேதினியில் ரெண்டுண்டு; வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்-வில்லம்பு பட்டதடா என்மார்பில்; பார்வேந்தா நின்குலத்தைச் சுட்டதடா என்வாயிற் சொல்”1 என்னும் வெண்பாவாகும்

கம்பனுக்கு வாய்த்திருந்த தெய்வீக அருள் அச்சமயத்தில் அவன் உயிரைக் காக்காமல் கைவிட்டுவிட்டது; ஆனால் அதேசமயத்தில் அவன் இட்ட சாபம் நிசமாகியது, இதனால் திருவருளின் இயக்கம் எப்போது எப்படி இருக்குமென யாராலும் அறியமுடியாது என்பதை உணர்த்துவதே இந் நூற்பாவின் நோக்கம். இங்குக் கம்பன் பெற்றது முழுவெற்றி அன்று. 

 நன்றி: பதிவு புலவர்.ஆ.காளியப்பன் அவர்கள்,  தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


1 கருத்து: