புதன், 27 மே, 2020

பரிசுக்காக பாட்டை விற்பவன் பிச்சைக்காரனை விடக் கேவலமானவன்

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்      

நூற்பா 61

சேவித்து ஒருவர்பின் செல்வார் புலமையில்
பாடல்விற்று அலைவார் பரிசுகேடு இனிதே 61

இதன்பொருள்: ஒரு செல்வனுக்கே சற்றேறக்குறைய அடிமைப்பட்டு அவன் கருத்தின் வண்ணமே ஒழுகுகின்ற ஒரு கவிஞனின் புலமையை விடப் பற்பல தலைவர்களின்் மீது பாடல்களைப் புனைந்து அவர்கள் தரும் பரிசில்களால் வாழ்க்கை நடத்தும் இரவலரின் இழிவும் உயர்ந்ததே ஆகும் என்றவாறு.

விளக்கம்:  முன் பதினைந்தாம் நூற்பாவில் “புகலரும் பனுவற் பொற்பணங் கருதி விற்கத் துணிவது மேம்பாடு அன்றே” என்றவர் இங்கு அதனினும் இழிந்ததாக மற்றோர் நிலையைச் சுட்டுகிறார். ஓர் அரசன், சிற்றரசன் அல்லது செல்வனையே எப்போதும் சார்ந்திருந்து அவன் விருப்பு, வெறுப்புகளையே தம்முடையவை யாக்கிக் கொண்டும், அவன் செயல்களுக் கெல்லாம் எவ்வாறேனும் நியாயம் கற்பித்துக்கொண்டும் சிலர் இருப்பர். இந் நிலையையே “சேவித்து ஒருவர்பின் செல்வார்” என்றார். இவர்களை அச் செல்வரின் உடைமைகளில் ஒன்றாகக் கூறினும் தவறாகாது. தமக்கு உணவளிப்பவனை மகிழ்விப்பது ஒன்றே இவர்களது தலையான குறிக்கோள். இவர்களுக்குப் பெரும்பாலும் விடுதலையே இல்லை.

     இதற்கு மாறாகப் புலமை வியாபாரிகள் எந்நாளும் ஒரு செல்வனுக்கே ஆட்பட்டிருப்பதில்லை. தம் சரக்கிற்கு மதிப்பு இருக்கும் வரையில் ஓரிடத்தில் இருப்பர்; சற்று மதிப்புக் குறைந்தால் அங்காடியை மாற்றிவிடுவர். எனவே, இவர்களுக்குச் சற்றுப் பரந்த கண்ணோட்டமும், சுயமரியாதையும் இருக்கும். இந்நிலையில் சுதந்திரம் மிகுதி
 
புலவர்களின் அடிமைநிலை, வணிகர்நிலை என்னும் இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டி அறிஞன் அடிமையாதலை விட வணிகனாக இருப்பதே மேல் என்கிறார். புலமையை விற்பது தவறுதான். எனினும், புலமையை அடிமையாக்குவதில் அதைவிடப் பெருந்தவறு என்பது கருத்து. இனிதே என்பதிலுள்ள ஏகாரத்தைக் கேடு என்ற சொல்லிற்கு மாற்றுக.

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்” (நல்வழி 19) என்றதில் முதலில் வந்த இரண்டும் இவை.

நன்றி பதிவு புலவர்.ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை


3 கருத்துகள்:

  1. ஐயா வணக்கம் கடந்த January அன்று தைஅமாவாசை பூஜை யில் கலந்து கொண்டேன் உங்களது சோடச உபசாரம் முருகனுக்கு பூஜை செய்தது பார்க்க மிகவும் அருமையாக இருந்தது அந்த பாக்கியம் அடியேன் க்கும் கிடைத்தது ..தைதேர் கொடி ஏற்றம் என்பதால் வாக்கு இல்லை என்றனர்
    ஏமாற்றத்துடன் இறைவன் இடம் பிரத்தித்து திருப்பினேன்..பின்பு ஒரு நாள் மீண்டும் கோயில் க்கு வந்து நாடி படிக்க பதிவு செய்தேன் April 4th அன்று வாருங்கள் என்றனர் இறைவன் இடம் வேண்டி வீடு திரும்பினேன்.. எனது
    போதாத காலம் lockdown ஆல் நாடி படிக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை இறை அருள் கிடைக்க வில்லை என்று பெருத்த ஏமாற்றத்தை அடைந்தேன் .. மிகவும் மன அழுத்தம் உள்ளது எனது கர்மா வை கலிக்க இறைவன் இடம் ஒரு வாய்ப்பு கிடைக்க தாங்கள் தான் வழி செய்யவும்.. பேருந்து சேவை தொடங்கிய பின் நாடி படிக்க நேரம் தாருங்கள்.. அல்லது வேறு ஏதேனும் வழி இருந்தால் நாடி படிக்க பாக்கியம் தாருங்கள்...

    பதிலளிநீக்கு
  2. நம் குரு நாதர் தற்சமயம் நேரில் படிப்பதில்லை அய்யா. 9865848488 என்ற எண்ணிற்கு அழைத்து போனில் நேரில் படிப்பது போன்ற அதே உணர்வில் கேட்டு பலன் அடையலாம். முருகன் அருள் முன்நிற்க.

    பதிலளிநீக்கு
  3. ஆம் ஐயா இந்த நம்பர் க்கு தான் போன் செய்தேன்
    நான் முதல் முதலில் நாடி படிப்பதால் நேரில் வரவும் என்று Vijay Anna கூறினார்.. ஏன் என்றால் அவர் படிப்பதில் சந்தேகம் அல்லது புரியவில்லை என்றால் நேரில் எளிதாக விளக்கம் பெறலாம் என்று சொன்னார்...

    பதிலளிநீக்கு