சனி, 20 ஜூன், 2020


சிவபெருமானும் ஒரு தமிழ்ப் புலவரே 

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்



நூற்பா 70 

சிவபெருமானும் ஒரு தமிழ்ப் புலவரே
பாணனும் தருமியும் பெத்தானும் உய்யப்
பாடியது அன்றிப் பைந்தமிழ்க் கழகத்
தலைவனைப் பழித்தும் தனிக்கவி பகர்ந்த
பரமனும் புலவன் என்பது பண்பே.70

இதன்பொருள்:

பாணபத்திரருக்காக “மதிமலி புரிசை” என்னும் திருமுகப் பாசுரத்தையும், தருமிக்காகக் “கொங்குதேர் வாழ்க்கை” என்ற அகவற் பாவையும், பெத்தான் சாம்பானுக்காக "அடியார்க் கெளியன்” எனத்தொடங்கும் வெண்பாவையும், நக்கீரனை இகழ்வதாக, “அங்கம் குலுங்க” என்னும் ஒரு வெண்பாவையும் பாடியதால் சிவபெருமானையும் ஒரு தமிழ்ப்புலவர் என்பதே முறையாகும் என்றவாறு.

விளக்கம்: 

இவ் வரலாறுகள் திருவிளையாடற் புராணம், புலவர் புராணம் ஆகியவற்றுள் உள்ளன. சிவபெருமானும் தமிழ்ப் புலவனே என்னும் இதே கருத்து இவரால் வேறிடத்தே “அரன்முனாள் தருமி பாணன் அன்புறு பெத்தான் கீரன் தரம்உலகு அறியப் பாடித் தமிழ்க்கவிப் புலவன் ஆனான்”1 எனக் கூறப்பட்டுள்ளது.


நன்றி : பதிவு புலவர்  ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர்  தமிழ்ச்சங்கம்.



நன்றி: சிரவையாதீனம்  தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

3 கருத்துகள்: