புதன், 24 ஜூன், 2020


தேவர்கள் தங்களைப் புலவர் என அழைத்துக் கொண்டனர்


 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் 
  
புலமை இலக்கணம் -  மரபியல்பு

நூற்பா: 74     
            
     68. தேவர்கள் தங்களைப் புலவர் என அழைத்துக் கொண்டனர்.

பொருவரும் தமிழ்ப்பாப் புகலாப் புத்தே- ளினரும் புலவோர் 
எனும்பெயர்க்கு இச்சித்து 
அணிந்து கொண்டமை அறிவும்அம் புவியே     74

இதன்பொருள் : இணையற்ற தமிழ்க்கவிகளை இயற்றாத தேவர்களும் தாங்களும் புலவர்கள் என அழைக்கப்பட வேண்டும் என்னும் விருப்பத்தால் அப்பெயரைப் புனைந்து கொண்டார்கள் என்று அறிஞர்கள் அறிவார்கள் என்றவாறு.

விளக்கம்: புலம் என்ற சொல் அறிவு, ஐம்புலன் முதலிய பலவற்றை உணர்த்தும் ஒரு பலபொருள் ஒரு சொல் ஆகும். புலவர் என்ற சொல் அறிவை உடையவர்கள் என்ற பொருளில் கவிஞர்களையும், ஐம்புல இன்பங்களையும் ஆரத் துய்ப்பவர்கள் என்ற பொருளில் தேவர்களையும் சுட்டும். பாப் புனைதலாகிய புலமை இல்லாதபோதும் அவர்கள் அப் பெயரை அணிந்து கொண்டனர்; இது அத்தொழிலின் சிறப்பைப் காட்டுகிறது என்பது இவர் கருத்து. இது யுத்தி வாதம்.


புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி:சிரவையாதீனம்  தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

1 கருத்து: