திங்கள், 22 ஜூன், 2020


வாணியும் தமிழ்ப் புலவரே

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்   

புலமை இலக்கணம்-மரபியல்பு

 நூற்பா: 73 

67.வாணியும்  தமிழ்ப் புலவரே 
வெண்மலர்க் கமல மீதுவீற் 
றிருந்து எவர் எவர் கவிகளும்
என்னது என்னும் வெண்பா
வொன்று விளம்பினள் அன்றே 
நாவின் கிழத்தியும் “நாடா முதல்” என.

இதன்பொருள்:

வெள்ளைத்தாமரையில் இருந்துகொண்டு இவ்வுலகில் யாரெல்லாம் கவிதை புனைந்தாலும் அவை யாவும் என்னுடையதே எனக்கூறும் கலைமகளும், “நாடா முதல்” எனத் தொடங்கும் வெண்பாவைப் பாடினாள் என்றவாறு.


விளக்கம்:
“நாடா முதல்நான் மறைநான் முகன்நாவிற்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் --கூடாரை
எள்ளுவன் மீன்உயர்த்த ஏந்துஇலைவேல் வேந்தனே
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு” 

எனும் வெண்பாவை நினைந்து கூறியது இது. இதில் வேதம், பாரதம், திருக்குறள் யாவும் யான் பாடினேன் என வாணி கூறுவதாக அமைந்துள்ளமை காண்க.

நன்றி பதிவு: ஆ.காளியப்பன் தலைவர், தொல்காப்பியர் தமிழ்சங்கம்.



நன்றி : சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக