திங்கள், 4 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-1

                                
எனது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் ஆசியுடன் இன்று முதல் தினம் ஒரு திருப்புகழ் எனும் தலைப்பில் ஒரு தொடர் நமது கௌமாரபயணத்தில் ஆரம்பம் ஆகின்றது. எல்லாம் வல்ல பரம கருணா நிதியாகிய நமது வழிபடு கடவுள் தண்டமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அனைத்து அடியார்களின் திருப்பாதங்களையும் எனது சிரமேல் வைத்து வணங்கி இந்த திருப்புகழ் தொடரை எழுதுகின்றேன். முதலாவதாக திருப்புகழ் பற்றி இதுவரை வழக்கத்தில் உள்ள சிறப்பு பாயிரங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம். இப் பாயிரம் பூர்வத்துள்ள அபியுக்தர்களால் செய்யப்பட்டுப் புராதன பிரதிகளில் எழுதி வழங்கி வருவது என்பதை அறிந்து கொள்ளவும்.
திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் சில பாடல்கள்

திருப்புகழை நம் செவிகள் கேட்கும்

எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர்சொல்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? - பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்குஞ் செவி?

திருப்புகழைக் கேளீர் தினம்

வேதம்வேண் டாம் சகல வித்தைவேண் டாம்கீத
நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம், - ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்
திருப்புகழைக் கேளீர் தினம்

திருப்புகழைத் தினமும் கேட்பதாலேயே வேதம், சகல வித்தைகள், இசை கீதங்கள் அனைத்தும் அறியலாம்; ஆதலால் அதனையே கேட்க என்கிறது பாடல்

திருப்புகழ் படிப்பவர் பெறுகின்ற நன்மைகள்

ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந் நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம் - மோனாவீ
டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக்
கூறினார்க் காமேஇக் கூறு.

திருப்புகழ் படித்தால் முருகன் காட்சி கிட்டும்

ஆறுமுகந் தோன்றும் அழகியவேல் தோன் றுமவன்
ஏறுமயில் தோன்றும் எழில்தோன்றும் - சீறிவரு
சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப்
பாரில் வழுத்தினோர் பால்

திருப்புகழ் படிப்பவர் மனமே முருகன் இருப்பிடம்
                              
பொருப்பது பொடிப்பட விடுத்திடுகை வேலா
இருப்பிடம் உனக்கெது எனக்கரு ளியம்பாய்;
உருக்க நல் விழுக்குலம் ஒழுக்கமில ரேனும்
திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம்

திருப்புகழ் படிப்பவர்கள் மனவலிமை பெறுவர்

திருப்புகழ் படிக்குமவர் சிந்தைவலு வாலே
ஒருத்தரை மதிப்பதிலை உன்றனரு ளாலே
பொருப்புக மிகப்பொருது வென்றுமயில் மீதே
தரித்தொரு திருத்தணியில் நின்றபெரு மாளே

திருப்புகழே முக்தி தரும் சாதனம்

திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத்
திருப்புகழை நித்தஞ் செபிக்கத் - திருப்புகழை
அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று
கெர்ச்சிக்க லாமே கெடீ.

திருப்புகழ் படிக்கும் அடியார்கள் பெருமை

திருப்புகழ் வல்ல சூரர்மகன் நாயகன், சங்கரற்குக்
குருப்புகழ் வல்ல குமரேசன், சண்முகன், குன்றெறிந்தோன்
மருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல் சொன்ன
திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் தூளிஎன் சென்னியதே. 

இத்தகைய சிறப்பு மிக்க இந்த திருப்புகழைக் கற்போம், கேட்போம், படிப்போம், ஜபம் செய்வோம், அர்ச்சிபோம், போற்றுவோம், பகிர்வோம், படிக்க வைப்போம், பாட வைப்போம், கேட்க வைப்போம் இப்படி அனைத்திலும் உள்ள ஓம் ஓம் ஓம் என ஒலிக்கும் பிரணவத்திற்கு பொருள் சொன்ன சுவாமி நாதனே குருவாய் வருவாய் அருள்வாய்!!


நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள அவர்கள்

கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

2 கருத்துகள்:

  1. திருப்புகழ் கற்போம்.
    வாழ்க,வளர்க, சிறக்க உங்கள் தெய்வீகப் பணி.

    பதிலளிநீக்கு
  2. திருப்புகழ் கற்போம்.
    வாழ்க,வளர்க, சிறக்க உங்கள் தெய்வீகப் பணி.

    பதிலளிநீக்கு