வெள்ளி, 8 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-6

இன்று அனுமன் ஜெயந்தி. ஆஞ்சனேயர் ராம பக்தியில் சிறந்து விளங்கியவர். மகா பலசாலி. அனைத்து ஆஞ்சனேயர் ஆலயங்களிலும் இன்று சிறப்பு பூஜை நடக்கும். அருணகிரிநாத சுவாமிகள் ஆஞ்சனேயர் பற்றிய சுந்தரகாண்டம் முழுவதையும் ஒரே ஒரு திருப்புகழில் பாடி விட்டார். திருப்புகழில் இல்லாதது ஒன்றும் இல்லை. சமய, சமரச, சமயாதீத உணர்வில் கௌமார நெறியில் பிறழாமல் நின்ற அருணகிரிநாத சுவாமிகள் அவர்கள் திருப்புகழில் பாடாத தெய்வங்களே இல்லை எனலாம். அந்த வகையில் இன்று நாம் கானும் இந்த திருப்புகழை பாராயணம் செய்தால் சுந்தர காண்டம் முழுவதும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

கதிர்காமத் திருப்புகழ்
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
    யவிக்கக் கனபானம் வேணுநல்
     ஒளிக்குப் புனலாடை வேணுமெய்  யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
    இருக்கச் சிறுநாரி வேணுமொர்
    படுக்கத் தனிவீடு வேணுமிவ்       வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
   யக்கக் கடலாடி நீடிய
    கிளைக்குப் பரிபால னாயுயி          ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
   மழைத்துத் தரவேணு மூழ்பவ
     கிரிக்குட் சுழல்வேனை யாளுவ  தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
    வடக்குச் சில தூதர் நாடுக
    குணக்குச் சில தூதர் தேடுக       வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
     யினித்தெற் கொருதூது போவது
     குறிப்பிற் குறிபோன போதிலும்    வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
     அரக்கர்க் கிளையாத தீரனு
     மலைக்கப் புறமேவி மாதுறு       வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
     மளித்துற் றவர்மேல் மனோகர
      மளித்துக் கதிர்காம மேவிய         பெருமாளே
                                   
பொருள்:
உடுக்க ஆடை, உண்ண உணவு, நோய்களுக்குச் சிகிச்சை,படுக்க வீடு, இளம் மனைவி முதலிய எல்லா சுகங்களும் கிடைத்துக் குடும்பத்தனாகி, வீணாக உயிரைக் கழிக்காமல்,கருணை உள்ளத்தையும்,  ஞான நிலை அறிவையும் அடியேனை அழைத்துத் தரவேணும். பிறவி என்னும் சூழலில் சிக்குண்ட என்னைஆண்டருளும் நாளும் உண்டாகுமோ. குறிப்பறிந்து சீதையைத் தேடித் தெற்கே சென்று,இலங்கையில்சீதையை அசோக வனத்தில் கண்ட அனுமனுக்கு அன்புடன்அனுக்கிரகித்து கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. பிறவிச் சூழலில் இருக்கும் என்னை ஆண்டருள வேண்டும் என்பது இந்தத் திருப்புகழின் சுருக்க விளக்கம்.

 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள்


 கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக