வியாழன், 7 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-4


திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது. இதில் ``விறல் மாரனைந்து'' எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் நடைபெறும். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர். இப்படி உலகாதய நலன்களுக்காகவாவது திருப்புகழைப் பாராயணம் செய்து பலன் அடையட்டும் என்று முருகன் அடியார்கள் அனைவரும் முயற்சி செய்துள்ளார்கள். 

சிரவை ஆதீனம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் கஜ பூஜை சுந்தர சுவாமிகளுக்கும், கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கும் இடையே அபரிதமான நட்புறவு இருந்து வந்தது. கோவையில் நடந்த 108 ஆண் யானை கஜபூஜையான உலகப் பெரும் வேள்விக்கு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் ஒப்புதல் வாங்க கஜ பூஜை சுந்தர சுவாமிகளும், கிருபானந்த வாரியார் சுவாமிகளும் சென்ற உடனேயே முதல்வர் ஒப்புதல் அளித்தார்கள் என்று எமது ஞானதேசிகர் கூறிய போது உள்ளம் அளவு கடந்த உவகை கொண்டது. அந்த வகையில் இன்று இரண்டு முருக வம்ச குரு நாதர்களையும் நினைவு கூர்ந்து இந்த திருப்புகழைப் படிப்போம்.
படம்: திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
படம்: கஜ பூஜை சுந்தர சுவாமிகள்

திருப்புகழ்

விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த 

மிகவானி லிந்து - வெயில் காய 

மிதவாடை வந்து தழல்போல வொன்ற 

வினைமாதர் தந்தம் - வசை கூற 

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட 

கொடி தான துன்ப - மயில்தீர 

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து 

குறை தீர வந்து குறுகாயோ 

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து 

வழிபாடு தந்த மதியாளா 

மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச 

வடிவேலெ றிந்த அதிதீரா 

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு 

மடியாரி டைஞ்சல் களைவோனே 

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து 

அலைவாயு கந்த பெருமாளே!


நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

ஓம் சிரவை ஆதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக