வெள்ளி, 8 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-5

படம்: குழந்தை கந்தசாமிக் கடவுள்
வள்ளிமலை சுவாமிகள் திருப்புகழை மஹா மந்திரமாகப் போற்றி பாராயணம் செய்து வந்தார். அதனால் அவர் திருப்புகழ் சுவாமிகள் என அழைக்கப்பட்டார். முருகப்பெருமானே இரமண மகரிஷியாக அவதாரம் செய்துள்ளார் என்பதை அறிந்த வள்ளிமலை சுவாமிகள் ரமணரைத் தரிசிக்க எண்ணித் திருவண்ணாமலைக்குச் சென்றார். அங்கே ரமணரோ அவரைக் கண்டுபோ, போ, இங்கே நிற்காதே, கீழே போஎன்று விரட்டிவிட, திருப்புகழ் ஸ்வாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் தான் மனதால் குருவாக வரித்தவர், குருவின் வார்த்தையை மீறுவது எப்படி? மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டார். 
                              படம்: இரமண மகரிஷி
என்ன ஆச்சரியம்?? அங்கே இவரை வரவேற்று அழைத்தவரோ காஞ்சி காமாட்சியின் அம்சமாக அவதரித்த ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். ரமணரின் தீர்க்க தரிசனம் அப்போது தான் புரிந்தது ஸ்ரீவள்ளிமலை ஸ்வாமிகளுக்கு. திருப்புகழ் ஸ்வாமிகளைத் தன்னருகே அழைத்து அமர வைத்துக்கொண்டு அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். சிவமானஸ ஸ்தோத்திரத்தின் நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி அதன் பொருளையும் விளக்கிச் சொன்னார். அதற்கு ஈடான திருப்புகழை வள்ளிமலை ஸ்வாமிகளைக் கூறச் சொல்லிக் கேட்டுத் தானும் மகிழ்ந்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். பின்னர் அவரிடம், “திருப்புகழே உனக்கு மஹா மந்திரம். உன் சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் இந்தத் திருப்புகழுக்கே அர்ப்பணம் செய்து தவ வாழ்க்கை வாழவேண்டும் நீ. வேறு எந்தவிதமான மந்திரங்களோ நூல்களோ உனக்குத் தேவையில்லை. திருப்புகழ்தான் உனக்கு மகாமந்திரம். நீ செல்லுமிடமெல்லாம் இனி திருப்புகழ் ஒலிக்கட்டும்.
 இப்போது நீ வள்ளிமலைக்குச் சென்று தவம் மேற்கொள்வாயாக. விரைவில் நாமும் அங்கே வருவோம்.என்று ஆசீர்வதித்து அனுப்பினார். குருவின் ஆணைப்படியே வள்ளிமலை வந்தடைந்தார் ஸ்ரீஸ்வாமிகள். வள்ளிமலையில் தவம் செய்யலானார். அதன் பின்னர் அவர் பெயர் திருப்புகழ் ஸ்வாமிகள் என்பதில் இருந்து வள்ளிமலை ஸ்வாமிகள் என ஆனது. சென்னையிலும் சில காலம் தங்கினார் ஸ்ரீஸ்வாமிகள். 
                            படம்: வள்ளிமலை சுவாமிகள்
அவர் சென்னையில் இருந்த சமயம் அவருடைய சீடர்கள் சிலர் அப்போதைய ஆங்கில அரசில் பணி புரிந்து வந்தனர். அந்தச் சமயம் டிசம்பர் 31-ம் தேதி, மறுநாள் ஜனவரி ஒன்றாம் தேதி. தங்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லவேண்டும் என ஸ்வாமிகளிடம் தெரிவித்துவிட்டு அந்தச் சீடர்கள் ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்திக்கச் சென்றுவிட்டனர். மனம் நொந்துபோனார் வள்ளிமலை ஸ்வாமிகள். அழியாத பெருவாழ்வைத் தரும் ஆறுமுகன் இருக்க ஆங்கிலேயரைத் தேடிப் போகின்றனரே? அதுவும் நம் வழக்கம் இல்லாத ஒரு நாளைக் கொண்டாட என ஸ்வாமிகள் மிகவும் வருந்தினார். அதுவும் முருகப்பெருமான் விரும்பி மணந்த வள்ளியை நேரிலே தரிசிக்கும் பேறு பெற்றவர் எனவும் சொல்வதுண்டு . ஆனாலும் உலகத்துக்கே அதிகாரியான முருகனை விட்டுவிட்டு, அவன் புகழ் பாடும் திருப்புகழை விட்டுவிட்டு, நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரைப் பார்த்து அவர்கள் காலில் விழுவதா?  வள்ளி கணவன் பெயரை வழிப்போக்கர் சொன்னாலும் ஊனும் உருகும், உள்ளம் குழையும், உன்மத்தம் ஆகுமே எனச் சொன்ன வள்ளிமலை ஸ்வாமிகள், திருத்தணியில் திருப்புகழைப் பாடிக் கொண்டே படிகளில் ஏறி மேலே செல்ல ஆரம்பித்தார். இது ஆரம்பிக்கப் பட்ட ஆண்டு 1918. திருத்தணியில் 365 படிக்கட்டுகள். ஒரு வருடத்தின் மொத்த நாட்களைக் குறிக்கும் இந்தப் படிக்கட்டுகளில் திருப்புகழைப் பாடிக் கொண்டே பாராயணம் செய்து கொண்டே ஏறி திருத்தணி முருகனைத் தரிசிப்பது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகச் செய்தார். இப்படி ஆங்கிலப்புத்தாண்டு அன்று முருகனை வழிபட வழி வகுத்தவர் வள்ளிமலை சுவாமிகள் ஆவார்.
இத்தகைய பெருமை பெற்ற வள்ளிமலை சுவாமிகள் குழந்தை பாக்கியம் பெற உபதேசம் செய்த திருப்புகழ் மந்திரமே இன்று நாம் காண இருக்கும் திருப்புகழ்.
திண்டுக்கல் ராஜீ அவர்கள் அழைப்பின் பேரில் நமது ஞானஸ்கந்த மூர்த்திக்கு நடக்கும் அமாவாஸை பூஜையில் கலந்து கொண்ட  காமேஸ்வரன் எனும் அன்பர் ஒருவருக்கு சுமார் பத்து ஆண்டுகாலம் குழந்தை இல்லாத குறையை நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வந்த வாக்கின்படி கடைபிடித்து நீங்கி சுவாமி இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்துள்ளது எனும் மெய் சிலிர்க்கும் செய்தி இந்த திருப்புகழை தட்டச்சு செய்யும் போது வந்தது. செகமாயை திருப்புகழுக்கு இவ்வளவு வலிமையா என்று உணர்ந்து முருகா....என்னே உன் செயல் என்று கண்ணீர் மல்கினேன். எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஒன்று நீண்டகாலமாக குழந்தை இல்லாதவர்க்கு இரட்டைக் குழந்தையை நமது ஞானஸ்கந்த மூர்த்தி ஜீவ நாடியில் வாக்குரைத்தபடி அருளியது மற்றொன்று இந்த செகமாய திருப்புகழை தட்டச்சு செய்யும்போது இரட்டைக் குழந்தை பிறந்த செய்தி வந்தது. இபோது சத்தியாமாகச் சொல்கின்றேன் திருப்புகழ்தான் மஹா மந்திரம்.... திருப்புகழ்தான் மஹா மந்திரம்....
            படம்: அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி கஜ வாகன அலங்காரம்
கழுகுமலை மலர்க்காவடி விழாவிற்கு சென்ற போது ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் தொடங்கப்பட்ட பூஜையை அதன் பெருமையை எனது குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தனது அருளாசியில் தெரிவித்தார்கள். அதை ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருக்கின்றேன். இபோது வள்ளிமலை சுவாமிகள் பற்றி சொல்லும் போது மீண்டும் ஒருமுறை அந்த ஆங்கிலப்புத்தாண்டு அன்று தோன்றிய வழிபாட்டைச் சொல்ல நேர்ந்தது.
                படம்: கழுகுமலையில் சிரவை ஆதீனம் அருளாசி
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த திருப்புகழை தினமும் கலை மாலை ஓத நிச்சயம் அகப்பையில் குழந்தை உருவாகும். அதற்கு இந்த திருவிளையாடலே சாட்சியாகும்.
                            
சுவாமிமலைத் திருப்புகழ்:
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே!

நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                              
கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

1 கருத்து: