செவ்வாய், 17 நவம்பர், 2015

கோவை கௌமார மடாலயத்தில் 984-வது திருக்கார்த்திகைத் தீபத்திருவிழா






  • மன்மத ஆண்டு கார்த்திகைத் திங்கள் 9ம் நாள் 25.11.2015 புதன்கிழமை அன்று மாலை 7 மணிக்கு  கோவை கௌமார மடாலத்தில் 984-வது திருக்கார்த்திகைத் தீபத்திருவிழா சிரவை ஆதீனம்,தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களால் சிறப்பாக நட்த்தப்பட உள்ளது.
  • அதே நாளில் கௌமார மடாலத்தில் உள்ள பாண்டுரங்கப் பெருமாள் தீப விழாவும் நடக்க இருக்கின்றது.
  • அறு சமய வழிபாட்டையும் ஒரு சேர வழிபட்டு குருவே பரம் பொருள் எனும் கொள்கை நெறியைக் கடைபிடிப்பது கௌமார சமயம்.
  • ஞாயிறு-சூரியன்,திங்கள்-சிவன்,செவ்வாய்-அம்பிகை,புதன்-விஷ்னு,வியாழன்-கணபதி,வெள்ளி-முருகன்,சனி-சமயாதீதமாய் குரு வழிபாடு என மிகச்சிறந்த சமய, சமரச, சமயாதீத நெறிகளைக் கடைபிடிப்பது கௌமார சமயம்.
  • இந்த வகையில் சித்தி மகோற்கட வினாயகர் கோவில், தண்டபாணிக்கடவுள் கோவில்,அவினாசியப்பர் கோவில், கருணாம்பிகை கோவில்,பாண்டுரங்கப் பெருமாள் கோவில்,சூரியன் கோவில் என அறு சமயக்கடவுள்களுக்கும் கோவில் கௌமார மடாலயத்தில் உண்டு.
  • கௌமார நெறியின் முழு முதற் கடவுள் முருகப் பெருமான் என்பதால் கௌமார மடாலய கோவிலில் தண்டபாணிக்கடவுள் கோவில் நடு நாயகமாக விளங்க மற்ற ஐந்து சமயக் கடவுள் கோவில்களும் சுற்றிலும் இருக்கின்றது சிறப்பு.
  • வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் மேற்படி அறு சமயக் கோவில்களை வழிபட்டால் அது சமயம் எனப்படும்.
  • இந்த அறு சமயக் கடவுள்களிடம் எந்தவித பேதமும் பாராமல் வழிபடுவது சமரசம் எனப்படும்.
  • இந்த அறுசமயக் கடவுள் வழிபாட்டின் முதிர்ச்சியாக குருவே பரம்பொருள் என உணர்ந்து கௌமார நெறியான குரு நெறியைக் கொண்டு வழிபடுவது சமயாதீதம் எனப்படும்.
  • அந்த வகையில் கௌமார மடாலயத்தில் அறு சமய ஆறு நாள் வழிபாடு முடித்து ஏழாவது நாளுக்கு சனிக்கிழமைக்கு உரிய வழிபாடாகிய சமயாதீத நெறியான குருவே பரம்பொருள் எனும் வகையில் முதல் மூன்று சந்நிதானங்களின் சமாதி ஆலயங்கள் மடாலய சமாதி வளாகத்தில் இருக்கின்றன. இது சனிக்கிழைமை வழிபாட்டிற்கு சிறந்ததாகும்.
  • சமய,சமரச,சமயாதீதம் எனும் மூன்று முக்கிய கௌமாரக் கோட்பாடுகளை ஒட்டு மொத்தமாகக் கொண்டதே கோவை சிரவை கௌமார மடாலயம்.
  • இந்த கொள்கைகளை முருகப் பெருமானிடம் இருந்து அறிந்த முதல் அகச்சந்தான குருநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
  • அகச்சந்தான குருநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் உபதேசம் பெற்று கௌமார மடத்தை கோவையில் உருவாக்கியவர் சிரவை ஆதீன குரு முதல்வர் திருப்பெருந்திரு. இராமானத சுவாமிகள் அவர்கள்.
  • சிரவை ஆதீனக் குரு முதல்வர் திருப்பெருந்திரு. இராமானந்த சுவாமிகள் அவர்களிடம் இருந்து உபதேசம் பெற்றவர் சிரவை ஆதீன இரண்டாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் அவர்கள் அருளாட்சி ஏற்று கொங்கு நாட்டு கச்சியப்பராகத் திகழ்ந்தார்கள் (இவரது குரு பூஜை 23.11.2015 திங்கட்கிழைமை அன்று நடக்க இருக்கின்றது. மேலும் விவரங்களுக்கு சென்ற பதிவைப் பார்க்கவும்)
  • அதன் பின்பு மூன்றாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு.சுந்தர சுவாமிகள் அவர்கள் அருளாட்சி ஏற்று திருப்பணிச்சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார்கள். (சுவாமிகளின் 87 வது திரு அவதார விழா 09.12.2015 புதன் கிழமை அன்று நடக்க இருக்கின்றது. இதைப்பற்றி ஒரு தனிப் பதிவு வரும்)
  • அதன் பின்பு  நான்காம் குரு மஹா சந்நிதானம் தற்போதைய ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் அருளாட்சி ஏற்று கௌமார நெறியைக் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்ந்து வருகின்றார்கள்.
  • முருகப் பெருமானின் குரு பரம்பரையில் இருந்து வந்த மற்றைய மஹான்கள் தற்போது பெரும்பாலும் இல்லை. அதே போல் முருக வழிபாட்டுக்குறிய கௌமார மடமும் வேறங்கும் பெரிய அளவில் இல்லை. நமக்கெல்லாம் கிடைத்த பெரும்பேறு தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள். இவரைத் தரிசனம் செய்தாலே முருகனைத் தரிசனம் செய்வது போல்தான். காரணம் குரு பரம்பரையின் சிறப்பு.
  • பிராப்தம் இருக்கும் கௌமார பயண வாசகர்கள் இந்த கோவை கௌமார மடாலத்தில்  நடக்க இருக்கின்ற 984-வது திருக்கார்த்திகைத் தீபத்திருவிழாவில் கலந்து கொண்டு குருவருளையும் திருவருளையும் பெற அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
  • கௌமார பயண வாசகர்கள் தனது வாழ் நாளில் ஒரு முறையேனும் கௌமார மடாலய தரிசனம் கொள்ள வேண்டும். அதற்கு இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளவே இறைவன் உங்களுக்கு இதைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்பது எனது கருத்து.
நன்றி: சிரவை அதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள், தலைவர், கௌமார மடாலயம்.
படம்: ரிஷிகேஷ் யாத்திரையில் 1996ம் ஆண்டு கங்கைக்கரையில் சிரவை ஆதீனம், தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் 26ம் வயதில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.
என்றென்றும்,
குருவின் சேவையில்,
இந்தக் கட்டுரையை எழுதியவர்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.


                                       ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                               சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

2 கருத்துகள்: