சனி, 14 நவம்பர், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 33 இன் தொடர்ச்சி !


கோயம்புத்தூரில் உள்ள பேரூர் ஆதினம் தவத்திரு. சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்ற பின்பு மீனாட்சி நாடியில் கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகளைச் சந்தித்து உபதேசம் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அடுத்து எங்களது வாகனம் சரவணம்பட்டியை நோக்கிப் பயணித்தது. சரவணம்பட்டி எனும் ஊர் முன்பு சிரவணம்பட்டி எனும் பெயரில் இருந்ததால் அதை வைத்து சிரவை என்று அழைக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அதனால் இந்த மடம் சிரவை ஆதீனம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த சிரவை கௌமார மடத்திற்கும் எனக்கும் முன் ஜென்ம தொடர்பு இருப்பதாகவும் இந்த கௌமார பரம்பரையில் வந்தவன் நீ என்றும் மீனாட்சி நாடியில் 2500 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட குறிப்பு இருக்கின்றது. எனவே மிகவும் ஆவலாக கௌமார மடம் நோக்கி எங்கள் பயணம் இருந்தது. அதற்கு முன்பு கௌமாரம் என்றால் என்ன? கௌமார மடம் என்றால் என்ன? கோவை கௌமார மடத்தின் வரலாறு என்ன என்பதையெல்லாம் எனது அருமை வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அதைப்பற்றி இங்கு சற்று விளக்கமாகவே சொல்கிறேன்.

சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள்

ஸ்ரீ ஆதிசங்கரர் (சுமார் கி.பி. 8 ம் நூற்றாண்டு), பல துர்மதங்களைத் தள்ளி, இந்து மதத்தின் தூண்கள் என்று கருதப்படும் ஆறு (ஷண்) மதங்களை உணர்த்தி, பக்தியின் அடிப்படையில் வழிபாடுகளை அமைத்துத் தந்தார்.
அந்த ஷண்மதங்கள் என்பன:
     காணாபத்யம் ... கணபதி வழிபாடு
     சைவம் ... சிவ வழிபாடு
     வைஷ்ணவம் ... விஷ்ணு வழிபாடு
     செளரம் ... சூரிய, அக்கினி வழிபாடு
     சாக்தம் ... அம்பிகை வழிபாடு
     கெளமாரம் ... முருக வழிபாடு

ஷண்மதங்களில் (ஆறு சமயங்களில்) ஒன்றான கெளமாரம் பிரும்ம வித்தை, ஆத்ம வித்தை, புருஷார்த்த சாதனம் என்ற மூன்று செல்வங்களை அறிய வழிகாட்டுவது. இந்த சுப்பிரமணிய உபாசனை சிவதத்துவத்தையே ஆதாரமாகக் கொண்டது. ஜோதிஸ்வரரூபமான நிர்க்குண பரப்பிரும்மத்திற்கு சுப்பிரமணிய சிவம் என்று பெயர்.
ஆக முருகப் பெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு வழிபாடு செய்யும் முறைகளைக் கூறுவது கௌமாரம் எனப்படும். எனக்கு என ஒரு நாடு எனக்கு என ஒரு கூட்டம் எனக்கு என தனி மக்கள் என ஏற்படுத்த வேண்டும் என முருகப்பெருமான் ஒரு சிறு பழத்திற்காகக் கோபித்துக்கொண்டு தமிழ் கொஞ்சி விளையாடும் நமது தமிழ் நாட்டில் பழநியில் வந்து கோவில் கொண்டார் என்கிறது புராண வரலாறு. கௌமாரம் என்றால் என்ன? என்பது இப்போது புரிந்திருக்கும் எனெ நினக்கின்றேன். சரி கோவையில் சரவணம்பட்டியில் கௌமார மடம் எப்படி வந்தது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


பொதுவாக ஒரு மதம் என்றால் அந்த மதத்தின் முழுமுதல் தெய்வம் இருக்கும். அந்த முழு முதல் தெய்வம் தானே குருவாகி தன்னை வந்தடையும் வழிமுறைகளைத் தானே உபதேசம் செய்து தனது கொள்கைகளை கடைபிடிக்கும் குரு பரம்பரைக்கு ஆதி முதல் குருவாகவும் அந்த தெய்வமே இருக்கும். இதை குருவே சிவமெனக் கூறினார் நந்தி எனும் திருமூல நாயனாரின் வாக்கில் இருந்து அறிந்து கொள்ளலாம். குரு தான் நமது கண்களுக்குத் தெரியும் தெய்வம் எனவே குருவையே தெய்வமாக வழிபடும் சீடன் அந்த மூல தெய்வத்தை அடைகின்ற வழிகளைத் தானாகவே பெறுகிறான். அந்த வகையில் ஆதி முதல் தெய்வமே குருவாக வருவதால் நம்மால் அந்த இறைவனை எளிதில் அடைய முடிகிறது.


இப்படி கௌமாரம் எனும் பிரிவிற்கு உரிய மூல முழு முதல் தெய்வம் முருகப் பெருமான். கௌமார முறைப்படி இந்த முருகப் பெருமான் அகச்சந்தானம் என்று அழைக்கப் படுகிறார். இந்த முருகப் பெருமான் தான் யார்? தன்னை வந்து அடையும் மார்க்கங்கள் என்ன என்பதை தானே குருவாக வந்து அறிவிக்கிறார். முருகப்பெருமானே குருவாக வந்து மூல மந்திர உபதேசம் செய்து ஆட்கொள்கிறார். அப்படி யாருக்கெல்லாம் முருகப் பெருமான் உபதேசம் செய்கிறார் என்றால் முதலில் விளையாட்டுப் பிள்ளையாக தனது தந்தை சிவ பெருமானுக்கே உபதேசம் செய்கிறார். அதனால் அவர் தகப்பன் சாமீ என்று அழைக்கப் படுகிறார். தேவர்களிலேயே சிறந்தவர் சிவ பெருமான். தேவ தேவ தேவாதி தேவ மஹாதேவே என்பார்கள் பக்தர்கள். அப்படி சிவ பெருமான் முருகனின் சீடன் ஆனது ஒரு விளையாட்டு. இறைவனை விட குரு மேன்மையானவர் எனும் வகையில் குரு பக்தியை பெருமை படுத்த நடந்த திருவிளையாடல் அது. அதை ஒட்டி ஒரு பரம்பரை கௌமாரத்தில் வந்தது என்று சொல்வதும் பிழையாகாது. 

அதே சமயம் முருகப்பெருமான் அகத்திய முனிவருக்கு உபதேசம் செய்ததாக வரலாறு சொல்கிறது. சித்தர்களில் சிறந்தவர் அகத்தியர். முருகப் பெருமானிடம் உபதேசம் பெற்று தமிழைக் கற்று அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் வகுத்து தமிழைப் பரப்பினார் என்பதும் ஒரு வரலாறு. ஆனால் அகத்தியர் சித்தராக இருந்ததால் அவரை ஒட்டி ஒரு கௌமாரப் பரம்பரை வந்தது என்றாலும் அதுவும் சரிதான். சரி அகத்தியருக்கு அடுத்து சாதாரண மனிதராகப் பிறந்து இளமை வேகத்தில் பல தவறுகள் செய்து வாழவே பிடிக்காமல் திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறி உயிர் விடத் துணிந்தவரை தடுத்தாட்கொண்டு தக்கதோர் உபதேசம் சும்மா இரு என்று சொல்லி பின் என் மீது திருப்புகழ் பாடு என்று தானே முத்து என முதல் அடி கொடுத்துப் பாட வைத்துக் கேட்டு மகிழ்ந்தாரே முருகப்பெருமான். ஆம் அருணகிரிநாதருக்கு முருகனே குருவாக வந்து உபதேசம் செய்தாரே இது ஒரு குரு பரம்பரைக்கு வித்தாக கௌமார வித்தாக அமையும் எனக் கருதுதல் தவறில்லை எனலாம். 

                                                       வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

அருணகிரி நாதரைப் போலவே அருணகிரி நாதரின் மறு அவதாரமாகக் கருதப்படுபவர் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள். பறவைகளில் சரபம் எனும் ஒரு பறவை இருக்கின்றது. அது சிறகடித்து எப்படி பறக்குமுமோ அப்படி சந்தத் தமிழ் பாடக் கூடியவர் தண்டபாணி சுவாமிகள். அதனால் அவருக்கு வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் என்ற பெயர் வழ்க்கமாக ஆயிற்று. திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே இருந்து விழுந்த அருணகிரியை ஆட்கொண்டது போலவே திருமலையில் இருந்து விழுந்த தண்டபாணி சுவாமிகளையும் முருகன் ஆட்கொண்டார். இந்த தண்டபாணிசுவாமிகள் முதலாக குரு பரம்பரை தொடங்குகிறது. முருகனிடம் இருந்து  நேரடியாக உபதேசம் பெற்றவர் அருணகிரிநாதர் அவர் போலவே தண்டபாணி சுவாமிகள் அதுமட்டுமில்லாமல் இவர் அருணகிரிநாதரின் மறு அம்சம்.இப்படி இருந்த குரு நாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம்  கோயம்புத்தூரில் இருந்து கொங்கு வெள்ளாளர் இனத்தில் காடை குலத்தில் பிறந்த ராமகுட்டிக் கவுண்டர் என்பவர் பழநியில் உபதேசம் பெற்று முருகப் பெருமானின் பரம்பரையில் இணைந்தார். 


உபதேசம் கொடுத்த வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் ராமகுட்டிக் கவுண்டரிடம் ஒரு ஆறுமுக ருத்திராட்சம் கொடுத்து நீ சென்று கௌமாரத்தைப் பரப்பி கந்தனுக்குச் சேவை செய் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அதன் பின்பு ராமகுட்டிக் கவுண்டர் ஜப தபங்கள் செய்து வருகின்ற மக்களது குறைகளையும் தீர்த்து வெள்ளிக்கிழைமை தோறும் பலபேர் கூடி இருக்கும் சபையில் சொற்பொழிவுகள் கொடுத்து குருவின் பெருமையையும் திருவின் பெருமையையும் திறப்பட செய்து வரும் சமயம் அங்கு கூடி இருக்கும் சபைக்கு கௌமார சபை எனப்பெயர் பதிவு செய்து பின்பு கௌமார மடமாக்கி சேவை புரிந்து வந்த சமயம் ராமானந்த சுவாமிகள் எனப் பெயர் விளங்கினார் தனது வாழ்நாளிலேயே தவத்திரு கந்தசாமி சுவாமிகளுக்கு உபதேசம் செய்து அடுத்த ஆதீனமாக்கி, பின்பு தவத்திரு சுந்தர சுவாமிகள் உபதேசம் பெற்று அடுத்த ஆதீனமாகி, அதன் பின்பு சுந்தர சுவாமிகளிடம் உபதேசம் பெற்று இப்போது அரும் பெரும் ஆன்மீகப் பணிகளோடு கல்விப்பணிகளையும் செய்து வரும் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் அருளாட்சி பெற்று தற்போதைய ஆதீனமாக அருளுடன் வீற்று அருளாட்சி புரிந்து வருகின்றார்கள்.


தமது 24ம் வயதில் முருகப் பெருமான் குரு பரம்பரையில் ஒரு குருவாகவும் ஆதீனமாகவும் இருந்து அருளாட்சி ஏற்றவர்தான் நமது தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள். இதுதான் குரு பரம்பரை. தற்போது எங்கு பார்த்தாலும் குரு குரு என்று சொல்லிக் கொள்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். திருமூலர் சொல்வது போல குருடும் குருடும் குருட்டாட்டமாடி குருடும் குருடும் குழி விழுமாறே என்பது போல் ஏனோதானோ என்று ஏதோ ஒருவரிடம் சென்று உபதேசம் பெறக்கூடாது. ஒரு குரு இருக்கிறார் என்றால் அவர் பரம்பரை என்ன என்பதைத் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.

சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகளுடன் ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள்.

ஏவம் பரம்பரா ப்ராப்தம் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா தனது கீதையில். எனவே முருக உபாசகர்களுக்கு என உரிய இடமாக உரிய பரம்பரையாகத் திகழ்ந்து வரும் ஒரு இடம் எது என்றால் அது கௌமார மடம் மட்டுமே. எனக்கு 13 வயதிலேயே தீட்சை கொடுத்து மந்திர உபதேசம் செய்த தவத்திரு வேலுச்சாமி சுவாமிகள் தானாகவே இறை உபதேசம் பெற்றவர். அதுபோல் இருப்பவர்களும் உண்டு. ஆனால் போலி குருமார்களிடம் எச்சரிக்கை எப்போதும் தேவை. அதேபோல் போலி சீடர்களிடமும் எச்சரிக்கை தேவை. அந்த குரு பரம்பரையை ஒரு படம் மூலம் விளக்குகிறேன்.

முருகப் பெருமான் (ஆதி குரு)



சிவ பெருமான்          அகத்தியர்        அருணகிரிநாதர்


தண்டபாணிசுவாமிகள்

                                                 ராமானந்த சுவாமிகள்
        
                                                 கந்தசாமி சுவாமிகள்


                                                   சுந்தர சுவாமிகள்


                                                 குமரகுருபர சுவாமிகள்

இப்போது சற்றுத் தலைகீழாகச் சிந்தித்துப் பார்ப்போம். குமரகுருபர சுவாமிகளைத்தரிசனம் செய்தால் சுந்தர சுவாமிகள் பின் கந்தசாமி சுவாமிகள் பின் ராமானந்த சுவாமிகள் பின் தண்டபாணி சுவாமிகள் பின் அருணகிரிநாதர் பின் சாட்சாத் முருகப் பெருமானைத் தரிசனம் செய்த்தற்கு இணையல்லவா. இது எப்படி இருக்கிறது என யோசித்துப் பார்க்கும்போது எனது கண்கள் கண்ணீர் அருவியாகி எனது குரல் தழுதழுத்து உடல் சிலிர்த்து என் உள்ளம் உவகை கொண்டு குரு நாதா ஞானஸ்கந்தா அன்று அலறித் துடித்தேன். காரணம் இது சாதாரண விஷயமல்ல. குருவே சிவம் இங்கு குருவே முருகன் பின் முருகனே குரு பின் குருவே முருகன். ஆஹா என்னே பெருமை... என்னே அருமை... இந்த அருமை பெருமைகள் தெரியாமல் மீனாட்சி சொன்னாள், நாடியில் வந்தது,2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்டது, எனது பூர்வ ஜென்மம் என உரைக்கப்பட்டது மேலும் இப்போது இருக்கும் குமர குருபர சுவாமிகளைத் தரிசனம் செய்து உபதேசம் பெற்றுக்கொள் என வந்தது என்பதையெல்லாம் வைத்து சரி செல்வோமே எனும் சாதாரண எண்ணத்திலேயே அங்கு சென்றேன். அங்கு ஒரு அதிசயம் காத்திருந்தது...அது என்ன? 

(அதிசயம் தொடரும்...)

4 கருத்துகள்:

  1. இது அனைத்தும் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின் திருவிளையாடல்கள்.
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
    கோவை கௌமார மடம் சிரவை ஆதினத்தின் சீர்த்தி சிறக்கட்டும்

    பதிலளிநீக்கு
  2. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. அருமையாக உள்ளது ஐயா. கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான உடல் ,மன கோளாறுகளால் அவதிப்படுகிறேன். வயது 50 நடக்கிறது. திருமணமாகி குழந்தை இல்லை பல தீய விஷயங்கள் பற்றி மனம் அலைபாய்கிறது.. என்ன செய்வது? எப்படி மனதை வசப்படுத்துவது என்றும் தெரியவில்லை, இனம் புரியாத பயம், பதட்டம், குழப்பம் ,சலிப்பு மொத்தம் நடமாட்டம் இல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளேன்.கடவுள் வழிபாடும் செய்யமுடியவில்லை. எக்காலத்திலும் இறைவன் அருளுக்கு பாத்திரமாக தாங்கள் எனக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். L.பாலசுப்பிரமணியன் (7871367099)ராஜபாளையம் விருதுநகர் மாவட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞானாலயம் பாண்டிச்சேரி அருளும் ரேணுகா தேவி மந்திர தீக்ஷை எடுத்து கொள்ளவும் (online). இதை தொடர்ந்து அகத்தியர் அருளும் ஆத்ம விடுதலை தங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் தங்கள் மும்மலங்கள் கரையும், இறை அருள் கிட்டும், பிறவா பெருநிலை அடையலாம்.

      நீக்கு
    2. ஞானாலயம் பாண்டிச்சேரியில் ஆறுமுக பெருமான் தனது 18 ஆற்றல்களுடன், அகத்தியர் மற்றும் சப்தரிஷிகள், நவநாத சித்தர்கள், மற்றும் பல உயரிய சித்தர்கள் வீற்று இருக்கின்றார்கள்.

      நீக்கு