திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-15

                                                      
  •    முருகப்பெருமான் ஸ்ரீஸ்கந்த உபாசகர் மூலம் உரைத்தது அப்படியே 100% பலித்ததால் அந்த உறவினர் முருக பக்தராக மாறினார். அதன் பலனால் முருகப்பெருமான் மயில் வாகனம் செய்து வைக்குமாறு வேறு ஒரு அருள்வாக்கு சொல்லும் அம்மையார் மூலம் உரைக்க அப்படியே அவர் மயில் செய்து வைக்க ஆயத்தமானார். ஆனால் லிங்க வடிவில் அருவமாக முருகப்பெருமான் இருந்ததால் முருகனுக்கு என ஒரு உருவமும் செய்தால் நலம் என்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் விரும்பினார்கள். குருவின் விரும்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று மயிலுடன் பால முருகன் விக்கிரகமும் ஒரு பலி பீடமும் செய்து ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களே அதைப் பிரதிஷ்டை செய்து தாமே அனைத்துவிதமான வேள்விகளையும் வடமொழிப்படி செய்து குடமுழுக்கை நடத்தினார்கள். ஒரு சிறு மேடையில் சிறியதாக ஒரு கருவறை மட்டும் கட்டப்பட்டு பால முருகனை ஸ்தாபித்து, அதன் எதிரே மயில் பீடமும், பலி பீடமும் ஸ்தாபித்து, மூங்கிலால் ஆன ஒரு கொடி மரமும் நட்டு வைத்து சிறப்பாக ஸ்ரீஸ்கந்த உபாசகர் பூஜை செய்து வந்தார்கள்.
                         
  •         முருகனுக்கு மயில் வாகனம் செய்தால் உனக்கு ஒரு வீடு கட்டும் யோகம் வரும் என்று அந்த உறவினருக்கு வாக்கு வந்ததால் மயில் வைத்து பாலமுருகனுக்கு குடமுழுக்கு கண்ட உடனேயே அந்த உறவினர் ஒரு மாடி வீடு கட்டும் பாக்கியம் பெற்றார். எப்போதே இந்த பூமியை விட்டு இவர்கள் சென்றிருக்க வேண்டும் ஆனால் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் குருவருளாலும், ஞானஸ்கந்த மூர்த்தியின் திருவருளாலும் அவர்கள் இங்கு ஒரு வீடு கட்டினார்கள் என்று பலர் பேசி மகிழ்ந்தார்கள்.
                              
  •         இவ்விதம் பால முருகப்பெருமானும் மயிலும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தது.ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி விவசாய பூமியின் நடுவில் சின்ன கருவறையில் சிறிய மூர்த்தியாக இருந்தாலும் அவர் கீர்த்தியில் சிறந்து விளங்கி மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
  •          ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் ஒரு பெண்மணி தனது மகள் மற்றும் மருமகனின் ஜாதகத்தைக் காண்பித்து ஆசியை வேண்டி நின்றார். அந்த இருவர் ஜாதகத்தைப் பார்த்து விட்டு சிறிது நேரம் தியானம் செய்ய ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் உள் மனதில் முருகப்பெருமான் ஒரு அதிர்ச்சி தகவலைத்தந்தார். என்ன அது? அந்த அம்மையாரின் பெண் விரைவில் இறந்துவிடும் என்பதாகும். ஸ்கந்த உபாசகருக்கு அப்போது 22 வயதே என்பதால் அவரும் சற்று தடுமாறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். இதை எப்படி உரைப்பது என யோசித்த ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தனது ஜோதிட அறிவைப் பயன்படுத்தி அனைத்துவிதமான கணக்குகளையும் போட்டுப் பார்த்தும் பலன் மாற்றம் இல்லை. சரி என்று மறைமுகமாக நடக்கும் நிகழ்ச்சிகளை உரைத்தார். அந்த அம்மையாரும் புரிந்து கொண்டார். சரியாக ஒரு மாதம் கழித்து ஒரு அமாவாஸை தினத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் உரைத்தது போலவே அந்த அம்மையின் மகள் இறந்துவிட்டார். இந்த சம்பவம் ஸ்ரீஸ்கந்த உபாசகரையும் சற்று பாதிப்படையவே செய்தது. இவர் சொன்னது அப்படியே நடந்தது என்று அந்த பெண்மணி அனைவரிடமும் கூறினார். இதில் பெருமை ஏதுமில்லை என நினைத்த ஸ்ரீஸ்கந்த உபாச்கர் அவர்கள் அதுமுதல் சில மாதங்கள் யாருக்கும் வாக்கு உரைப்பதை விரும்பவில்லை. யார் கேட்டாலும் அடுத்த மாதம் பார்க்கலாம் என்று கூறி தனது படிப்பைக் கவனிக்க நேரம் இல்லை என்றும் கூறி வந்தார்கள்.
  •   ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் மனம் இளைமை காலம் முதலே இறையருளை நாடினாலும் தான் படித்த கல்வியில் ஒரு தாளில் கூட தோல்வி என்பதை அடையவே இல்லை. வெற்றி வேலன் அருளால் கல்வியை சிறப்பாகவே முடித்து அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நல்ல தேர்ச்சியைப் பெற்று ஜடக் கல்வியையும் பெற்றார்கள் என்பதே உண்மை. தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக