வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-36

       
 சூரியனிடம் இருந்து வருகின்ற ஒளிக்கதிர்களைக் கூர்ந்து நோக்கினால் அது ஓம் எனும் சப்தத்தோடு வெளிவந்து கொண்டிருப்பதைக் காண முடிகின்றது என்றும், இந்த பூமி சுற்றும்போது ஓம்.... ஓம்.... ஓம்... எனும் பிரணவத்தின் ஒலியோடு சுற்றி வருகின்றது என்றும்
                           
 திருநள்ளாற்றின் பகுதிகளில் சனிக் கிரகத்தின் நீல நிறக் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் சில விநாடிகள் செயற்கைக்கோள்கள் ஸ்தம்பிக்கின்றது என்றும் பழனி மலை மீது செவ்வாய் கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது என்றும், விண்மீண்களின் கீச்சுக் குரல்களைக் கேட்க முடியும் என்றும் இன்றைய அறிவியல் ஆய்வு செய்து பார்த்துவிட்டுக் கூறுகின்றது. நாசா சொன்னால்தான் நம்புவேன் என்பவர்கள் இதையெல்லாம் சொன்னது நாசாதான் என்பதால் சற்று மெய்ஞானத்தின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. ஆன்மீகம் என்றாலே மூட நம்பிக்கைகளை வளர்ப்பது எனும் ஒரு தவறான கொள்கை மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்ட இந்த நேரத்தில் இந்த செய்திகளெல்லாம் ஆன்மிகம் என்பது எல்லாவற்றிற்கும் அப்பால் பட்டது அது மனிதனுக்கு அவசியத் தேவை என்பதை உணரவைக்க ஒரு வாய்ப்பை வழ்ங்கியுள்ளது எனலாம். இதைத் தான் அருணகிரிநாத சுவாமிகள் ஓரெழுத்திக் ஆறெழுத்தை ஓதி வைத்த பெருமாளே என்று பாடியுள்ளார். பிரணவத்தின் இரகசியம் இன்னும் பல கோடிகள் இருந்தாலும் இப்போது நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓம் கார ஒலியின் இரகசியம் நிச்சயம் அந்த பிரவணத்தின் பொருளில் ஒரு சிறு துளிதான் என்பது திண்ணமாகும். 
வேதங்களே மலையாகி நின்று இருக்க்கூடிய திருக்கழுக்குன்றத்திலும்,
                             
வள்ளிமலையில் உள்ள தினைப்புனத்திலும் விரும்பி இருக்கும் பேரழகு உடையவனே, 
                             
வேடர் மகளாகிய வேடுவச்சி எனப்படும் வள்ளியின் பாதத் தாமரையின் மீது வெட்சி மாலை அணிந்த உன் திருமுடி படும்படியாக காதலித்து,
                                                      
   ஆட்கொள்ளும் வேளை இது என்று சமயத்தில் தினைப்புனத்துக்குள் புகுந்த பன்னிரு தோள்களை உடைய நண்பனே
                                     
மிகுந்த ஆர்வத்துடன் நான் உன்னை அன்புடன் வழிபாடு செய்ய உரிய அறிவை உபதேச மொழியாகச் சொல்லி அருள்வாயாக. வெகுண்டு வந்த வீரபத்திரரின் துணைவியான காளி வெட்கம் அடையும்படி தமது கிரீடத்தை வானில் முட்டும்படி உயரமாக வீசி விட்டு ஊர்த்துவ தாண்டவம் ஆடிய பாதத்தை உடைய பரமசிவன், 
                         
பக்தியுள்ள தேவர்களுக்கு கற்பித்த நாதராகிய சிவபெருமான், உன்னிடம் பாடம் கேட்கவும், சிவனால் ஓதுவிக்கப்பட்ட பிரமன் வெட்கமடையவும்,  ஓரெழுத்தாகிய ஒப்பற்ற ஓம்கார ப்ரணவ மந்திரத்தில், ஆறெழுத்தை விளக்கி அந்தச் சிவனுக்கே உபதேசித்த பெருமாளே.
                              
எனவே இந்த சிந்தனையோடு இன்றைய திருப்புகழைப் பாராயணம் செய்யுங்கள்.
திருக்கழுக்குன்றம் திருப்புகழ்
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு  மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை  முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி  புயநேய
     ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி  புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க மகுடாமா
     காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி  யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த முநிநாண
     ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த  பெருமாளே.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
                     ஓம்ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                         சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக