வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-25

                                                   சிவன்மலை ஆண்டவர்
இன்றைய நாகரீகமான உலகில் காம வயப்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கி மகிழ்கின்றது கலியுகம். மண வாழ்க்கையில் முறையான காமத்தை மறுக்காத தர்ம சாத்திரங்கள் முறையற்ற காமத்தை பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக வைத்திருக்கின்றது. அருணகிரிநாத சுவாமிகள் தனது இள வயதில் தனது குரு நாதனாகிய முருகப்பெருமானை உணராமல் பெண்களின் காம வெறியில் விதியின் பயனால் உழன்றதால் இந்த சிவன் மலைத் திருப்புகழில் இப்படிப் பாடுகின்றார்.
 நறுமணப் பொருட்களாகிய கஸ்தூரிஅகில்கஸ்தூரி மஞ்சள்நிறையச் சந்தனம்,பன்னீர், பச்சைக் கற்பூரம், கலவைச் சாந்து இவைகளை அணிந்துள்ளதாய், அழகிய ரத்தினங்களுடன் சேர்க்கப்பட்டுக் கட்டப்பட்ட முத்து மாலையும் நெருங்கியதாய், கொடிய கலகங்களை விளைவிப்பதாய், ரவிக்கையுடன் முட்டி நிமிர்வதாய் உள்ள மார்பகங்களை உடைய விலைமாதர்களின் பூங்கொத்திலிருந்து வடிகின்ற தேன் என்று சொல்லும்படி உள்ள வாயிதழ் ஊறலை உண்டு, அந்த மாதர்களுடன் கொல்லன் சேரியில் உள்ள மெழுகு போல் உருகி அழியாமல் என்று பாடுகின்றார். மெழுகு உருகும் தன்மை கொண்டது. 
                                                           
அது கொல்லன் உலையில் உள்ள நெருப்பின் சூட்டால் உருகி தனது வாழ் நாளை வீணடித்துக் கொள்வது போல் காமமாகிய நெருப்பில் உருகி நமது வாழ் நாளை வீணடித்துக் கொள்ளக்கூடாது என்கின்றார் அருணகிரிநாத சுவாமிகள். சரி அப்படியே காலத்தை வீணடித்து நமது வாழ்வைக் கெடுத்துக் கொண்டால் என்ன ஆகும். அடுத்த வரியில் சொல்கிறார் பாருங்கள்.

கொக்குப் போல வெண்ணிறமாக முடிகள் நரைக்கும் முன்புஇந்த உடலில் இளம் பருவம் இருக்கும் போதே முயற்சி செய்து, உனக்குப் பணிவிடைகளை அடியேனாகிய நான் செய்யும் வழியை எனக்கு அருள் செய்யக் கூடாதோ?
                                                           
வயது ஏற ஏற முடி நரைக்க ஆரம்பித்துவிடும். முடி நரைப்பது, பல் விழுவது என்பது எமன் விடுகின்ற வக்கீல் நோட்டீஸ் என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள் திருமுருக வாரியார் சுவாமிகள் அவர்கள். அப்படி வயதாகி முடி நரைத்த பின்னே ஆன்மீகம் வந்தால் போதும் என்கிறது ஒரு கூட்டம். ஆனால் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி. ஒரு மனிதன் ஞானம் பெற சரியான வயது ஐந்து என்கிறது பாகவதம்.
                                                        
 ஐந்திலேயே ஞானம் பெற்று பழநியில் நின்றவர் நமது முருகபெருமான்.
                                                      
 எனவே இளவயதில் இல்லாத எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு வயது முதிர்ந்த பின்னே கடவுளுக்குக் கண்ணில்லை என்று சொன்னால் என்ன செய்வது? சற்று சிந்தித்துப் பாருங்கள். எனவே வயது இருக்கும் போதே இளைமை காலத்திலேயே குரு சேவை செய்யப் பழகிக் கொண்டால் அடுத்த ஜென்மத்திலும் நமக்கு குரு சேவை செய்யும் பாக்கியம் கிட்டும். ஏன் குரு சேவை? அதை நான் சொல்லவில்லை அருணகிரி நாத சுவாமிகள் சொல்கின்றார். என்ன வென்று. தொடர்ந்து படியுங்கள். இதோ அடுத்த வரியின் விளக்கம்.
 அந்தத் தூர பூமியிலிருந்தே தரிசனத்தை நிச்சயமாகத் தருவதான பொன் நெடு மதிலை அடையாளமாகக் கொண்ட வயலூர் என்ற திருப்பதியில் வீற்றிருக்கும் வேலனே, 
                                               
                                                                              வயலூர்
இது என்ன அதிசயம் என்று உலகோர் சொல்லும்படி, தன் வசம் இழந்த மகிழ்ச்சியில் விரகத்தால் உள்ளம் சோர்வு அடைந்த பரவை நாச்சியார் மீது கண்ணும் கருத்துமாய், பரவையை விட்டுப் பிரிந்திருப்பதால் ஏற்பட்ட கவலை நீங்க, இந்தப் பூமியில் அடியார்க்கு உரிய பத்து இலக்கணங்களும் பொருந்திய சுந்தரர் பரவிப் போற்ற, வேகமாகப் போய் உண்மையான தூதுவராக, உள்ளம் தழைக்க அருளைப் பொழிந்தவரும், உற்ற துணையாக இருப்பவருமான சிவபெருமானுக்கு, 
                                          
                                                 சுந்தரரும் பரவை நாச்சியாரும்
புருஷ தத்துவம் மிக நிறைந்த, மேலான குருவே,
                                            
சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா
 இந்த வரிகளில் முருகப்பெருமான் சிவனுக்கு செய்த உபதேசத்தை கௌமார நெறியாகிய குரு நெறியை நினைவு கூர்கின்றார். பரவை நாச்சியாரிடம் சுந்தரருக்காக தூது சென்ற சிவனுக்கு உபதேசம் செய்த முருகா  நான் உனக்கு சேவை செய்து இந்த காம நோயில் இருந்து விடுதலையாகும் வரத்தை அருள்வாயாக என்று வேண்டுகிறார் அருணகிரிநாத சுவாமிகள்.
                                                       
                                         இளமை காலத்திலேயே குரு சேவை செய்தல்
 இதை பட்டாலியூர் என்ற ஊரில் உள்ள சிவன் மலை முருகனிடம் வேண்டுகின்றார். அடுத்த வரியைப் பாருங்கள்.                                          பசுமையான ஓலைகளைக் கொண்டு விளங்கும் பனை மரங்கள் வளர்ந்துள்ள இருண்ட சோலைகளில் மயில்கள் நடனம் புரியும் பட்டாலியூர் (சிவன் மலை) என்னும் நகரில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே. இதோ அந்த திருப்புகழ்.
சிவன் மலை திருப்புகழ்
கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல
     கற்பூர களப மணிவன ...... மணிசேரக்
 கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவன
     கச்சோடு பொருது நிமிர்வன ...... தனமாதர்
 கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு
     கொற்சேரி யுலையில் மெழுகென ...... வுருகாமே
 கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல்
     குற்றேவல் அடிமை செயும்வகை ...... யருளாதோ
 அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி
     லச்சான வயலி நகரியி ...... லுறைவேலா
 அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ
     டக்காகி விரக பரிபவ ...... மறவேபார்
 பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு
     பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா
 பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
     பட்டாலி மருவு மமரர்கள் ...... பெருமாளே.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக