ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-27

     
                                                                குவளை மலர்
மலரைத்தேடி தேன் எடுக்க வண்டுகள் மகிழ்ச்சியாக  நின்று ரீங்காரம் செய்யும் குளிர்ச்சி பொருந்திய குவளை மலரைத் தனது கூந்தலில் அணிந்து கொண்டு, குளிர்ச்சியான முத்து மாலை, தங்கத்தால் ஆன  நகை மாலை ஆகியவற்றை தம்மீது அணிந்துள்ள, வலிமை பொருந்திய குடம் போன்ற மார்பகங்கள் மூலமாகவும், விஷம் கொண்ட செயலைப் பொருந்தி, நீயே அடைக்கலம் என்று சொல்லி வந்து நான் நம்பும்படி நடிக்கும் அத்தகைய மங்கையுடன் ஆசை கொண்டு  நட்பு வைக்கின்ற என்னைக் காத்தருள முருகா நீ இந்த நாளே இப்போதே உடனடியாக, தீய வினைகளை அழித்து, நன்மை தரும் மயிலில்பொருந்தி வந்தருள வேண்டும்.

தாமரை மலர், கொன்றை மலர், தும்பை மலர், மகிழம்பூ இவைகள் நிறைந்து நறுமணம் கமழும் திருவடியை உடையவனே,
                                                
                                                                      தாமரை மலர்
                                       
                                                                    கொன்றை மலர்
                                                 
                                                                               தும்பை மலர்
                                                 
                                                                              மகிழம் மலர்
வாடி அழுகிய பிணங்களைத் தின்னும் பேய், நாய், நரி,பருந்து முதலியவற்றின் கூட்டங்கள் காணும்படி சண்டை செய்யும் ஒளி வீசும் வேலை உடையவனே.
                                                            
பண் நிறைந்த சொல்லை அமைந்துள்ள எங்கள் குறப்பெண்ணாகிய வள்ளியின் வலிய மார்பை அணைந்த அழகிய மார்பனே
                                                            
செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் சிறப்புடன் மிளிரும் சிங்கை எனப்படும் காங்கேயம் என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
                                                     
                                                                      செண்பக மலர்
என்று காங்கேயத்தின் மீது நமது கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத் திருப்புகழ்.
காங்கேயம் திருப்புகழ்
சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற
     தண்குவளை யுந்து ...... குழலாலுந்
தண்டரள தங்க மங்கமணி கின்ற
     சண்டவித கும்ப ...... கிரியாலும்
நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து
     நம்பிவிட நங்கை ...... யுடனாசை
நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று
     நன்றுமயில் துன்றி ...... வரவேணும்
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
     கந்திகமழ் கின்ற ...... கழலோனே
கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
     கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா
செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
     திண்குயம ணைந்த ...... திருமார்பா
செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த

     சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக