வியாழன், 4 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-24


                                                                  சிவன்மலை
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில். இந்தப்பகுதி மக்களின் குலதெய்வமாக இந்த சிவன்மலை முருகன் போற்றப்படுகிறார். இந்த முருகனின் சிறப்பு என்னவென்றால் தன்னை வணங்கும் பக்தர் யாராவது ஒருவரின் கனவில் வந்து ஏதாவது ஒரு பொருளை சூட்சுமமாக சொல்லிவிட்டு மறைந்துவிடுவார். முருகப்பெருமான்  சொன்ன பொருளை  கோவிலின் அலுவலகத்தில் சென்று சொல்லவேண்டும். 
                                                 
அவர்கள் சுவாமியிடம் உத்தரவு கேட்டு பூக்கட்டி போட்டு பார்ப்பார்கள். சொன்னவருக்கு சாதகமாக உத்தரவு வந்தால் அவர் சொன்ன பொருளை அங்குள்ள உத்தரவு பெட்டி என்னும் கண்ணாடி பெட்டியில் வைத்து தினமும் பூஜை நடக்கும்.  சுனாமி வந்தபோது தண்ணீரை வைத்து பூஜை நடந்தது.
                                      
மஞ்சள் விலை ஏறிய சமயத்தில் மஞ்சளை வைத்து பூஜை நடந்தது.  பாலை வைத்து பூஜை நடந்த போது பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. 
                                                   
இப்போது இரும்பை வைத்துப் பூஜை ஆகின்றது. இப்படியாக வைத்து பூஜை செய்வதால் குறிப்பிட்ட பொருட்கள் அழிந்து போவது, பொருட்கள் விலையேறுவது, சில விஷயங்களால் மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் போன்றவற்றை முன்பே உணர்த்தி உலக மக்களை பெருமளவு துயரங்களில் இருந்து காக்கிறார் என்பது நம்பிக்கை. அடுத்த பொருள் பக்தரின் கனவில் வந்து உணர்த்தும் வரை முன்பு இருந்த பொருளே தொடர்ந்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. 

அகத்திய முனிவர், மெய்யான சன்மார்க்க நெறியை உபதேசிக்கும்படி முருக பெருமானிடம் வேண்டினார். அகத்தியரை சிவன்மலைக்கு அழைத்து சென்று இங்கு இருந்த அத்திமரத்தின் கீழ் உபதேசம் செய்து அந்த இடத்திலேயெ நிரந்தரமாக அமர்ந்தார் முருகப் பெருமான். 
                                                    

முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். 
                                       
இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்.என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது. 
                                                     
இப்படி பல பெருமைகளை உடைய காங்கேயத்தில் இருக்கும் சிவன் மலை முருகன் மீது பாடிய திருப்புகழே இன்றைய தினம் ஒரு திருப்புகழ்.
சிவன்மலை திருப்புகழ்
இருகுழை யிடறிக் காது மோதுவ
     பரிமள நளினத் தோடு சீறுவ
          இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர
 எமபடர் படைகெட் டோட நாடுவ
     அமுதுடன் விடமொத் தாளை யீருவ
          ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும்
 உருகிட விரகிற் பார்வை மேவுவ
     பொருளது திருடற் காசை கூறுவ
          யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல்
 உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்
     மயல்தரு கமரிற் போய்வி ழாவகை
          உனதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே
 முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
     மரகத கிரணப் பீலி மாமயில்
          முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே
 முரண்முடி யிரணச் சூலி மாலினி
     சரணெனு மவர்பற் றான சாதகி
          முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம்
 பருகினர் பரமப் போக மோகினி
     அரகர வெனும்வித் தாரி யாமளி
          பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும்
 பறையறை சுடலைக் கோயில் நாயகி
     இறையொடு மிடமிட் டாடு காரணி
          பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே.
 விளக்கம்
 காதிலுள்ள இரண்டு குண்டலங்களையும் மீறி காதுகளை மோதுவன. மணம் மிகுந்த தாமரை மலர்களை சீறிக் கோபிப்பன. நிகர் இல்லாத முந்தை வினைகளையும் தாவி மீள்வன. மிக்க சூரத்தனம் உடைய யமனுடைய தூதர்களாகிய சேனை அஞ்சிப் பின்னடைந்து ஓடும்படி வழி தேடுவன. அமுதமும் விஷமும் கலந்தன போன்று ஆளையே அறுத்துத் தள்ளுவன. ரதியின் கணவனான மன்மதனுடைய காம சாஸ்திர நூலிலிருந்து சிறிதும் பிறழாத வண்ணம் எவரையும் சூழ்வன. முனிவர்களும் காமத்தால் உருகும்படியாக, தந்திரத்துடன் கூடிய பார்வையை உடையன. பொருளைக் கவரும் பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவன. யுக முடிவு தானோ என்று சொல்லும்படி சில சமயம் போர் விளைவிப்பன. வேலாயுதத்தைப் போல உயிரை வதைக்கும் இத்தகைய கண்களை உடைய ஆசை மாதர்களின்  காம மயக்கம் தருகின்ற பெரும் பள்ளத்தில் போய் விழாமல் இருக்கும் பொருட்டு, உனது திருவடியின் நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை என்றொரு நாளாவது கிடைக்குமோ?
  நறு மணம் வீசும் மாலையை அணிந்து, உனக்கு வாகனம் ஆகும்படி விரும்பின பச்சை ஒளி வீசும் தோகையைக் கொண்ட சிறந்த மயிலின் மேல்முற்றின ஒளி கொண்ட சூரியனுடைய ஒளியைப் போல் விளங்கி வயலூரில் வாழும் செல்வமேவலிமை வாய்ந்த முடியை உடைய, போர்க்கு உற்ற சூலாயுதத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள்உனக்கு அடைக்கலம் என்று நிற்கும் அடியார்களுக்கு பற்றாக இருக்கும் குணத்தினள், வேகமாகச் செல்லும் கடினமான பெண்சிங்க வாகனம் உடையவள் கள்ளுணவை உண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகிஅரகர என்று நிரம்ப ஒலி செய்பவள், சியாமளப் பச்சை நிறத்தை உடையவள்சிலம்பு அணிந்த கால்களை உடைய காளி, பேய்கள் நடனமாடும், பறைகள் ஒலிப்பதுமான, சுடு காட்டுக் கோயிலின் தலைவி சிவ பெருமானோடுஅவரது இடப்பாகத்தில் இருந்துகொண்டே, காரணமாக நடனம் செய்பவள்அத்தகைய பைரவியாம் பார்வதி தேவி பெற்றருளியவனும், பட்டாலியூரில்(சிவன்மலையில்)வீற்றிருப்பவனுமான, பெருமாளே.
                                            
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்

கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக