திங்கள், 29 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-41

 தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்
என்பது அப்பர் சுவாமிகள் அருளிய தேவாரமாகும். 
                                   
கயிலைமலையில் தனது கால் பட்டு ஏறிச்சென்று இறைவனைக் காணக் கூடாது என்று கருதிய காரைக்கால் அம்மையார் அவர்கள் தன் தலையாலேயே ஏறிச் சென்றார் என்கின்றது தொண்டர் புராணம். 
அப்படித் தன்னுடைய தலையைக் கொண்டு முருகனைப் பணியாமல் இருக்கும் அடியேன் உலக மக்களின் பாசங்களில் நோக்கம் செலுத்தாமல் இருக்கும்படியாக என்னை வருத்திக் கொள்கின்றேன், முருகப்பெருமானே உனக்கு நிகர் வேறு யார்..... உனக்கு வேறு நிகர் இல்லாத மலர் போன்ற உன்னுடைய திருவடிகளில் என்னைச் சேர்த்து, ஏமாற்றுக்காரனாகிய என்னை ஆண்டருள்வாயாக. நடன கோலம் கொள்கின்ற இறைவனே, அடியவர்கள் மீது பிரியம் வைப்பவனே, யார் உனை அன்போடு நினைக்கின்றார்களோ அவர்களது உள்ளத்தில் நீங்காது நிறைந்து இருப்பவனே, ஜீவன் முக்தர்களுக்கு உனது திருவடிகளை அருள்பவனே திருக்காளத்திப் பெருமானே என்று நமது கௌமார குரு நாதர் அருணகிரி நாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாகும்.
காளஹஸ்தி திருப்புகழ்
சிரத்தா னத்திற் பணியாதே
     செகத்தோர் பற்றைக் குறியாதே
வருத்தா மற்றொப் பிலதான
     மலர்த்தாள் வைத்தெத் தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத்  துவநேசா
     நினைத்தார் சித்தத் துறைவோனே
திருத்தாள் முத்தர்க்  கருள்வோனே
     திருக்கா ளத்திப்  பெருமாளே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்


கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக